வியாழன், செப்டம்பர் 07, 2023

நான் எனும் அகந்தை...!???

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

நான் எனும் அகந்தை...!??

 இழி உடல் யான் என்னால்  இகந்திடுக என்றும்,

ஒழிவில் இன்பாம் தன்னை  ஓர்க – அழியும்

உடல்  ஓம்பலோடு தனை  ஓர உனல் ஆறு

கடக்கக் கராப்புணை கொண்டற்று.... 

பொருள்....

அருவருப்புடைய இழிவான இத்தேகத்தை ஆத்மா என்று எண்ணுவதை விட்டு விடுக. எப்போதும் ஒழிவற்று இடைவிடாமல் இன்பமயமாய் விளங்கும் தன் சொரூபத்தை அறிந்திடுக. அழியும் தன்மையுள்ள உடலின் பாதுகாப்பில் காட்டும் அக்கறையுடன் கூடவே தனது ஆத்ம சொரூபத்தை அறிவதற்கு முயற்சி செய்வது ஓர் ஆற்றைக் கடந்து அக்கரை செல்வதற்கு முதலையைக் கட்டுமரமாகக் கொள்ளும் முயற்சி போன்றதாகும்...ஓர் ஆற்றைக் கடக்க வேண்டிய ஒருவன் படகையோ அல்லது தெப்பக் கட்டையையோ பிடித்துக் கொண்டுபோய் அக்கரை அடையலாம்...ஆனால் ஆற்றில் உள்ள முதலையின் மீதேறி அவ்வாறு ஒருவன் செல்ல முயன்றால் அவன் கதி என்ன ஆகும்..? அது போன்றே ஆன்ம முத்தைத் தேடுபவன் முதலில் தேக அபிமானத்தை விட வேண்டும். இல்லையென்றால் அவனுக்கும் முதலையின் மீதேறியவன் அனுபவம்தான் கிடைக்கும். ஏனென்றால் தேக அபிமானம் கொண்டவனுக்கு அவனது உடல் உலகத்தில் உள்ளதால் உலகமும் தெரியும். உலகம் தெரியும்போது அவனது பார்வை வெளியேதான் செல்லுமே தவிர உள்முகப்படாது. உள்முக நோக்கில்லாது ஆன்ம அனுபவம் சித்திக்க வாய்ப்பில்லை....

ஆக முதலில் தன்னை ஒருவன் உடல் அளவில் குறுக்கிக் கொள்ளக்கூடாது. அடுத்தபடியாக எது பரமார்த்திக உண்மையோ அந்த இடைவிடாது இலங்கும், ஆனந்த மயமான சொரூபத்தை தியானித்தல் அவசியம். தியானம் என்பது தனது இருப்பில் எப்போதும் இன்புற்று இருப்பதே. இங்குதான் மற்ற எண்ணங்கள் தலைதூக்கும். ஒவ்வொரு எண்ணமும் வரும்போது எந்த ஒரு எண்ணத்தையும் பின்பற்றிச் செல்லாது, அது யாருக்கு உண்டாயிற்று என்று விசாரித்து எண்ணங்களின் மூலத்தை நோக்கிச் செல்வதே ஒருவனின் முயற்சியில் முக்கிய அம்சம். அந்த நிலையிலிருந்து வழுவாமல் இருப்பதற்கே தியானம் அவசியம் ஆகிறது. இல்லையென்றால் மனம் மறுபடியும் உலகின் வெளிப்புறத் தோற்றத்தில் லயிக்க ஆரம்பித்துவிடும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக