வியாழன், செப்டம்பர் 07, 2023

நான் எனும் அகந்தை...!???


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

 நான் எனும் அகந்தை...!???

எழும்பும் அகந்தை எழுமிடத்தை நீரில்

விழுந்த பொருள் காண வேண்டி – முழுகுதல் போல்

கூர்ந்த மதியால் பேச்சு மூச்சு அடக்கிக்கொண்டு உள்ளே

ஆழ்ந்து அறிய வேண்டும் அறி..!

பொருள் :  

தண்ணீரில் விழுந்த ஒரு பொருளைக் கண்டெடுக்கும் பொருட்டு, அந்த நீரில் மூழ்கும் ஒருவன் பேச்சையும், மூச்சையும் அடக்கிக் கொண்டு முழுகுவது போல, அனைத்திற்கும் முதல் காரணமான “நான்” எனும் அகந்தை கிளம்பும் இடத்தைக் காண தனது எண்ணங்களாகிய பேச்சையும், மூச்சையும் அடக்கிக் கொண்டு, தன் உணர்வாகிய இதயத்தில் ஆழ்ந்து, கூர்மையான ஒருமுனை நினைவின் உதவியால் அதி நுட்பமான அதை அறிய வேண்டும் என்பதை அறி.

நமது எந்த நிலையிலும், உயிர் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக மூச்சு இருக்கிறது... ஆக மூச்சு என்பது பிராணனின் இயக்கம். நாம் பேசுவதற்கும் மூச்சு தேவை ஆகிறது. நாம் எதைப் பேசுகிறோம்..? நமது எண்ணங்களை வெளிப்படுத்தவே நாம் பேசுகிறோம். அவைகளை வெளிப்படுத்த வேண்டாம் என்ற எண்ணம் இருந்தாலோ, அல்லது எண்ணங்களே இல்லாது போனாலோ பேச்சு என்ற சாதனமே வேண்டாம். ஆக பேச்சு என்பது எண்ணத்தின் வேறோர் உரு என்று கொள்ளலாம். எண்ணம் என்பது சூக்ஷுமமாகிய மனதின் சலனத்திற்கும், பிராணன் என்பது தூலமாகிய  நமது ஐம்புலக் கருவிகளின் சலனத்திற்கும் காரணமாவதினால், அவை இரண்டும் அடங்கிவிட்ட உள்ளமானது அலைகளற்ற ஆழ்கடல் போல் அமைதியாகிறது.

நீரில் உள்ள பொருளை எடுக்க முனைபவன் பேச்சையும், மூச்சையும் அடக்கிக் கொண்டு நீரில் மூழ்குகிறான். அதே போல, “நான்” எனும் அகந்தை கிளம்பும் இடத்தை நாடுபவன், அது தனக்குள் இருந்து கிளம்புகிறது என்பதை முதலில் உணர்வதால், தனது எண்ணங்களையும், மற்ற கருவிகளின் இயக்கத்தையும் கட்டுப்படுத்தி தன்னுள் ஆழ்கிறான். அப்படி மூழ்கும்போது, தனது அதி நுட்பமான புத்தியை உபயோகப்படுத்தி, வேறு எதிலும் மனதைச் செலுத்தாத வைராக்கியத்துடன் தன்னுள் நோக்குகிறான். இங்கு வைராக்கியத்துடன் தன்னுள் ஆழ்வது என்பது நீரில் மூழ்குபவன் ஒரு கல்லைக் கட்டிக்கொண்டு நீரில் இறங்குவது போல ஆகும். இவை தவிர, தன்னிழப்பைச் சார்பவனுக்கு ஏதோ ஒரு வடிவில் குருவருளும் கிடைக்கும். அதுவன்றி அவனால் மேலே செல்ல இயலாது என்பது ஆன்றோர்களின் வாக்கு.

மூச்சை அடக்க வேண்டும் என்பதற்காக ஒருவன் பிராணாயாமப் பயிற்சிகள் செய்யவேண்டும் என்பது கிடையாது. தனது ஆன்ம சொரூபத்தை உணர வேண்டும் என  ஒருவன் தீவிரமாக முனையும் போது, பிராணன் உட்பட அவனது மற்றைய இயக்கங்களும் தானாகவே அடங்கிவிடும். ஆனாலும் முதல் முயற்சி நமதாக இருத்தல் அவசியம். இல்லையென்றால் இதைப் பற்றிய அறிவு, தெளிவு அனைத்துமே புத்தி பூர்வமாக நின்று விடுமே அல்லாது அனுபவத்திற்கு வராது...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக