சனி, ஜூன் 19, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு... அத்தியாயம் நாற்பது (40)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான ஶ்ரீசாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏 அத்தியாயம் ::நாற்பது (40)🙏

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம்  செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.... 

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்... நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...

மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...

மேலும் இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

🙏அத்தியாயம் ::..நாற்பது (40)🙏

🙏முன்னுரை..🙏

பாலாசாஹேப் தேவ் என்ற பரம பக்தருடைய தாயார் அனைவரின் நல்வாழ்வுக்காகவும் விரதங்களை அனுஷ்டித்து முடிவில் நிறைவு செய்வதற்கான நடத்தப்பட்ட  'உத்யாபன்' விழாவிற்கு, எவ்வாறு பாபா சந்நியாசி வடிவில் மற்ற இருவருடன் சென்று விருந்து உண்டார் என்பதைப்  பற்றிய அனுபவ  விளக்கவுரை....

ஹேமாட்பந்தின் கனவில் தோன்றி உம் வீட்டிற்கு உணவருந்த வருவேன் என்று அறிவுருத்தியப் பிறகு ,எவ்வாறு பாபா  சித்திர ரூபத்தில் ஹேமத்பந்தின்  வீட்டுக்கு  சென்று விருந்தில் கலந்துக்கொண்டார் என்பதன் அனுபவ விளக்கவுரை....

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்....

🔥 முதலில் பாலாசாஹேப் தேவ் என்ற பரம பக்தருடைய தாயார் அவர்கள்,  அனைவரின் நல்வாழ்வுக்காகவும் விரதங்களை அனுஷ்டித்து முடிவில் நிறைவு செய்வதற்கான நடத்தப்பட்ட  'உத்யாபன்' விழாவிற்கு,  எவ்வாறு பாபா சந்நியாசி வடிவில் மற்ற இருவருடன் சென்று விருந்து உண்டார் என்பதைப்  பற்றிய அனுபவ  விளக்கவுரையை இங்கு காண்போம்...🔥

சத்குருநாதர் சீரடிபாபா, தம்மை நாடி வரும் அடியவர்களுக்கு  லௌகீக, மற்றும்  ஆன்மிக விஷயங்களைப் பற்றி எளிமையான உரைகள் மூலமாக  உயர்ந்த நெறிமுறைகளோடு வாழக்கூடியத் தன்மையைப் புகட்டினார்..மேலும் தம் பக்தர்கள் உயர்ந்த இறைப்பண்புகளுடன் வாழ வாழ்க்கைப்  பாதையையும், ஞானப் பாதையையும் ஒரு சேரப் புகட்டினார்.. ஒவ்வொரு பக்தர்களையும், அவரவர்கள்  வாழ்வின் இலட்சியத்தை  எய்தும் வண்ணம் அவர்களை ஊக்குவித்து மகிழ்வடையச்  செய்கிறார்..தன்னுடையப் பக்தர்களின் சிரத்தில் தம் கரங்களினால்  ஆசீர்வதிக்கும் போது,  தமது சக்தியை அவர்களிடம் மாற்றி, நான் என்ற அகந்தையையும், அகங்காரத்தையும்  அழிக்கிறார்.  த்வைத உணர்வின்றி, வித்தியாசமின்றி பக்தர்கள் கீழே வீழ்ந்து வணங்கும்போது, அவர்களை மிகுந்த தாய்மையுணர்வுடன்  அரவணைத்து  ஆசிர்வாதம் செய்கின்றார்...

மழைக்காலத்தில் கடல், ஆறுகளுடன்  கலப்பதுபோல், தம்முடைய  பக்தர்களுடன் ஒன்றாகி அவர்களுக்குத் தம் ஆற்றலையும், அனுக்கிரகத்தையும்  அளிக்கிறார்...கடவுளின் லீலைகளை  மட்டும் பாடிக் கொண்டிருப்போருக்கு நிகராக அல்லது அவர்களைக் காட்டிலும் கடவுளின் அடியவர்களின் லீலா வினோதங்களைப் பாடுவோர் பாபாவுக்குப் பிரியமானவர்கள் என்பது இதன்மூலம் அறியப்படுகிறது...  தற்போது இவ்வத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ள  அனுபவ நிகழ்வின் விளக்கவுரைகளைக் காண்போம்....

தாணே ஜில்லாவிலுள்ள டஹாணூ மம்லதார் திரு .பாலாசாஹேப் தேவ் என்ற பரம பக்தருடைய தாயார் அவர்கள் பலவிதமான பூஜைகள் செய்து,  பிரார்த்தனைகளைச் சங்கல்பம் செய்து, அனைவரின் நல்வாழ்வுக்காகவும் விரதங்களை அனுஷ்டித்து முடிவில் நிறைவு செய்வதற்கான நடத்தப்பட்ட  'உத்யாபன்' விழா நடத்த ஏற்பாடு செய்தார்.. நூறு அல்லது இருநூறு அந்தணர்களுக்கு உணவளிப்பதும் இவ்விழாவுடன் சேர்ந்தவொரு அம்சமாகும். தேவ், விழாவுக்கு ஒரு நாளை நிச்சயித்தார்...  சாயிபாபாவின் அனுக்கிரகமும், விஜயத்தாலன்றி விழா உரியமுறையில் பூர்த்தி அடையாதாகையால், விழா விருந்தில் கலந்துகொள்ள பாபாவிடம் அறிவுருத்துமாறு,  அவரின்(தேவ்) சார்பில் பாபாவிடம் கூற பாபு சாஹேப் ஜோகிற்கு  ஒரு கடிதம் எழுதியிருந்தார்..பாபாவிடம் பாபு சாஹேப் ஜோக் அக்கடிதத்தைப் படித்துக் காண்பித்தார்.  பாபா, தேவின் தூய்மையான, உள்ளபூர்வமான அழைப்பினை கவனத்துடன் கருத்திற்கொண்டு கூறினார், "என்னை நினைவில் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்...எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, இரயிலோ, அல்லது விமானமோ தேவையில்லை...என்னை எவன் அன்புடன் கூப்பிடுகின்றானோ அவனிடம் ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துக்கொள்கிறேன்...நம்மில் மூன்றுபேர் (மூவர்) நான், நீ, மற்றும் ஒருவன் சென்று அவ்விழாவில் கலந்துக் கொள்வதாக அவருக்கு ஒரு மகிழ்வான பதில் எழுது" என்றார் பாபா...

ஜோக், பாபா கூறியதை தேவிடம் தெரியப்படுத்தினார்.. பின்னர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாராயினும், பாபா தாமே நேரிடையாக ராஹதா, ரூய், நீம்காவன் முதலிய இடங்களைத் தவிர வேறு இடங்களுக்குச் சென்றதில்லை என்று அவருக்குத் தெரியும்....பாபா சர்வவியாபியாய் இருப்பதால் அவரால் இயலாதது ஒன்றும் இல்லை என்றும், அவர் விரும்பினால் எந்த ரூபத்திலும் திடீரென்று வந்து தமது சொற்களை நிறைவேற்றலாம் என்றும் எண்ணினார்...இதற்கு சில நாட்களுக்கு முன்னர் வங்காள உடையிலுள்ள ஒரு சந்நியாசி, பசுக்களைப் பாதுகாத்தலே தனது குறிக்கோள் என்றுக்  கூறிக்கொண்டு, டஹாணு இரயில் நிலைய அதிகாரியிடம்  நிதி வசூலிக்க வந்தார்.  பின்னவர் அவரை ஊருக்குள் சென்று  தேவ்வைப் பார்த்து, அவரின் உதவியால் நிதி சேகரிக்கக் கூறினார்...அத்தருணம் மம்லதார் தேவ்  அங்குவர நேர்ந்தது..

இரயில் நிலைய அதிகாரி மசந்நியாசியை தேவ்ற்கு  அறிமுகப்படுத்தினார்.. இருவரும் மேடையில் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். தேவ், வேறு ஒரு தர்ம காரியத்திற்காக நிதி வசூலிக்க,  ஏற்கனவே ராவ் சாஹேப் நரோத்தம் ஷெட்டி என்ற பெரிய மனிதர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், பிறிதொரு நிதி வசூலைத் தற்போது ஆரம்பிப்பது நன்றல்ல என்றும், அவர் இரண்டு அல்லது நான்கு மாதங்களுக்குப் பின்னர் அவ்விடத்துக்கு விஜயம் செய்தால் நல்லதென்றும் சந்நியாசியிடம் கூறினார்....இதைக்கேட்டு அத்துறவி அவ்விடத்தைவிட்டு அகன்றார். 

ஒரு மாதத்திற்குப் பின்னர் அத்துறவி ஒரு குதிரை வண்டியில் காலை சுமார் பத்து  மணியளவில் வந்து தேவ்வின் வீட்டின்முன் நின்றார்...தேவ் அவர் நிதிக்காக வந்திருப்பதாக நினைத்தார்... விழாவுக்கான ஏற்பாடுகளில் அவர் ஈடுபட்டிருப்பதைக் கண்டு, அத்துறவி தாம் பணத்துக்காக வரவில்லையென்றும், உணவிற்காக அங்கு வந்திருப்பதாகவும் கூறினார்...

தேவ் :  மிக்க நன்று...மிக்க மகிழ்ச்சி..உங்களுக்கு நல்வரவு...இவ்வீடு தங்களுடையது.. 

துறவி :  என்னுடன் மற்றும் இருவர் இருக்கின்றார்கள்.. அழைத்து வரட்டுமா என்று கேட்கின்றார்..

தேவ் :  நல்லது, அவர்களையும் அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று கூறுகின்றார்...

விருந்து நடைபெற இன்னும் இரண்டு மணிநேரம் இருந்ததால், எங்கு சென்று அவர்களை அழைத்து வரவேண்டுமென தேவ் கேட்டார்...  "அது தேவையில்லை...  குறிப்பிட்ட நேரத்தில் நானே அவர்களுடன் வருவேன்" என்றார்... தேவ் அவரை நடுப்பகலில் வரும்படி கூறினார்...  சரியாக மதியம் பன்னிரண்டு மணிக்கு அம்மூவரும் வந்து விருந்தில் பங்கேற்று, விருந்து உண்டபின் சென்றுவிட்டனர்... 

விழா முடிந்ததும் தேவ், பாபாவின் வாக்குறுதி மீறலைக் குறித்து வருந்தி பாபு சாஹேப் ஜோக்கிற்கு ஒரு கடிதம் எழுதினார்..  ஜோக் பாபாவிடம் அக்கடிதத்துடன் சென்று அதைத் திறக்கும் முன்னரே பாபா, "ஆ...! நான் வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக அவன் கூறுகிறான்...விருந்துக்கு நான் மற்ற இருவருடன் செல்லவே செய்தேன்... ஆனால் அவன் என்னைப் புரிந்துக் கொள்ளவில்லை..  உணர்ந்துக்கொள்ளவில்லை..பின்னர் எதற்காக என்னை அழைக்கவேண்டும்...?  சந்நியாசி நிதி கேட்க அவன் இல்லத்திற்கு  வந்திருப்பதாக அவன் எண்ணினான்...அதுப் பற்றி அவனது ஐயத்தை நான் நீக்கவில்லையா...?  மற்றும் இருவருடன் வருவதாக நான் கூறவில்லையா...? மூவரும் உரிய நேரத்தில் வந்து உணவு உட்கொள்ளவில்லையா...? 

இதோ பாருங்கள்...எனது மொழிகளைக் காப்பதற்கு நான் எனது உயிரையே தியாகம் செய்வேன்...எனது மொழிகளுக்கு மாறுபட்டு நான் இருக்கவே மாட்டேன்" என்றார்...  இப்பதில் ஜோக்கின் உள்ளத்தை மகிழ்வடையச் செய்தது...இவை அனைத்தையும் தேவ்வுக்குத் தெரிவித்தார்.அதை அவர் படித்தவுடனே ஆனந்தக் கண்ணீர் விட்டார்...வீணாக பாபாவைக் குற்றம் கூறியதற்காக தம்மைத்தாமே கடிந்துக்கொண்டார்...  துறவியின் முந்தைய வருகையினால், தான் எவ்வாறு ஏமாற்றப்பட்டார் என்பதையும், விருந்தில் கலந்துக்கொள்வதற்கு  தாம் இருவருடன் வருவதாகக் கூறிய துறவியின் கூற்றிலுள்ள குறிப்பை தான் எங்ஙனம் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார் என்பதையும் குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டார்.. 

அடியவர்கள் தாங்களே முழுமையாக சத்குருவிடம் சரணாகதி அடையும்போது, அவர்தம் வீட்டில் நடைபெறும் மதச்சடங்குகள் உரியமுறையில், தேவையான சம்பிரதாயங்களுடன் நடத்தப்படுகின்றனவா என்று அவர் கவனிக்கிறார் என்பதை இக்கதை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது.... 

🔥ஹேமாட்பந்தின் கனவில் தோன்றி உம் வீட்டிற்கு உணவருந்த வருவேன் என்று அறிவுருத்தியப் பிறகு ,எவ்வாறு பாபா  சித்திர ரூபத்தில் ஹேமத்பந்தின்  வீட்டுக்கு  சென்று விருந்தில் கலந்துக்கொண்டார் என்பதன் அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்🔥

சீரடிபாபா, தமது சித்திர ரூபத்தில் தோன்றி தமது அடியவரின் ஆவலை எவ்வாறு  பூர்த்தி செய்தார் என்பதைப் பற்றி இங்கே காண்போம்... 1917-ஆம் ஆண்டு பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் ஹோலிப் பண்டிகையன்று காலை ஹேமாட்பந்த்க்கு ஒரு காட்சி தோன்றியது... பாபா அவரது கனவில் நன்றாக உடையணிந்த ஒரு துறவியைப்போன்று தோன்றி  அவரை எழுப்பி அன்று உணவுக்காக அவரது இல்லத்திற்கு  வருவதாக அறிவுருத்துகின்றார்.. கண்விழித்து எழுந்த அவர் துறவியையோ அல்லது சாயியையோ  காணவில்லை...ஆனால் அவர் கனவு நினைவுக் கூறத்  தொடங்கிய போது, கனவில் பாபா  கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் ஞாபகத்தில் கொணர்ந்தார்.....

ஏழு ஆண்டுகளாக ஹேமாட்பந்த்  பாபாவுடன் அவர் மிக நெருங்கியத்  தொடர்புடையவராக இருந்தாலும்,  பாபாவையே எப்போதும் தியானித்தப்  போதிலும், பாபா உணவுக்காகத் தம் வீட்டுக்கு வருவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.  ஆயினும் பாபாவின் உபதேச  மொழிகளால் மனம் மகிழ்ந்து,  தமது மனைவியிடம் சென்று அன்று ஒரு புனிதமான நாளாக இருப்பதால் ஒரு துறவி விருந்தாளி உணவுக்காக வருகிறார் என்றும், அதிகமான உணவு தயார் செய்ய வேண்டுமென்றும் கூறினார்...அவள் விருந்தாளியைப் பற்றி யார்...?  எப்போது வருகிறார்கள்? எனக் கேட்டாள்...தமது மனைவியிடம்  உண்மையை அதாவது கனவினைப் பற்றித் தெளிவாகக்  கூறினார்.

பாபா, அவ்விடத்திற்கு (பாந்த்ரா) சீரடியிலிருந்து அங்குள்ள நேர்த்தியான உணவை விடுத்து, சாதாராணமான தங்கள் வீட்டு உணவை ஏற்க வருவாரா என்று அவள் ஐயத்துடன் கேட்டாள்...  ஹேமாட்பந்த் தன் மனைவியிடம், பாபா நேரிடையாக வரமாட்டார் என்றும், ஒரு விருந்தினர் ரூபத்தில் வருவார் என்றும் உறுதியளித்து இன்னும் சற்று அதிகமாக சாதம் வடிப்பதினால் நாம்  இழக்கப்போவது ஒன்றுமில்லை என்றும் கூறினார்..

இதன்பின்னர் விருந்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு  மதியத்திற்குள் அது தயாராகியது...ஹோலி வழிபாடும் செய்யப்பெற்று இலை போடப்பட்டது...அதைச் சுற்றிலும் கோலமிடப்பட்டது…. நடுஸ்தானம் விருந்தாளிக்கெனவும், மற்றவர்களுக்கு இரண்டு வரிசைகளிலும் இலைகள் போடப்பட்டன...  குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களும், மகன்கள், பேரன்கள், புத்திரிகள், மருமகன்கள் அனைவரும் வந்து தத்தமது இடங்களில் அமர்ந்தனர்.. பல்வேறுவித உணவுவகைகள் பரிமாறப்பட்டன...இது நிகழ்ந்துக் கொண்டிருக்கையில் அனைவரும் விருந்தாளிக்காக எதிர்பார்த்திருந்தனர்....    

மதியம் கடந்துவிட்டபோதிலும் ஒருவரும் வரவில்லை.. பின்னர் கதவு  தாளிடப்பட்டது... பின் அன்னசுத்தி (நெய்) விடப்பட்டது.. இதுவே உண்ண ஆரம்பிப்பதற்கு அடையாளம்... அக்கினிக்கு முறையான சமர்ப்பணமும், கிருஷ்ணருக்கு நிவேதனமும் கூட ஆயிற்று... குடும்பத்தினர் உண்ண ஆரம்பிக்கும் அதே தறுவாயில் வாசலில் காலடிச் சத்தம் தெளிவாகக் கேட்டது...ஹேமாட்பந்த் உடனே சென்று கதவைத் திறந்தார்...அலி முகமது, மௌலான இஸ்மு முஜாவர் ஆகிய இருவரைக் கண்டார்... உணவு இலையில்  தயாராக இருப்பதையும், குடும்பத்தினர் உண்ணத் தயாராக இருப்பதையும், அவ்விருவரும் கண்டுணர்ந்து  ஹேமாட்பந்த்திடம் மிகுந்த வருத்தம் தெரிவித்துத் தங்கள் குறுக்கீட்டுக்கு மன்னிப்புக் கோரினர்....

அவர்கள், "எங்களுக்காக நீங்கள் இருக்கையை விட்டு  எழுந்து  ஓடி வந்திருக்கிறீர்கள்...  மற்றவர்கள் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்...எனவே தயவுசெய்து தாங்கள்  இந்தப்  பொருளைப் பெற்றுக் கொள்ளுங்கள்...நாங்கள், அதன் வியத்தகு கதை முழுவதையும் தங்களுக்குச் சௌகரியப்படும்போது பின்னர் விவரிப்போம்" என்று கூறினார்கள்...இவ்வாறு கூறிக்கொண்டே பழைய செய்தித்தாள் ஒன்றை மேசையின்மேல் வைத்தார்கள்.ஹேமாட்பந்த் அதனைப் பிரித்துப் பார்க்கையில், அவருக்குப் பெரும் ஆச்சரியத்தையும், வியப்பையும் விளைவிக்கும் வகையில் சாயீபாபாவின் பெரிய அழகிய படம் (Bas-Relief) ஒன்றைக் கண்டார்...  உடம்பு முழுவதும் மயிர்க்கூச்செறிய, கண்களில் நீர்வழிய மிகவும் மனமுருகி தனது தலையைத்தாழ்த்தி படத்திலுள்ள பாபாவின் பாதங்களில் வைத்துக் கொண்டார்... பாபா இத்தகைய அனுக்கிரக லீலையால் தம்மை ஆசீர்வதித்திருப்பதாக கருதினார்...அறிவதற்கு ஆர்வம் மேலிட, அப்படத்தை அவர்கள் எப்போது வாங்கினார்கள் என்று கேட்டார்...

அலி முஹமது தாம் அதை ஒரு கடையிலிருந்து வாங்கியதாகவும், எல்லோரும் காத்திருப்பதால் அப்படத்தைப் பற்றிய எல்லா விவரங்களையும் பிறிதொரு சமயம் சொல்லுவதாகவும், மற்றவர்களுடன் அவரை உண்ணச் செல்லுமாறும் கூறினார்...ஹேமாட்பந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வழியனுப்பிவிட்டு உணவருந்த  வந்தார்.  பின்னர் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் படம் வைக்கப்பட்டு நிவேதனம்  உரியமுறையில் செய்தப்  பிறகு அனைவரும் உணவை  உண்ணத்  தொடங்கினார்கள்...படத்திலுள்ள அழகிய ரூபத்தைக்கண்டு அனைவரும் மிகமிக பேரானந்தமடைந்தனர்..  இவையெல்லாம் எங்ஙனம் நிகழ்ந்தன என்பது குறித்து வியந்தனர்.

ஹேமாட்பந்த்தின் கனவில் கூறிய மொழிகளை பாபா இவ்வாறாக நிறைவேற்றினார்... அனைத்து  விவரங்களுடன் கூடிய அப்படத்தின் கதை மற்றும் அதாவது எங்ஙனம் அலி முஹமது புகைப்படத்தைப்  பெற்றார்...?  ஏன் அதை அவர் வாங்கினார்...?  ஹேமாட்பந்த்திடம் பின் ஏன் அதைக் கொடுத்தார்...? என்பவை எல்லாம் அடுத்த அத்தியாயத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது..

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏.

ஸ்ரீ சாயீயைப் பணிக... அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியானபீடம்..🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக