வெள்ளி, டிசம்பர் 29, 2023

கண்ணனிடம் கேளுங்கள் ..சரணாகதி அடையுங்கள் ..!



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

கண்ணனிடம் கேளுங்கள் ..சரணாகதி அடையுங்கள் ..!

ஆர்வமும் சிரத்தையுமுள்ள பக்தர்களின் விருத்தியில் நான் இருந்து கொண்டு, அவர்களின் தொன்று தொட்டு இருக்கும் அடர்ந்த அஞ்ஞானமாகிய இருளை என்னுடைய கருணையினால், மிக்க ஒளியுடன் விளங்கும் விவேகமென்னும் ஞான தீபத்தினால் முற்றும் நாசமடையும்படி செய்வேன் என்று உணர்ந்திடுவாய்....நல்லது ஒன்றை அடைய வேண்டும் என்ற சிரத்தை ஒருவனுக்கு இருந்தாலே, அவனிடம் இறைவன் குடி கொண்டுள்ளான் என்றே பொருள். இல்லையென்றால் அவனுக்கு மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பது கூடத் தோன்றாதிருக்கலாம். ஆதலால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் இறைவன் இருக்கிறான் என்று நம்புபவனுக்கே பிரபஞ்சமும் அதன் இயக்கங்களும் ஒவ்வொன்றாகப் புரிய வரும். அது மட்டுமல்லாது அண்டத்தில் உள்ளதுதான் பிண்டமாகிய நம்முள்ளும் இருக்கிறது என்ற இறுதி உண்மையும் தெரிய வரும். செய்யும் தொழிலே தெய்வம் என்று அப்படி செயல் புரிபவனுக்கு தொன்று தொட்டு விளங்கும் அறியாமை எனும் இருளைப் போக்கி ஞானத்தை நான் வலிய வந்து தந்திடுவேன் என்று பகவான் கிருஷ்ணர் நமக்கு உத்திரவாதம் தருகிறார். அந்த ஞானம் அடைந்தவனுக்கு வேறு எந்தப் பாதையிலும் செல்வதற்குத் தோன்றாது.

“தொன்று தொட்டு இருக்கும் இறைவன்” என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன “தொன்று தொட்டு விளங்கும் அறியாமை” என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா..? ஆமாம், “என்று நீ, அன்று நான்” என்று ஒரு சிவனடியார் கால அளவைப் பற்றிச் சொல்வாராம். அதாவது, என்று இறைவன் தான் தானாக இல்லாமல் இயற்கையின் பலவடிவினனாகக் காட்சி தந்து அருளினானோ, அன்றிருந்தே அறியாமை எனும் இருளும் “நான்” என்ற வடிவில் தொடங்கி உலவுகிறது என்று அதற்குப் பொருள். அப்படி இறைவனையும் தன்னையும் பிரித்துக் காண்பதினாலேயே நாம் அனைவரும் எண்ணிலாப் பிறவிகள் எடுத்து வருகிறோம். ஆக அனைத்தையும் ஒன்றாகக் காணவேண்டும் என்பதே நமது வாழ்வின் இலக்காக இருக்க வேண்டும். அதற்காகவே நமக்கு இறைவனிடமிருந்து தன்னைப் பிரித்து அறியாத அனந்னிய பக்தி வேண்டும்..

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக