திங்கள், ஜூன் 28, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு...அத்தியாயம் ஐம்பது(50)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏 அத்தியாயம் ::ஐம்பத்தொன்று(51)🙏

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்..இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும்  வியாப்பித்து  படர்ந்து  இருக்கின்றது..

ஶ்ரீசாய்  சத்சரித்திரத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்.ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்... நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு..ஶ்ரீசாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்..மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...

மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...

மேலும் இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்...அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

🙏அத்தியாயம் :: ஐம்பத்தொன்று (51)🙏

🙏முன்னுரை.🙏

சத்குருநாதர் சீரடிபாபா மிகுந்த தாய்மையுணர்வுடன்  ஏழ்கடலுக்கு அப்பால் இருக்கின்ற எமது பக்தனை சிட்டுக்குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பதைப் போன்று இழுக்கின்றேன் என்று கூறியதற்கு இணங்க, தன்னை தரிசிக்க வேண்டும் என்று ஆவல் கொண்ட  காகா சாஹேப் தீஷித்தை தம்மிடம் வரவழைக்க, எவ்வாறு  பாபா ஷாமாவை அனுப்பி  சீரடிக்கு  அழைத்து வரும்படிச் செய்து, ஆசியையும் அனுக்கிரகத்தையும் வழங்கினார் என்பதன் அனுபவ விளக்கவுரை...

ஞானிகள் ஒருவருக்கொருவர் சகோதரப் பாசத்துடன் இருக்கின்றார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டும் விதமாக,ஶ்ரீவாசு தேவானந்த் சரஸ்வதி என்ற தேம்பே சுவாமி மிகுந்த அன்புடன் சீரடிக்குச் செல்லவிருந்த ஶ்ரீ புண்டலிக்ராவ் என்பவரிடம் ,  எனது வணக்கங்களுடன் இந்தத் தேங்காயை சாயீயிடம் சமர்ப்பித்து விடுங்கள் என்று கூறியதை மறந்தக் காரணத்தால், பாபாவைக் கண்டவுடன் மிகுந்த  அச்சத்துடன் புண்டலிக்ராவ்  மன்னிப்புக் கோரியதற்கு , பகவான்  அவரை ஆசிர்வதித்து அளித்த உபதேசம் என்ன என்பதன் அனுபவ விளக்கவுரை...

சத்குருநாதர் சீரடி பாபா  தன்னுடைய எங்கும் நிறைந்த பேரறிவால், இன்று எனது தர்பாரைச் சேர்ந்தவர்கள் வருகின்றார்கள் என்று பாலாராம் துரந்தர் சகோதரர்களை முன்னரே  சுட்டிக்காண்பித்து, பாபா  மிகுந்த  மகிழ்ச்சியுடன் அவர்களை  ஆசிர்வதித்து, எவ்வாறு   ஆஸ்துமாவினால்  பாதிக்கப்பட்ட  பாலாராமைக் குணப்படுத்தினார் என்பதன் அனுபவ விளக்கவுரை....

மேற்க்கண்ட தலைப்புக்களைப்  பற்றிய  விளக்கவுரைகளை  ஒவ்வொன்றாக இங்கு கீழே காண்போம்..

🔥முக்கியக் குறிப்பு:🔥 

ஶ்ரீசாய் சத்சரித்திரம் என்ற புனித வேத  மூலநூலில் ஐம்பதாவது அத்தியாயத்தின் மையப்பொருளானது,  39-ஆம் அத்தியாயத்தில் உள்ள அதே மையப் பொருளைப் பற்றியது... ஆதலால் ஐம்பதாவது அத்தியாயத்தை முப்பத்தொன்பது அத்தியாயத்தில்  இணைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இங்கு  51-வது அத்தியாயத்தின் விளக்கவுரை இங்கே... இந்த அத்தியாயம் காகா சாஹேப் தீஷித், ஸ்ரீ தேம்பே சுவாமி, பாலாராம் துரந்தர் ஆகியோரின் அனுபவ  நிகழ்வை  எடுத்துக் கூறுகின்றது. இந்த நிகழ்வைப் பற்றி இங்கே காணலாம்..

🔥சத்குருநாதர் சீரடிபாபா, தான் மிகுந்த தாய்மையுணர்வுடன்  ஏழ்கடலுக்கு அப்பால் இருக்கின்ற எமது பக்தனை சிட்டுக்குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பதைப் போன்று இழுக்கின்றேன் என்று கூறியதற்கு இணங்க, தன்னை தரிசிக்க வேண்டும் என்று ஆவல் கொண்ட  காகா சாஹேப் தீஷித்தை தம்மிடம் வரவழைக்க , எவ்வாறு  பாபா ஷாமாவை அனுப்பி  சீரடிக்கு  அழைத்து வரும்படிச் செய்து, ஆசியையும் அனுக்கிரகத்தையும் வழங்கினார் என்பதன் அனுபவ விளக்கவுரை...🔥

பக்தர்களின் மூலாதாரமும், சத்குருவும், கீதையை விளக்குபவரும், நமக்கு எல்லா ஆற்றல்களையும் கொடுப்பவருமான சாயீக்கு ஜெயம் உண்டாகட்டும். ஓ...! சாயீ, பூரண மங்களத்தின் பிறப்பிடமானவரே, சத்தியத்தின் பிறப்பிடமானவரே. எங்களுக்கு அனுகூலம் செய்து ஆசீர்வதியுங்கள். மலயகிரியில் வளரும் சந்தன மரங்கள் உஷ்ணத்தைப் போக்குகின்றன... மேகங்கள் மழைநீரைப் பொழிந்து மக்களைக் குளிர்வித்து புத்துணர்வூட்டுகின்றன...வசந்தகாலத்தில் மலர்கள் மலர்ந்து, அவைகளால் நாம் கடவுளை வழிபட வகை செய்கின்றன..அது போலவே சாயீபாபாவின் புனித வேதமான ஶ்ரீசாய் சத்சரித்திரமும், அற்புத அனுபவங்களும், உபதேச அருள்மொழிகளும், பல்வேறு உவமானக் கதைகளும் பயில்வோருக்குச் சாந்தியையும், சௌகரியத்தையும் அளிக்க முன்வருகின்றன.. பாபாவின் அனைத்து உபதேச அருளுரைகளை  எடுத்துக் கூறுவோர், அதைக் கேட்போர் இருபாலரும் பாபாவின்   ஆசியைப் பெறுகின்றனர். மேலும் முன்னவர்களின் வாக்கும், பின்னவர்களின் காதுகளும் ஆசீர்வதிக்கப்பட்டுப் புனிதம் அடைகின்றன...

ஆகவே நூற்றுக் கணக்கான பயிற்சிகளையும், செயல்முறைகளையும்,  வேத சாஸ்திரங்களைக் கடைப்பிடித்தாலும்,  ஒரு சத்குரு அவர்தம் அருளால் தம் பக்தர்களை  ஆசீர்வதித்தாலன்றி நாம் ஆன்மிக இலட்சியத்தை அடையமுடியாது.. இந்த வாக்கிற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் கதையினைக்  கேளுங்கள்...காகா சாஹேப் தீஷித் (1864 - 1926) என்ற பக்தரின் அனுபவ நிகழ்வைப்பற்றி இங்கே காண்போம்..

ஹரி சீதாராம் என்னும் காகா சாஹேப் தீஷித் என்ற பக்தர், 1864-ஆம் ஆண்டில்  வத்நாகர நகர், காண்ட்வாவில் (மத்திய மாகாணம்) பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்...அவர் ஆரம்பக் கல்வி காண்ட்வா, ஹிங்கான்காட் என்னும் ஊர்களிலும், நடுத்தரக் கல்வி நாக்பூரிலும் பயின்றார்...மேற்படிப்புக்காக பம்பாய் சென்று  வில்ஸன் கல்லூரியில் முதலிலும், பின்னர் எல்பின்ஸ்டன் கல்லூரியிலும் பயின்றார்..1883-ஆம் ஆண்டில்  பட்டம் பெற்ற பிறகு, அவர் L.L.B.யில் வக்கீல் தேர்விலும் தேர்ச்சிப் பெற்று, அரசு தரப்பு வக்கீல்களின் லிட்டில்  என்ற நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு, சிறிது காலத்திற்குப்பின் தாமே சொந்தமாக வழக்குரை அறிஞர்கள் நிறுவனத்தைத் தொடங்கினார்..

1909-ஆம் ஆண்டுக்கு முன்னர், சாயீபாபாவின் உயரியத் தன்மைகளையும், மகிமைகளையும்  பற்றி  காகா சாஹேப் தீஷித்துக்குத் தெரியாமல் இருந்தது..ஆனால் பகவானிடம் சென்று சரணாகதி அடைந்தப் பிறகு, அவர் பாபாவின் ஒரு பெரும் பக்தராக ஆனார்.. லோனாவாலாவில் தங்கியிருந்தபோது தனது பழைய நண்பரான நானா சாஹேப் சாந்தோர்கரைச் சந்திக்க நேர்ந்தது..பல விஷயங்களைப் பற்றிப் பேசுவதில் இருவரும் சிறிதுநேரத்தைச் செலவழித்தனர்..காகா சாஹேப் தீஷித்,  தாம் லண்டனில் ஒரு முக்கியப் பயிற்சியை மேற்க்கொள்ளும் போது, எவ்வாறு தனக்கு விபத்து நேரிட்டு தனது பாதம் நழுவிக் காயமடைந்தார் என்பதனை நானாசாஹேப்பிற்கு  விளக்கினார்... நூற்றுக்கணக்கான  சிகிச்சைகள் செய்தும் எதுவும் அவருக்குப் பலனை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

நானா சாஹேப் அவரிடம் அவர்தம் காலின் ஊனத்தையும், வழியையும் நீக்கிக்கொள்ள விரும்பினால்,  தனது சத்குரு சாயீபாபாவிடம் செல்லவேண்டும் என்றார்...மேலும் சாயீபாபாவைப் பற்றிய முழு விபரத்தையும் அவர் காகாவுக்குக் கொடுத்து, சாயிபாபாவின் மகா வாக்கியமான "எனது மக்களை நெடுந் தொலைவிலிருந்தும், ஏழ்கடலுக்கு அப்பாலிருந்தும் கூட குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பதைப் போன்று இழுக்கிறேன்" என்பதைக் கூறினார்.

பாபாவின் ஆசியும் அனுக்கிரகமும் இல்லாவிட்டால், எவரும்  பாபாவால் கவரப்படமாட்டார் என்பதையும், தரிசனம் அளிக்கப்படமாட்டார் என்பதையும்  நானா சாஹேப் தெளிவாக்கினார். இவற்றைக்  கேட்டவுடன். காகா சாஹேபுக்கு மகிழ்வுண்டாயிற்று...தாம் பாபாவிடம் செல்லப் போவதாதவும், அவரைத் தரிசித்துப் பிரார்த்தித்து கால் ஊனத்தை அவ்வளவாக குணமாக்காவிடினும், ஊனமான ஒட்டித்திரியும் மனத்தை ஒழுங்காக குணப்படுத்தி, தமக்கு எல்லையற்ற பேரின்பத்தை நல்கும்படியும் வேண்டிக்கொள்ளப் போவதாகவும் கூறினார்...

காகா சாஹேப் தீஷித் சில நாட்களுக்குப் பிறகு, பம்பாய் கீழ் சட்டசபையில் தமக்கு ஒரு இடம் கிடைப்பதற்காக, ஓட்டுக்கள் பெறும் நோக்குடன் அகமத்நகர் சென்று சர்தார் காகா சாஹேப் மிரீகருடன் தங்கினார்..காகா சாஹேப் மிரீகருடைய புதல்வரான பாலா சாஹேப் மிரீகர் என்பவர்  கோபர்காவனின் மம்லதார்.. இச்சமயத்தில் அகமத்நகருக்கு அவ்விடத்தில் நடைபெற்ற குதிரைக் கண்காட்சியைக் காணும் பொருட்டு வந்தார். தேர்தல் வேலை முடிந்ததும் காகா சாஹேப் தீஷித் சீரடி செல்ல விரும்பினார். தந்தையும், மகனுமாகிய மிரீகர் குடும்பத்தினர், காகா சாஹேப் தீஷித்துடன் சீரடி  அனுப்புவதற்கு  ஒரு தகுதியான, ஒழுங்கான வழிகாட்டியாக யாரை அனுப்பலாம் என்று தங்கள் இல்லத்தில் யோசித்துக் கொண்டிருந்தனர்.

சீரடியில் சாயிபாபா, அவர்களின் வரவேற்புக்கான ஏற்பாடுகளைச் செய்துக் கொண்டிருந்தார்....ஷாமாவுக்கு அவரின் மாமனாரிடமிருந்து, ஷாமாவின் மாமியார் தீவிரமாகக் காய்ச்சலாக இருப்பதையும், ஷாமா தனது மனைவியுடன் அவளைக் காண அகமத்நகர் வரவேண்டும்  என்றும் ஒரு தந்தி வந்தது...ஷாமா பாபாவின் அனுமதியுடன் அங்கு வந்து தனது மாமியாரைப் பார்த்து,  முன்னைவிட  இப்போது  நலமாகி வருவதைக் கண்டார்... நானா சாஹேப் பான்சேயும், அப்பா சாஹேப் கத்ரேயும் அவர்கள் குதிரைக் கண்காட்சிக்குப் போகும்வழியில் ஷாமாவைக் கண்டு, அவரை மிரீகரின் வீட்டுக்குச் சென்று காகா சாஹேப் தீஷித் என்பவர்  சீரடிக்குச் செல்வதற்கு  ஆவலாய் இருப்பதாகவும்,  சீரடிக்கு அவரையும் உடனழைத்துச் செல்லும்படி கூறினார்கள்.. காகா சாஹேப் தீஷித்துக்கும், மிரீகர்களுக்கும் கூட ஷாமாவின் வருகை தெரிவிக்கப்பட்டது.  மாலையில் ஷாமா மிரீகர் இல்லத்திற்கு  வந்தார்.. அப்போது மிரீகர் குடும்பத்தினர் காகா சாஹேப் தீஷித்திற்கு, ஷாமாவை  அறிமுகப்படுத்தினார்கள்...  

ஷாமா, காகா சாஹேப் தீஷித்துடன் இரவு 10 மணி இரயில் வண்டியில் கோபர்காவனுக்குச் செல்வதென ஏற்பாடு செய்யப்பட்டது...இதற்கு இடையில்  முடிவானதும் ஒரு விசித்திர நிகழ்ச்சி நடைபெற்றது.. பாலா சாஹேப் மிரீகர் பாபாவின் படத்தின்மீது இருந்த திரையை அகற்றிவிட்டு, அதை காகா சாஹேப் தீஷித்துக்குக் காண்பித்தார்..யாரைப் பார்க்க சீரடிக்குப் போகப் போகின்றாரோ அவர் அவ்விடத்திலேயே தமது சித்திர ரூபத்தில் வரவேற்க இருந்ததைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார்...அவர் மிகவும் மனமுருகி  படத்தின்முன் வீழ்ந்துப் பணிந்தார்.. அப்படம் மேகாவுடையது..  அதன்மேல் உள்ள கண்ணாடி உடைந்துவிட்டதால், பழுதுபார்க்க அது மிரீகர்களிடம் அனுப்பபட்டிருந்தது..  தேவையானபடி பழுது பார்க்கப்பட்டு விட்டபடியால் படத்தை இப்போது ஷாமா, காகா சாஹேப் மூலமாக  அனுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டது.

பத்து மணிக்கு முன்னரே அவர்கள் ரயில் நிலையத்துக்குச் சென்று நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டனர்..ஆனால் வண்டி வந்ததும் இரண்டாம் வகுப்பு மிகவும் கூட்டமாக இருப்பதையும், அவர்களுக்கு இடமில்லாது இருப்பதையும் அறிந்தனர்..அதிர்ஷ்டவசமாக அந்த இரயில்  வண்டியின் முக்கிய அதிகாரியானவர், காகா சாஹேப் தீஷித்தின்  நண்பராக இருந்தார்...வர்களை முதல் வகுப்பில் இடம் கிடைத்தது.. இவ்வாறாக அவர்கள் சௌக்கியமாகப் பிரயாணம் செய்து கோபர்காவனில் இறங்கினார்கள்...சீரடிக்குச் செல்ல நானா சாஹேப் சாந்தோர்கரும் அங்கு வந்திருப்பதை அவர்கள் கண்டபோது அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.. காகா சாஹேபும் , நானா சாஹேபும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்...பிறகு புனித கோதாவரியில் நீராடிய பின்னர் அவர்கள் சீரடிக்குப் புறப்பட்டனர்...சீரடிக்குச் சென்று  பாபாவின் தரிசனத்தைப் பெற்ற கணத்தில், காகா சாஹேப்பின் மனது உருகியது...அவர் கண்கள் குளமாயின...அவர் மகிழ்ச்சிப் பெருக்கில் மூழ்கடிக்கப்பட்டார்...  

பாபா அவரிடம் தாம்கூட அவருக்காகவே காத்துக் கொண்டிருப்பதாகவும், உம்மை உபசரிப்பதற்காக  ஷாமாவை முன்பே அனுப்பியதாகவும் கூறினார்...பின்னர் காகா சாஹேப்  தீஷித்  தம் வாழ்நாட்களில்  பல வருடங்களை பாபாவின் கூட்டுறவில் கழித்தார்...சீரடியில் அவர் ஒரு வாதா(சத்திரம்) கட்டினார்...ஏறக்குறைய அதையே நிரந்தர வாசஸ்தலமாக ஆக்கிக்கொண்டார்...  பாபாவிடமிருந்து காகா சாஹேப் தீஷித்  பெற்ற அனுபவங்கள் எண்ணற்றவையாதலாள்  அவைகளை எல்லாம் கூறுவதற்கு  இங்கு இடமில்லை...இது குறித்துத் தெரிந்துக் கொள்வதற்கு  சாயிலீலா சஞ்சிகை (தொகுப்பு 12, எண் 6,7,8,9) 'காகா சாஹேப் தீஷித்" சிறப்புமலரைப் பார்க்குமாறு சாய்பக்தர்கள்  கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஒரே ஒரு கடைநிலை அனுபவ நிகழ்வைக் கூறி,  இந்த விஷயத்தை முடித்துக் கொள்கிறோம்..  பாபா காகா சாஹேப் தீஷித்திடம்,  "நான் உன்னை புஷ்பக விமானத்தில் எடுத்துச் செல்கிறேன்" என்று கூறியிருந்தார்.. (அதாவது மகிழ்வான மரணத்தை அவருக்குக் கொடுத்தல்) இது உண்மையாயிற்று...  1926-ஆம் வருடம் ஜூலை மாதம் 5-ஆம் தேதி அவர் ஹேமாட்பந்துடன் ரயிலில் செல்லும் போது சாயீபாபாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.. அவர் நினைவிலேயே ஆழ்ந்திருந்தார். திடீரெனத் தமது கழுத்தை ஹேமாட்பந்தின் தோள்களில் சாய்த்து எவ்வித வலியோ, அசௌகரியமோ இன்றிக் காலமானார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

🔥ஞானிகள் ஒருவருக்கொருவர் சகோதரப் பாசத்துடன் இருக்கின்றார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டும் விதமாக, ஶ்ரீவாசு தேவானந்த் சரஸ்வதி என்ற தேம்பே சுவாமி  அவர்கள் பாபாமீதுள்ள ஈடுபாட்டின் காரணமாக,  சீரடிக்குச் செல்லவிருந்த ஶ்ரீ புண்டலிக்ராவ் என்பவரிடம், எனது வணக்கங்களுடன் இந்தத் தேங்காயை சாயீயிடம் சமர்ப்பித்து விடுங்கள் என்று கூறியதை மறந்தக் காரணத்தால், பாபாவைக் கண்டவுடன்  புண்டலிக்ராவ்  மிகுந்த  அச்சத்துடன் மன்னிப்புக் கோரியதற்கு பகவான் அளித்த உபதேசம் என்ன என்பதன் அனுபவ விளக்கவுரை..🔥

ஞானிகள் ஒருவருக்கொருவர் சகோதர பாசத்துடன் எங்ஙனம் நேசித்துக் கொள்கிறார்கள் என்பதை விளக்கும் நிகழ்வை இங்குப் பார்ப்போம்.. ஸ்ரீ வாசுதேவானந்த் சரஸ்வதி என்ற தேம்பே ஸ்வாமி அவர்கள்  ஒருமுறை ஆந்திராவில் கோதாவரிக் கரையிலுள்ள ராஜமஹேந்திரியில் வந்து தங்கியிருந்தார்..அவர் பக்தியும்,  வைதீகமும் உடைய ஞானியாகவும், யோகியாகவும் இறைவனாகிய தத்தாத்ரேயரின் பக்தருமாக விளங்கிவந்தார்.. நிஜாம் ராஜ்யத்தைச் சேர்ந்த நாந்தேட் நகரின் வக்கீலான ஸ்ரீ புண்டலிக்ராவ் என்பவர் சில நண்பர்களுடன் அவரைக் காணச் சென்றிருந்தார்..அவர்கள் தேம்பே சுவாமியிடம்  பேசிக்கொண்டிருந்த போது,  சீரடி சாயிபாபா முதலிய பெயர்கள் தற்செயலாக அப்பேச்சின்போது கூறப்பட்டன..பாபாவின் பெயரைக் கேட்டதும், ஸ்வாமி கைகளால் வணங்கி ஒரு தேங்காயை எடுத்து அதை புண்டலிக்ராவிடம் கொடுத்து, "என் வணக்கங்களுடன் சகோதரர் சாயீயிடம் இதைச் சமர்ப்பித்து விடுங்கள்...என்னை மறந்துவிடாமல் என்மேல் அன்புடனிருக்கச் சொல்லுங்கள்" என்றார்...மேலும் "சுவாமிகள் பொதுவாக யாரையும் வணங்குவதில்லை... ஆனால் இந்த விஷயத்தில் இந்த விதி விலக்குச் செய்யப்படவேண்டும்" என்றும் கூறினார்.  புண்டலிக்ராவ் தேங்காயையும், செய்தியையும் பாபாவிடம் எடுத்துச்செல்லச் சம்மதித்தார்.. பாபாவைச் சகோதரன் என்று தேம்பே  சுவாமி அழைப்பது சரியே..  ஏனெனில் அவருடைய வைதீக சம்பிரதாயப்படி அக்னிஹோத்ரம் என்ற புனித நெருப்பை இரவும், பகலும் அவர் காத்து வந்ததைப் போலவே பாபாவும் அக்னியை  அதாவது துனியை மசூதியில் எப்போதும் எரியவிட்டுக் கொண்டிருந்தார்... ஒரு மாதத்திற்குப் பின்னர் புண்டலிக்ராவும், மற்றவர்களும் தேங்காயுடன் சீரடிக்குப் புறப்பட்டு மன்மாடை வந்தடைந்தனர்...தாகமாக இருந்ததால் ஓர் ஓடைக்குத் தண்ணீர் பருகச் சென்றனர்..வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கக் கூடாதாகையால் கொஞ்சம் சிவடா என்ற காரம் கலந்த அவலை சிற்றுண்டியாக உட்கொண்டனர்...அது அதிகக் காரமாக இருந்ததால் யாரோ ஒருவர் தேங்காயை உடைத்து தேங்காய்ப்பூவை அதனுடன் கலந்துவிடலாம் என்று கூறி அதேபோல் செய்தும் விட்டார்...சிவடாவை அதிகச் சுவையுள்ளதாகவும், நாவுக்கு ருசியுள்ளதாகவும் செய்துக்கொண்டனர்...துரதிர்ஷ்டவசமாக அந்தத் தேங்காய் புண்டலிக்ராவிடம் ஒப்படைக்கப்பட்ட தேங்காயாக இருந்தது...

அவர்கள் சீரடியை நெருங்கியதும் புண்டலிக்ராவ், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளாகிய தேங்காய் உடைக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு விட்டது என்பதை வெகுவருத்ததுடன் உணர்ந்தார்...பயந்து நடுங்கிக் கொண்டு சீரடிக்கு வந்து சாயீபாபாவைப் பார்த்தார்.. பாபா முன்பே  தேம்பே ஸ்வாமி தேங்காய் அனுப்பியுள்ள கம்பியில்லாத் தந்தியின் செய்தியைப் பெற்றுவிட்டார்..பாபா,  தாமாகவே தமது சகோதரன் கொடுத்தனுப்பியுள்ள பொருளை முதலில் கொடுக்கும்படி புண்டலிக்ராவிடம் கேட்டார்.  அவர் பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு,  தமது குற்றத்தையும், கவனமின்மையையும் கூறி, மனம் வருந்தி பாபாவின் மன்னிப்பை வேண்டினார்..மற்றொரு தேங்காயை அதற்குப் பதிலாகக் கொடுத்து விடுவதாகக் கூறினார்...ஆனால் அத்தேங்காய்க்கு இணையாக வேறொன்றை ஈடுசெய்ய முடியாதென்றும், சாதாரணத் தேங்காயைக்  காட்டிலும் பல மடங்கு அது உயர்ந்ததென்றும் கூறி, பாபா அதைப் பெறுவதற்கு மறுத்துவிட்டார்...மேலும் பாபா கூறினார், "இனிமேல் இவ்விஷயத்தைப்பற்றி நீ கவலைகொள்ளத் தேவையில்லை...எனது விருப்பத்தின் காரணமாகவே தேங்காய் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டு முடிவில் உடைக்கப்பட்டும் விட்டது..  செயல்களின் கர்த்தாவாக உன்னையே ஏன் நீ ஆக்கிக்கொள்கிறாய்...?

நற்கருமங்களையோ அல்லது தீய செயல்களையோ செய்யும் கர்த்தாவாக உன்னை நீயே எண்ணிக் கொள்ளும் உணர்வை அனுமதிக்காதே....எல்லாவற்றிலும் முழுமையாக அகங்காரமற்று இருப்பீராக.. இதனைக் கடைப்பிடித்தால் உனது ஆன்மிக முன்னேற்றம் துரிதமடையும்" என்றார் பாபா... எத்தகைய அழகிய ஆன்மிக போதனையை இந்நிகழ்ச்சியின் மூலம் பாபா உணர்த்தி இருக்கின்றார் பாருங்கள்..!   

🔥சத்குருநாதர் சீரடி பாபா  தன்னுடைய எங்கும் நிறைந்த பேரறிவால், இன்று எனது தர்பாரைச் சேர்ந்தவர்கள் வருகின்றார்கள் என்று பாலாராம் துரந்தர் சகோதரர்களை முன்னரே  சுட்டிக்காண்பித்து, பாபா  மிகுந்த  மகிழ்ச்சியுடன் அவர்களை  ஆசிர்வதித்து, எவ்வாறு   ஆஸ்துமாவினால்  பாதிக்கப்பட்ட  பாலாராமைக் குணப்படுத்தினார் (1978-1925) என்பதன் அனுபவ விளக்கவுரை..🔥

பாலாராம் துரந்தர் என்பவர், பம்பாய் சாந்தாகுருசைச் சேர்ந்த பதாரே பிரபு இனத்தைச் சேர்ந்தவர்..அவர் பம்பாய் உயர்நீதிமன்றத்தின்  வக்கீலாகவும், சிறிது காலம் பம்பாய் அரசாங்க சட்டப்பள்ளியின் (Law School) தலைவராகவும் பணியாற்றினார்.. .துரந்தர் குடும்பம் முழுவதுமே தெய்வபக்தியும், மத உணர்வும் கொண்டது.  பாலாராம் தனது இனத்தாருக்குச் சேவை செய்தார்..அதைப்பற்றி ஒரு கட்டுரையை எழுதி அதைப் பதிப்பித்தார்.. பின்னர் அவர் ஆன்மிக மத விஷயங்களுக்கு திரும்பினார்..கீதையையும், அதற்கான வியாக்கியானமான ஞானேஸ்வரியையும், மற்ற தத்துவ நூல்களையும், நுண்ணியல் கோட்பாட்டு நூல்களையும் ஆழ்ந்து படித்தார்..அவர் பண்டரீபுரத்து விட்டோபாவின் பக்தர்...  பாபாவுடன்  1912-ஆம் ஆண்டில் தொடர்பு கொண்டார்..அதற்கு ஆறு மாதங்களுக்கு முன் பாபுல்ஜி, வாமன்ராவ் என்ற பாலாராம் துரந்தரின்  இரு சகோதரர்களும், சீரடிக்கு சென்று  பாபாவின் தரிசனத்தைப் பெற்றனர்..  வீடு திரும்பி அவர்களின் இனிய அனுபவங்களை பாலாராமுக்கும், குடும்பத்தினருக்கும் எடுத்துரைத்தனர்..அதன் பின்னர், அவர்கள் அனைவரும் பாபாவைத் தரிசிக்கத் தீர்மானித்தார்கள்..

பாலாராம் குடும்பத்தினர்கள்  சீரடிக்கு வரும்முன்னரே பாபா வெளிப்படையாக "இன்று எனது தர்பாரைச் சேர்ந்த பெருபாலோர் வருகின்றார்கள்" என உரைத்தார்.. துரந்தர் சகோதரர்கள் முன்கூட்டியே செய்தி ஏதும் அனுப்பவில்லையாதலால், மற்றவர்களிடமிருந்து  பாபா கூறிய இக்குறிப்பைக் கேட்டு ஆச்சரியமடைந்தனர்.  மற்றவர்கள் அனைவரும்  பாபாவின் முன் வீழ்ந்து வணங்கி அவருடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.. பாபா அவர்களிடம் "நான் முன்னர் குறிப்பிட்ட எனது தர்பார் மக்கள் இவர்களே" எனக்கூறி, துரந்தர் சகோதரர்களிடம் "கடந்த அறுபது தலைமுறைகளாக நாம்  ஒருவரொடு ஒருவர் உறவுப்பூண்டு இருக்கின்றோம்" என்றார்...அச்சகோதரர்கள் எல்லோரும் எளிமையுடனும் , பணிவுடனும் பாபா கூறுவதை  உற்றுப் பார்த்தவண்ணம் நின்றிருந்தனர்...கண்ணீர், தொண்டை அடைத்தல், மயிர்க்கூச்செறிதல் முதலான எல்லா சத்துவ உணர்வுகளும் அவர்களை உருக்கின..அவர்கள் எல்லையற்ற  மகிழ்ச்சி அடைந்தனர்.. பின்னர் அவர்கள் தங்களது இருப்பிடத்துக்குச் சென்று உணவு உட்கொண்டு சிறிது களைப்பாறிவிட்டு மீண்டும் மசூதிக்கு வந்தனர். பாலாராம் துரந்தர்  பாபாவின் அருகில்  அமர்ந்து, அவரது கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார்...சில்லிம் என்ற மட்குழாயில் புகை பிடித்துக் கொண்டிருந்த பாபா, அதை அவரிடம் நீட்டி புகை பிடிக்குமாறு அழைத்தார்..புகைபிடித்து வழக்கமில்லை எனினும், பாலாராம் துரந்தர் அக்குழாயை வாங்கிக் கொண்டு பெருஞ்சிரமத்துடன் புகைபிடித்துவிட்டு, பக்தியுடன் வணங்கி அதைத் திருப்பி அளித்தார்...பாலாராமுக்கு இதுவே மிகமிகப் புனிதமான நேரம்..ஆறு ஆண்டுகளாக  பாலாராம் ஆஸ்துமா வியாதியினால்  பாதிக்கப்பட்டு இருந்தார்.. இப்புகை அவரை முழுவதுமாகக் குணப்படுத்தியதுடன், மீண்டும் அவ்வியாதிக்கு உட்படுத்தவேயில்லை.. 

ஆறு ஆண்டுகளுக்குப் பின், ஒரு குறிப்பிட்ட தினத்தில் மீண்டும் பாலாராமிற்கு ஆஸ்துமாவின் தாக்குதல் நேரிட்டது...இது பாபா மகாசமாதி அடைந்த அதே நேரம் என்பது குறிப்பிடத்தக்கது...அவர்கள் சென்றிருந்த தினம் வியாழக்கிழமை என்பதால், பாலாராம் துரந்தர் சகோதரர்கள்  சாவடி ஊர்வலத்தை அன்று இரவு கண்டுக்களிக்கும் நல்லதிர்ஷ்டம் பெற்றிருந்தனர்...சாவடியில் ஆரத்தி நிகழ்ச்சியின் போது பாலாராம் பாபாவின் முகத்தில் பாண்டுரங்கரின் ஜோதியைக் கண்டார்....மறுநாள் காலை காகட் ஆரத்தியின் போதும் அதே அபூர்வ நிகழ்ச்சியை, அதாவது அவரின் அன்புக்குரிய தெய்வமான  பாண்டுரங்கரின் ஜோதியானது  பாபாவின் முகத்தில் ஒளிர்ந்ததைக் கண்டார்...

பாலாராம் துரந்தர் அவர்கள், மராத்தியில் மகாராஷ்டிர ஞானி  துக்காராமின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதினார்.. ஆனால், அதன் பதிப்பைக் காண அவர் உயிருடன் இருக்கவில்லை..பின்னர் 1928-ஆம் ஆண்டில் அவரது சகோதரர்களால் பிரசுரிக்கப்பட்டது...  பாலாராம் துரந்தரின்  வாழ்க்கையைப் பற்றிக் கொடுக்கப்பட்டுள்ள ஒரு சிறுகுறிப்பு அந்நூலின் ஆரம்பத்தில் உள்ளது... பாலாராம் துரந்தரைப்  பற்றிய மேற்கூறிய தகவல் அதில் முழுவதுமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.(அந்தப் புத்தகத்தின் 6ம் பக்கத்தில் காண்க)..

ஓம் ஶ்ரீ  சாய்ராம்...🙏🏼🙏🏼

ஸ்ரீசாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்..🙏🏼🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏼

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக