வெள்ளி, ஜூன் 18, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு... (39)மற்றும்(50)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான ஶ்ரீசாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼 🙏🏼🙏🏼

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏அத்தியாயம்:: முப்பத்தொன்பது மற்றும் ஐம்பது (39)மற்றும்(50)🙏

🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய்  சத்சரித்திரத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய்சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்.. ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்.. நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு::..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...

மேலும் இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

🔥அத்தியாயம்:: முப்பத்தொன்பது மற்றும் ஐம்பது (39 மற்றும் 50)🔥

🙏முன்னுரை...🙏

சத்குருநாதர் சீரடி பாபா, தன் ஆத்மார்த்தமான உயரியப் பக்தன், நானா சாஹேப் சாந்தோர்கர் சந்தேகத்தை நீக்கும் பொருட்டு, அவர்   எடுத்துரைத்த பகவத்கீதையின் செய்யுளில்  உள்ளடங்கியுள்ள  மறைபொருள்  ஞான மூல சூட்சம விளக்கத்தை எடுத்துக்கூறி,  பாபா, எவ்வாறு நானா சாஹேப்பின் அகந்தையையும், கர்வத்தையும், அறியாமையையும்   நீக்கினார்  என்பதன் அனுபவ மறைஞான விளக்கவுரை..

சீரடி பாபா , தன் ஆத்மார்த்தமான பக்தர்களாகிய, ஶ்ரீமான் பாபு சாஹேப் பூட்டியின் வாதா கட்டும்  எண்ணமும்  மற்றும்  தீஷித் மற்றும் ஷாமா ஆகியோரின் கனவில் தோன்றி காட்சியளித்து,  வாதாவை கட்டுமாறு  அறிவுருத்திய பின், எவ்வாறு   வாதா என்ற சமாதி மந்திரைக் கட்டினார்கள் என்ற   நிகழ்வின் விளக்கமும், மேலும்  எவ்வாறு முரளிதரருக்காக கட்டப்பட்ட மேடையில் பாபாவின் புனித உடல்   சமாதியாக்கப்பட்டு சமாதி மந்திரானது என்பதன் அனுபவ விளக்கவுரை..   

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்...

🔥முதலில் சத்குருநாதர் சீரடி பாபா, தன் ஆத்மார்த்தமான உயரியப் பக்தன் நானா சாஹேப் சாந்தோர்கர் சந்தேகத்தை நீக்கும் பொருட்டு, அவர்   எடுத்துரைத்த பகவத்கீதையின் செய்யுளில்  உள்ளடங்கியுள்ள  மறைபொருள்  ஞான மூல சூட்சம விளக்கத்தை எடுத்துக்கூறி,   பாபா, எவ்வாறு நானா சாஹேப்பின்  அகந்தையையும், கர்வத்தையும், அறியாமையையும்   நீக்கினார்  என்பதன் அனுபவ மறைஞான விளக்கவுரையைப் பற்றி இங்கே பார்ப்போம் ..🔥

இந்த அத்தியாயம், பகவத்கீதையின் ஒரு செய்யுளை எடுத்துரைத்து  விளக்கம் கேட்ட நானா சாஹேப் சாந்தோர்கருக்கு, பாபா உபதேசித்த  மறை ஞான மூல சூட்சம  விளக்கத்தைப் பற்றியது... மகான்களும், சித்தர்களும்  தேகம்,  இனம், மொழி, ஜாதி , பற்று  ஆகியவற்றை கடந்தவர்கள் என்று அறியாமையின் காரணமாக பாபாவிற்கு  வடமொழி தெரியாது என்றும்,  பகவத் கீதையில்  உள்ள  செய்யுளின்  பொருள் விளக்கம் நானா சாஹேப் சாந்தோர்கரினுடையது என்றும் சிலர் ஆட்சேபித்ததால், ஹேமத்பந்த் அந்த ஆட்சேபத்தை மறுத்து, மற்றொரு அத்தியாயமான  ஐம்பதிலும்  பாபா உரைத்த மூல சூட்சம விளக்கத்தை  விவரிப்பதால் அதுவும் இந்த அத்தியாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...

சீரடி பாபா மகாசமாதி எய்தும்வரை ஸ்ரீ சாய்பாபா  வாழ்ந்து நடமாடிய சீரடியும், துவாரமாகாயீயும் நற்பேற்றுக்குரியவைகள்... சீரடி பாபா எதற்காக சீரடி வருகைப் புரிந்தாரோ, எவருடைய நன்றிக்கடனுக்குத் தம்மை உரியவராக்கிக் கொண்டாரோ, அத்தகைய சீரடி மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்...  முதலில் சீரடி ஒரு குக்கிராமம்தான்...ஆனால் பாபாவின் வருகையால் சீரடி  அதீத  முக்கியத்துவம் பெற்ற  புனிதத்தலமாக  மாறியது... மேலும்  புனிதப் பயணத்திற்க்குரிய ஒரு புண்ணிய ஷேத்திரமாகவும் ஆனது.  சீரடியில் வாழ்ந்த அனைவரும்  அதே அளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்...பாபா மீது சீரடி மக்கள்  கொண்டிருந்த முழுமனதான சிதையாத நம்பிக்கையும், விசுவாசமும்,  பாபாவின் ஆசிர்வாதத்தை முழுவதுமாக  பெறுவதற்கு தகுதிகளாக  அமைந்தது... சீரடியில்  வாழ்ந்த பெண்மணிகள் அனைவரும் தன் அன்றாட இல்லறப் பணிகளை மேற்க்கொள்ளும்  போது  பாபாவின் புகழைப் பாடினார்கள்..அவர்களின் அன்பு நற்பேற்றுக்குரியது.  ஏனெனில் கேட்போரின்  மனதை ஈர்க்கக் கூடியதாக இருந்தது..ஆழ்மனதில்  இருக்கக்கூடிய துன்பத்தை   அகற்றி சாந்தப்படுத்தியது.  மிக அழகாக  இனிமையான  பாடல்களை அவர்கள் பாடினார்கள்..

சீரடி பகவான் உணர்த்திய மறைப்பொருள் ஞான மூல சூட்சம விளக்கம்  என்னவென்பதை இங்கே காண்போம்.. ஒருநாள் நானா சாஹேப் சாந்தோர்கர் என்ற பக்தருக்கு,  கீதையின் ஒரு செய்யுளுக்கு சிறந்த பொருள் விளக்கம் தெரியவில்லை...ஆனால்  பாபாவிற்கு வடமொழி தெரியாது என்று நானா சாஹேப் நினைத்தார்.. ஆனால்  பகவான் தன்னுடைய  எங்கும் நிறைந்த பேராற்றலாள்,  பகவத்கீதையில் அடங்கியுள்ள செய்யுளில்  உள்ளடங்கியுள்ள  மறைப்பொருள் மூல  சூட்சம விளக்கத்தை  எடுத்துக்கூறி வந்திருந்த அனைத்து பக்தர்களையும்  அதிசயத்தில் ஆழ்த்தினார்.  இதைப்பற்றிய சுருக்கமான விபரம் B.V.தேவ் என்னும் ஓய்வுபெற்ற மம்லதாரால் எழுதப்பட்டு, சாயிலீலா சஞ்சிகையில் (தொகுப்பு 7 'ஸ்புதவிஷயா' பக்கம் 563) மராத்தியில் பதிப்பிக்கப்பட்டது.... 

சகோதரர்  B.V.நரசிம்மஸ்வாமி எழுதிய இரு நூல்களான 'சாயிபாபாவின் சாஸனாம்ருதத் திருமொழிகள்' (பக்கம் 61), 'The Wonderous Saint Sai Baba' (page 36) ஆகியவற்றில் இதைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.. இது மேற்குறித்து ஸ்வாமி எழுதிய 'பக்தர்களின் அனுபவங்கள் மூன்றில் (பக்கம் 66) பதிப்பிக்கப்பட்டு இருக்கிறது... இப்பொருள் குறித்து நானா சாஹேப்பிடமிருந்தே B.V.தேவ் நேரடித் தகவல் பெற்றாராதலால் அவருடைய கூற்றையே கீழே அளிக்கிறோம்...

நானா சாஹேப் சாந்தோர்கர் வேதாந்தத்தில் ஒரு சிறந்த மாணவர்...அவர் கீதையை விளக்கங்களுடன் பயின்று இருக்கிறார்... மேலும் அவர்  எல்லாவற்றையும் பற்றி  கற்றுத் தான்  சிறந்த அறிவாளியெனக் கர்வமடைந்தார்..வடமொழியைப் பற்றி  பாபாவிற்கு ஒன்றுமே தெரியாது என்று கற்பனை செய்துக் கொண்டார்..எனவே,  பாபா தன் பக்தர் நானா சாஹேப்பின் அறியாமையை நீக்குவதற்காக பகவத்கீதை யின் செய்யுளில்   மறை ஞான விளக்கத்தை எடுத்துக்கூறி கர்வத்தைப் போக்கினார்...இந்த  நிகழ்வு நடந்தது எப்போது என்றால்,  பாபாவிடம் கூட்டம் திரளத் தொடங்குவதற்கு முன்புள்ள காலக்கட்டமாகும் ...அக்காலக்கட்டத்தில் தன்  அடியவர்களிடம் பாபா, தனியாக உரையாடல் நிகழ்த்துவதுண்டு.  நானா அவரருகில் பாபாவின் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தார்...

பாபா :  நானா, உனக்குள்ளே என்ன பேசிக்கொண்டு இருக்கின்றாய் என்று கேட்டார் பாபா...

நானா :  வடமொழியிலிருந்து ஒரு ஸ்லோகத்தை நான் ஒப்புவித்துக் கொண்டிருக்கின்றேன் என்று  நானா பதில் கூறினார்...

பாபா :  என்ன சுலோகம்...?

நானா :  பகவத்கீதையிலிருந்து ஒரு செய்யுள்....

பாபா :  அதைப் பலமாகக் கூறு என்று கேட்கின்றார்..

நானா :  (பகவத்கீதை அத்தியாயம்  நான்கில், முப்பத்து நான்காவது  ஸ்லோகத்தைப் பின்வருமாறு ஒப்பித்தார்.. 

தத்வித்தி ப்ரணிபாதேனே பரிப்ரஷ்னேன ஸேவயா உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ்தத்வ தர்ஷின..

பாபா : அது உனக்குப் புரிகிறதா...?

நானா :  ஆம்

பாபா :  அப்படியானால் என்னிடம் அதை விளக்கமாகக்  கூறு....

நானா :  சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தும், குருவிடம் கேட்டும், பணிவிடை செய்தும், இந்த ஞானம் என்பது என்ன என்பதை அறிவாயாக... அப்போது உண்மை  ஞானத்தின் சத்பொருளை (பிரம்மத்தை) எய்திய அந்த ஞானிகள், ஞானோபதேசத்தை உனக்கு நல்குவார்கள் என்பது அதன் பொருள்.

பாபா :  செய்யுள் முழுவதற்குமான இத்தகைய திரள் கருத்து எனக்குத் தேவையில்லை.  ஒவ்வொரு சொல்லுக்கும் அதன் இலக்கண வேகம், பொருள் ஆகியவற்றை எனக்குச் சொல்வீராக...பின்னர் நானா அதைப் பதம் பதமாக விவரித்தார்...

பாபா :  வெறுமனே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தால் போதுமா....?

நானா :  ப்ரணிபாத என்ற சொல்லுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் என்னும் பொருள் தவிர வேறு எப்பொருளும் எனக்குத் தெரியாது ...

பாபா :  பரிப்ரஷ்னா என்றால் என்ன....?

நானா :  கேள்வி கேட்டல் என்பது பொருள்..

பாபா :  ப்ரஷ்னா என்றால் என்ன பொருள்...?

நானா :  அதுவே (கேட்டல்)

பாபா :  பரிப்ரஷ்னாவைப் போல் ப்ரஷ்னாவும் அதே பொருளை உணர்த்தினால் வியாஸர் ஏன் பரி என்னும் அடைமொழியை முன்னால் சேர்த்தார்....?  வியாஸர் பைத்தியமாய் இருந்தாரா....?

நானா :   பரிப்ரஷ்னாவுக்கு அதைத்தவிர வேறெந்த பொருளும் எனக்குத் தெரியாது.

பாபா :  'சேவா' அது எத்தகைய சேவையைக் குறிக்கின்றது....?

நானா :  நாங்கள் எப்போதும் செய்துக் கொண்டிருக்கும் சேவையைத்  தான்.

பாபா :  அத்தகைய சேவை செய்தால் போதுமா...?

நானா :  'சேவை' என்ற சொல் அதைத்தவிர வேறு எதைக் குறிக்கிறது என்று எனக்குத் தெரியாது...

பாபா :  அடுத்த வாக்கியத்தில் 'உபதேஷ்யந்தி தே ஞானம்' என்பதில் ஞானம் என்ற சொல்லுக்கு வேறு எந்த சொல்லையாவது போட்டு அதை அங்ஙனம் படிக்க முடியுமா...?

நானா :  ஆம்.

பாபா :  என்ன சொல்...?

நானா :  அஞ்ஞானம் என்ற சொல்..

பாபா :  இந்தச் சொல்லைக் போட்டு (ஞானத்துக்குப் பதில்) செய்யுளிலிருந்து ஏதாவது பொருள் உணரப்படுகிறதா...? 

நானா :  சங்கரபாஷ்யம் அத்தகைய பொருள் தரும் அமைப்பு எதையும் தரவில்லை.

பாபா :  அவர் தராததைப் பற்றி இலட்சியம் செய்யாதே... அஞ்ஞானம் என்ற சொல் என்னும் சிறந்த பொருளை உணர்த்துமென்றால், அதை உபயோகிப்பதற்குத் தடை ஏதும் உண்டா...?

நானா :  அஞ்ஞானம் என்பதை அதில் வைத்து பொருளை உணர்வது எவ்வாறு என்பது எனக்கு விளங்கவில்லை. 

பாபா :  கிருஷ்ணர் அர்ஜுனனை ஞானிகளையும், தத்துவ தரிசிகளையும் நாடி அவர்களை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து தத்துவ விசாரணையையும், சேவையையும் செய்யுமாறு ஏன் சொல்கிறார்...?  கிருஷ்ணர் தாமே ஒரு தத்துவதரிசியும் உண்மையில் ஞானரூபமுமேயல்லவா...?

நானா :  ஆம்...  அங்ஙனமேயானால் அவர் அர்ஜுனனிடம் ஞானிகளை அணுகுமாறு ஏன் குறிப்பிட்டார் என்பது எனக்குப் புரியவில்லை...?

பாபா:  இதை நீ புரிந்துக் கொள்ளவில்லையா...?

நானா செருக்குக் குலைவுற்றார்...கர்வம் அழிக்கப்பட்டது..  பின்னர் பாபா விவரிக்க ஆரம்பித்தார்.... 

ஞானிகளின் முன்னால் வெறுமனே சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பது மட்டும் போதாது.  நம் சத்குருவிடம் சர்வவாஸ்வ அதாவது பரிபூரண சரணாகதியடைந்து  சமர்ப்பணம்  செய்ய வேண்டும்..கேள்வி கேட்டால் மட்டும் போதாது.  ஒழுங்கற்றமுறையிலும், குருவை  சிக்கலில் மாட்டிவிடும் வகையிலும் கேட்கக்கூடாது... விடைகளிலுள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டவோ அல்லது பயனற்ற ஆர்வத்துடன் கேட்கப்படவோ கூடாது..அது ஆத்மார்த்தமான உண்மை  மனப்பான்மையுடன், ஆன்மிக முன்னேற்றம் அல்லது மோட்சத்தை அடையும் நோக்கத்துடன் இருக்கவேண்டும்..

சேவை என்பது ஏதோ ஒரு பணிசெய்வது அல்ல...நான் செய்கின்றேன் அல்லது செய்ய மறுக்கவும் உரிமையுள்ளவன் என்பது போன்ற உணர்வுகளைத் தன்னுள் இருத்திக்கொண்டு செய்வது சேவையன்று... உடலின் அதிபதி நான் அல்ல என்றும் உடல் குருவுக்கே அர்ப்பணமானது என்றும், அவருக்குச் சேவை செய்வதற்காக மட்டுமே உளதாய் இருக்கிறது என்றும் உணரவேண்டும்...இதன்படி நடந்தால் முந்தைய ஸ்லோகத்தில் குறிப்பிட்ட 'ஞானம்' என்பது எதனைக் குறிக்கிறது என்று சத்குரு உணர்த்துவார்..

சத்குரு அஞ்ஞானத்தைப் போதிக்கிறார் என்று கூறுவதன் பொருள் நானாவுக்கு விளங்கவில்லை...

பாபா :  எங்ஙனம் ஞானோபதேசம் செயற்படுத்தப்படுகிறது..?  அறியாமையை அழிப்பதே ஞானம்.. கீதை அத். 18-ல் 66வது சுலோகத்திற்கு ஞானேஷ்வரியின் விளக்கச்செய்யுள் 1396-ல் கூறப்படுவதாவது : 

"ஓ..! அர்ஜுனா, அறியாமையை அகற்றுவது இத்தகையது, அதாவது கனவும், தூக்கமும் மறைந்து விடுமானால் நீ உன்னுடையவனே.. அது அங்ஙனமே", மற்றும் கீதை அத்தியாயம் 5,  சுலோகம் 16- க்கு ஞானேஷ்வரியின் விளக்கச்செய்யுள் 83 கூறுவதாவது, அறியாமையை அழிப்பது என்பதைத் தவிர ஞானத்தில் மாறுபாடாகவோ தற்சார்புடையதாகவோ வேறு எதுவும் உள்ளதா...? (இல்லையென்பது குறிப்பு).  இருளைத் துரத்துவது என்றால் ஒளி எனப்பொருள்.

த்வைதத்தை அழிப்பதென்றால் அத்வைதம் எனப்பொருள்...த்வைதத்தை அழிப்பதுபற்றிப் பேசும் போதெல்லாம் நாம் அத்வைதத்தைப்பற்றிப் பேசுகிறோம்...இருளை அகற்றுவது பற்றிப் பேசும்போதெல்லாம் ஒளியைப் பற்றிப் பேசுகிறோம்...  அத்வைத நிலையை நாம் உணர வேண்டுமென்றால், நம் மனதிலுள்ள த்வைத உணர்வை நீக்கவேண்டும். அதுவே அத்வைத நிலையை நாம் உணர்வதாகும்...த்வைத நிலையை மனதில் கொண்டுள்ள ஒருவன், அத்வைத நிலையைப்பற்றி எங்ஙனம் பேசமுடியும்...?  அப்படி ஒருவன் பேசுவானாகில் அதே நிலையை அடைந்தாலொழிய அதை எங்ஙனம் ஒருவன் அறியமுடியம்...?  உணர முடியும்...?

மீண்டும் கூறுமிடத்து சீடனும் சத்குருவைப் போலவே உண்மையில் ஞானத்தின் பண்புருவமானவன்..  ஏக மனப்பான்மை, பற்றற்று வாழ்தல், உணரும் நிலை, மிகச்சிறந்த அமானுஷ்ய சத்துவநிலை, ஒப்பற்ற செயலாற்றல், ஐஸ்வர்ய யோகம் (தெய்வீக சக்திகள்) இவைகளிலேயே சீடனுக்கும், குருவுக்குமுள்ள வேறுபாடு நிலவுகிறது...குரு நிர்குணமானவர், சச்சிதானந்தமானவர்...  உண்மையிலேயே மனித வர்க்கத்தை உயர்த்தி உலகை உய்விப்பதற்கே அவர் மானுட உருவம் எடுக்கிறார்...ஆனால் அதன் பொருட்டாக அவரது உண்மையான நிர்குணத்தன்மை எள்ளளவும் பாதிக்கப்படுவதில்லை.... 

அவர்தம் வியாபகம் (அல்லது உளதாயிருக்கும் தன்மை) தெய்வீக சக்தி, ஞானம் முதலியன குறைவதில்லை...  சீடனும் அதே ஸ்வரூபத்தில்தான் இருக்கின்றான்..  கணக்கற்ற பிறப்பு, இறப்புக்களுடைய முன்வினைகளின் விளைவானது அறியாமை என்னும் ரூபத்தில் அவன் பார்வையினின்று, தான் சுத்த சைதன்யைன் என்பதை அறியவிடாமல் மறைக்கிறது...

(கீதை : அத். 5, சுலோகம். 15)  இங்ஙனமே மேலே கூறப்படும் விதமாக),

அவன் 'நான் ஜீவன்' தான் ஒரு தாழ்வான பரிதாபமான ஜீவன் என்று எண்ணுகின்றான்... சீடனின்  அறியாமையாகிய இவ்வேர்களை குரு கிள்ளியெறிந்து அவனுக்கு உபதேசம் அல்லது அறிவுரை அளிக்கின்றார்.. 

சீடனானவன் தாழ்வான ஈனமான  எல்லையற்ற பிறவிகளை எடுத்து,  பல முடிவில்லாத பிறப்புகளினால் திக்பிரமை அடைந்துள்ள சீடனுக்கு குரு நூற்றுக்கணக்கான பிறப்புகளில் "நீ கடவுள், நீ வலிமையுள்ளவன், நீ செல்வமுள்ளவன்' என்று உபதேசித்து அறிவுறுத்துகிறார்... பின்னர் தானே உண்மையில் கடவுள் என்பதை சிறிதளவு உணர்கிறான்.. சீடன் உழன்று கொண்டிருக்கும்  மாயத் தோற்றமானது யாதெனின்  தானே உடலென்றும், தானே ஜீவனென்றும் (அகங்காரம்), பரமாத்மாவாகிய கடவுளும், உலகமும் தன்னிலிருந்து வேறுபட்டவைகள் என்பதுமாகும்...இது கணக்கற்ற முற்பிறவிகளில் அவன் மரபுரிமையாகப் பெற்ற பிழையானதொரு கருத்தாகும்... மாயையின் அடிப்படையிலான செயல்களால் மகிழ்ச்சி மற்றும்  துயரம் இரண்டையும் கலந்து அனுபவிக்கிறான் சீடன்.

இம்மாயையை, இப்பிழையை, இந்த அறியாமையின் வேரை அகற்றுவதற்கு அவன் தனக்குள்ளே  விசாரணை செய்யத் தொடங்க வேண்டும்...எங்ஙனம் இந்த அறியாமை உண்டாகிறது..? அது எங்கு உள்ளது...?  என்பதன்  மூல சூட்சமத்தை சீடனுக்கு  உணர்த்துவது தான் குரு உபதேசம் என்பதாகும்.. 

அஞ்ஞானம் என்பது கீழ்க்கண்டவையே ...

 1.  நான் ஒரு ஜீவன் (ஜந்து)

  2.  உடம்பே ஆத்மா (நானே உடல்)

  3.  கடவுள், உலகம், ஜீவன் இவை    எல்லாம் வேறானவை

  4.  நான் கடவுளல்ல

  5.  உடல், ஆத்மா அன்று என்பதை அறியாமலிருத்தல்

  6.  கடவுள், உலகம், ஜீவன் இவைகள் எல்லாம் ஒன்று என்பதை அறியாமலிருத்தல்

இப்பிழைகளெல்லாம் அவனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டாலன்றி ஜீவன், உலகம், உடம்பு இவைகளெல்லாம் என்ன..? அவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவா..!, ஒன்றுக்கொன்று மாறுபாடானவையா..!  அல்லது அனைத்தும் ஒன்றேதானா என்பதை சீடன் அறிந்துகொள்ள முடியாது....  

இவைகளை அவனுக்குப் போதித்து, அவனது அறியாமையை அழிப்பதே  ஞானம்..அஞ்ஞானம் இவைகளின் போதனைகளாகும்.. ஞானமூர்த்தியாகிய ஜீவனுக்கு ஏன் இந்த ஞானம் போதிக்கப்பட வேண்டும்..?  உபதேசம் என்பது சீடனின் சிறுத் தவறைச் சுட்டிக்காட்டி அறியாமையை அழிக்கவேயாகும்....

பாபா தொடர்ந்தார்:..  'ப்ரணிபாத' என்பது சரணாகதி...அதாவது உடலால், உள்ளத்தால், செல்வங்களுடன் சரணாகதியடைய வேண்டும்.. ஏன் கிருஷ்ணர் அர்ஜுனனை வேறு ஞானிகளைக் கேட்கும்படி கூறுகிறார்...?

நல்ல பக்தன் யாவற்றையும் வாசுதேவன் எனக் கொள்கிறான்..(கீதை அத்.7, சுலோகம் 9)

எந்த குருவும் அடியவருக்குக் கிருஷ்ணராகின்றார்... குருவானவர் சீடனை வாசுதேவனாக நினைக்கின்றார்... இவர்கள் இருவரையும் கிருஷ்ணர் தம்முடைய பிராணனும், ஆத்மாவாக்கிக் கொள்கிறார். (கீதை அத். 7, சுலோகம் 18 ஞானதேவரின் விளக்கம்)  அத்தகைய பக்தர்களும், குருவும் இருப்பதைக் கிருஷ்ணர் அறிந்திருப்பதால் அவர்களின் பெருமை உயர்ந்து திகழுதற் பொருட்டாகவும்,  அனைவரும் அறிதற்பொருட்டாகவும் அர்ஜுனனிடம் அவர்களைப்பற்றிக் கூறுகின்றார்...

🔥சீரடி பாபா , தன் ஆத்மார்த்தமான பக்தர்களாகிய, ஶ்ரீமான் பாபு சாஹேப் பூட்டியின் வாதா கட்டும் எண்ணமும்  மற்றும்  தீஷித் மற்றும் ஷாமா ஆகியோரின் கனவில் தோன்றி காட்சியளித்து,  வாதாவை கட்டுமாறு  அறிவுருத்திய பின், எவ்வாறு  வாதா என்ற சமாதி மந்திரைக் கட்டினார்கள் என்ற  நிகழ்வின் விளக்கமும், மேலும்  எவ்வாறு முரளிதரருக்காக கட்டப்பட்ட மேடையில் பாபாவின் புனித உடல்   சமாதியாக்கப்பட்டு சமாதி மந்திரானது என்பதன் அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்... 🔥  

தாம் நிறைவேற்றி முடித்தற் பொருட்டாக ஆர்வம் கொண்ட விஷயங்கள் குறித்து பாபா பேசியதோ வெற்று ஆர்ப்பரிப்பு செய்ததோ கிடையாது... ஆனால் நிதானமாக, நிச்சயமாக தீர்வுகள்  கிட்டுமாறு சூழ்நிலைகளையும், சுற்றுப்புறங்களையும் அவர் வெகு  திறமையாக அமைத்தது குறித்து மக்கள் ஆச்சரியப்பட்டனர்...  இந்தக் கருத்துக்கு  ஏற்றவாறு நடந்த  நிகழ்ச்சித் தான்  சமாதிமந்திரின் கட்டிடவேலையாகும்...

நாக்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற கோடீஸ்வரரான ஸ்ரீமான் பாபு சாஹேப் பூட்டி தனது குடும்பத்துடன்  சீரடியில் வசித்து வந்தார்... அங்கு தனக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று வேண்டும் என்று அவர் மனதில் எண்ணம் ஒன்று எழுந்தது....இந்த எண்ணம் கூட பாபா தோற்றுவித்தது தான் என்பது தான் சரி....  இதற்கு  சில நாட்களுக்குப் பிறகு தீஷித் வாதாவில் உறங்கிக் கொண்டிருக்கும்போது அவர் ஒரு காட்சி கண்டார்....

பாபா அவர் கனவில்தோன்றி அவருக்குச் சொந்தமான வாதா ஒன்றை கோவிலுடன் கட்டும்படி பணித்தார்.அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஷாமாவுக்கும்  அதே மாதிரி காட்சி தோன்றியது....பாபு சாஹேப் கண்விழித்தபோது, ஷாமா அழுதுக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.  ஏன் என்று அவரைக் கேட்டார் சாஹேப்...மேலும்  பாபா தம் கனவில், தமதருகில் நெருங்கிவந்து "வாதாவைக் கோவிலுடன் கட்டுவீராக..., நான் உங்களுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்வேன்...!" எனத் தெளிவாக ஆணையிட்டார்.  பாபாவின் இனிமையும், அன்பும் பொருந்திய மொழிகளைக் கேட்டு நான் உணர்ச்சிவசப்பட்டேன்....என் தொண்டை அடைத்தது.. எனது கண்களில் நீர் பொங்கி வழிந்தது...  நான் அழத் தொடங்கிவிட்டேன் என்றார்...    

பாபு சாஹேப் இருவரது கனவும் ஒத்திருந்ததைக் கண்டு ஆச்சயரியப்பட்டார்.. பணமும், வசதியும் பொருந்திய அவர் அங்கு ஒரு வாதா கட்டத் தீர்மானித்தார்... மாதவ்ராவுடன் கூடி ஒரு திட்டத்தை  தீட்டினார்...காகா சாஹேப் தீஷித்தும், அதை ஆமோதித்தார்....பாபாவின் முன்னர் அது சமர்ப்பிக்கப்பட்டபோது அவரும் அதை உடனே அங்கீகரித்தார்...பின்னர் கட்டிடவேலை முறைப்படி ஆரம்பமானது...  ஷாமாவின் மேற்பார்வையில் கீழ்த்தளம், உக்கிரான அறை, கிணறு முதலியன பூர்த்தியாயின.  லெண்டிக்குப் போகும்போதும் வரும்போதும், பாபாவும் சில கட்டிட    முன்னேற்றங்களுக்கான  யோசனை தெரிவித்தார்.  தொடர்ந்து மேற்படி வேலைகள்  அனைத்தும் பாபு சாஹேப் ஜோகிடம் ஒப்படைக்கப்பட்டது...அது நிறைவேறிக் கொண்டிருக்கும் போது திறந்த முற்றம் அல்லது மேடை இருக்கவேண்டும் என்றும்,  நடுவில் ஸ்ரீ முரளீதரின் உருவம் (கண்ணன் குழலுடன்) ப்ரதிஷ்டை செய்யப்பட வேண்டுமென்றும் பாபு சாஹேப் பூட்டிக்கு எண்ணம் உதித்தது.. இவ்விஷயத்தை பாபாவிடம் கூறி  பாபாவின்  சம்மதத்தைப் பெறுவதற்கு அவர் ஷாமாவைக் கேட்டுக் கொண்டார்...  பாபா வாதாவைக் கடந்து சென்றுகொண்டிருக்கும்போது ஷாமா இதைப்பற்றி அவரிடம் கேட்டார்.  ஷாமா கூறியதைக் கேட்டு பாபா சம்மதித்து "கோவிலின் வேலை முடிந்ததும் நான் அங்கு தங்குவேன்" என்றார்....

பின்னர் வாதாவை உற்றுப்பார்த்து மேலும் தொடர்ந்தார்...  "வாதா பூர்த்தியானதும் நாமே அதை உபயோகித்துக் கொள்ளலாம்..நாம் அங்கு வாழ்வோம், நடப்போம், விளையாடுவோம்,  ஒருவரையொருவர் கட்டியணைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்".  பின்னர் ஷாமா பாபாவிடம் வாதாவின் மத்திய மண்டபத்துக்கு அஸ்திவாரம் போட இது மங்களம் நிறைந்த நேரமா   என்று கேட்டபோது பாபா சரியெனக் கூறினார்...  ஷாமா ஒரு தேங்காயை உடைத்து வேலையை ஆரம்பித்தார்...உரிய சமயத்தில் வேலை முடிவடைந்து முரளீதரின் சிலை ஒன்றுக்கும்  ஆர்டர்  கொடுக்கப்பட்டது...  ஆனால் அது தயாராகும் முன்னரே ஒரு புதிய நிகழ்ச்சி நேரலாயிற்று.. 

பாபா மிகவும் கடுமையாக நோயுற்று இயற்கை எய்தும் தருணத்தில் இருந்தார்...பாபா இயற்கை எய்தினால் தமது வாதா பாபாவின் திருவடிகளால் புனிதப்படுத்தப்பட இயலாமல்  போகும் என்றும், அவரது பணம் முழுவதும் (சுமார் ஒரு இலட்சம் ருபாய்) வீணாக்கப்பட்டுவிட்டது என்றும்,  பூட்டி நினைத்து மிகவும் வருத்தமும், மனச்சோர்வும் அடைந்தார்.  இயற்கை எய்துவதற்குச் சிறிது தருணத்துக்கு முன், "என்னை வாதாவில் வையுங்கள்" என்ற பாபாவின் மொழிகள் பாபு சாஹேபை மட்டுமல்ல, மற்ற அனைவரையுமே தேற்றின...உரிய தருணத்தில் பாபாவின் புனிதமேனி, முரளீதரருக்காகத் திட்டமிடப்பட்ட கோவிலின் மேடையில் சமாதியாக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டது.  பாபா தாமே முரளீதரரானார்.  வாதாவும் சாயிபாபாவின் சமாதிமந்திர் (கோவில்) ஆனது...பாபாவின்  அற்புதமான வாழ்வு ஆழங்காண இயலாதது... சமாதி மந்திர் கட்டும் பணியில் ஈடுபட்ட அனைவரும் பாபு சாஹேப் பூட்டி, தீஷித், ஷாமா மற்றும்   கட்டிட நிபுணர்கள் போன்றோர்  அனைவரும்  ஆசீர்வதிக்கப்பட்டவர்...  அதிர்ஷ்டம் உள்ளவர்... வாதாவில் பாபாவின் புனிதமான  புனித தேகம் சமாதியாக்கப்பட்டு சமாதி மந்திராக அழைக்கப்பட்டது ..

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக ..அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏼🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக