வியாழன், டிசம்பர் 28, 2023

எங்கும் நிறைந்து வியாபித்துள்ள சத்-சித்-ஆனந்தமே உருவாயுள்ள பிரம்மத்தை ஞானக் கண் கொண்டவனே தரிசிக்க முடியும்.

 


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

சருவத்தும் சார்ந்த தாம் சச்சிதானந்தப் பிரமத்தை ஞானக்கண் பெற்றான் – தரிசிப்பான் ஞானக்கண்ணில்லாதான் நண்ணானே காட்சி ஒளிர் பானுவை அந்தன் போலப் பார்..எங்கும் நிறைந்து வியாபித்துள்ள சத்-சித்-ஆனந்தமே உருவாயுள்ள பிரம்மத்தை ஞானக் கண் கொண்டவனே தரிசிக்க முடியும். அவ்வாறு ஞானக் கண் இல்லாதவன், அதி பிரகாசத்துடன் கூடிய சூரியனை ஒரு குருடன் பார்க்க முடியாதது போல, அதை அணுகவே இயலாது..பிரம்மம் எங்கும், என்றும் இருந்து, எதிலும் வியாபித்துள்ளது என்றால் அது இங்கு, இப்போது தெரிய வேண்டுமே என்று கேட்போர்க்கு இந்த ஸ்லோகம் பதில் அளிக்கிறது. ஆதி காலத்தில் நாம் கண்ணால் பார்ப்பதுவும், காதால் கேட்பதுவும் வெவ்வேறு வழிமுறைகளால் என்று நினைத்திருந்தோம். ஆனால் அவை மட்டுமல்லாது வேறு பல வகைத்  தகவல்களும், வெவ்வேறு அலைக் கற்றைகளால் வந்தடைகின்றன என்பதை வளர்ந்து வந்த விஞ்ஞானம் நமக்குக் கற்பித்தது. எந்த அலை வரிசையில் ஒன்று வருகிறதோ அதை அறிந்துகொள்ள அதற்கேற்ற கருவி நம்மிடம் இருக்க வேண்டும். ஒளியைப் பார்ப்பதற்கு நமக்குக் கண்ணும், ஒலியைக் கேட்பதற்கு நமக்குக் காதும் என்று இருவேறு கருவிகள் இருக்கின்றன. அதேபோல நாம் கேட்கும் வானொலி மூலம் வரும் பேச்சுக்களும், பாட்டுக்களும் வெவ்வேறு அலை வரிசைகளில் வருகின்றன. அதனாலேயே அவ்வாறு வரும் வானொலி விவரங்களை நாம் கேட்க நம் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள ஒரு ரேடியோ தேவைப்படுகிறது. அது போல பிரம்மத்தை உணர்வதற்கும் அதற்கு உரிய சாதனம் நமக்குத் தேவைப்படுகிறது.

நமது ஊனக் கண்ணால் நமக்கு முன் உள்ளதைத்தான் பார்க்க முடியும். அதனால் கூட நம் முகத்தையே நாம் பார்க்க முடியாது..அதன் அமைப்பு அப்படி. ஞானம் எனப்படுவது நமது உள்ளார்ந்த நிலையைப் பற்றிய அறிவு. அதை உணர்வதற்கு அதற்கேற்ற கருவியான ஞானக்கண் வேண்டும். அந்தக் கண்ணைப் பெறுவதற்குத்தான் முன்பே சொல்லப்பட்டுள்ள சிரவணம், மனனம், நிதித்யாசனம் போன்ற வழிமுறைகள் தேவை. சூரியன் என்னதான் பிரகாசமாக இருந்தாலும், ஊனக்கண் இல்லாதவன் அதைப் பார்க்க இயலாது. அதே போல ஞான சூரியனான பிரம்மம் என்னதான் பிரகாசமாக இருந்து, சர்வ வியாபியாக இருந்தும் அதை உணரக்கூடிய ஞானக்கண் இல்லாதவன் எங்கும், எப்போதும் நிறைந்து, சத்- சித்- ஆனந்தம் என்ற தன்மைகளைக் கொண்ட பிரம்மத்தை அறிய முடியாது...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக