சனி, டிசம்பர் 23, 2023

சரணாகதி ...!!

 


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

சரணாகதி ...!!

ஸரண் + ஆகதி = ஸரணாகதி. ’ஸரணம்’ என்றால் அடைக்கலம். ’ஆகதி’ என்றால் அடைதல். பாவம் அகலவும், தவறுகளை திருத்தி கொள்ளவும் கடவுளிடம் அடைக்கலம் புகுவது என்பது இதன் பொருள் .சரணடைந்தவரை காப்பது கடவுளின் தலையாய பொறுப்பு .பராசர பட்டர் என்பவர் ஒருமுறை காட்டுபாதையில் சென்றுக் கொண்டிருந்தார்.திடீரென்று அங்கே ஏதோ ஒரு காட்சியைக் கண்டு மயங்கி விழுந்துவிட்டார்.நெடுநேரம் ஆகியும் பட்டர் வீடு திரும்பாததால் அவரைத் தேடிச்சென்ற சீடர்கள்,அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்கள்.அவரை மெதுவாக வீட்டுக்கு அழைத்து வந்து மயக்கம் தெளிவித்தனர். 

பட்டர் எழுந்தவுடன், “காட்டில் என்ன ஆயிற்று..? கொடிய மிருகங்கள் ஏதாவது உங்களைத் தாக்க வந்தனவா.? இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டனவா..?” என்றெல்லாம் வினவினார்கள் சீடர்கள்...ஒன்றுமே இல்லை. நான் ஒரு காட்சியைக் கண்டேன். அதனால் மயங்கி விழுந்துவிட்டேன்”என்றார் பட்டர். “என்ன காட்சி..?” என்று பதற்றத்துடன் சிஷ்யர்கள் கேட்டார்கள். “ஒரு வேடன் ஒரு முயல்குட்டியைப் பிடித்தான். அதை ஒரு சாக்குப்பையில் மூட்டைக்கட்டி எடுத்துச்சென்றான். இதைக்கண்ட அந்த முயல்குட்டியின் தாய்முயல்,அந்த வேடனைத் துரத்திச்சென்று, அவன் கால்களை பிடித்துக்கொண்டு மன்றாடியது. தனது குட்டியை விட்டுவிடும்படிக் கெஞ்சியது.அதைக் கண்டு மனம் இரங்கிய அந்த வேடன்,முயல் குட்டியைச் சாக்கு மூட்டையிலிருந்து விடுவித்தான். இக்காட்சியைக் கண்டதும் நான் மயங்கி விழுந்துவிட்டேன்”என்றார் பட்டர்.

“இந்தக் காட்சியில் மயங்கி விழும் அளவுக்கு என்ன இருக்கிறது..?” என்று கேட்டார்கள். “என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்..? சரணாகதியை எப்படிச் செய்யவேண்டும் என்று அந்த முயலுக்கு யாராவது சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா..?இல்லை சரணாகதி செய்தால் அவர்களைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்ற நீதியை அந்த வேடனுக்கு யாரேனும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா..? அதற்கும் வாய்ப்பில்லை.

ஆனாலும்,அந்த முயல் செய்த சரணாகதியை அந்த வேடன் அங்கீகரித்து,அது கேட்டதைத் தந்துவிட்டான் அல்லவா..? சரணாகதி என்றால் என்னவென்றே அறியாத ஒரு முயலுக்கு, ஒரு சாமானிய வேடன் இப்படி கருணைக் காட்டுகிறான் என்றால், சரணாகத சாயியை,அவனே கதி என்ற உறுதியுடன் அவன் திருவடிகளைச் சரணடைந்த நமக்கு எவ்வளவு அனுக்கிரகம் செய்வார்...? அவனே கதி என்று அவர் கால்களைப்பற்றும் நம்மைக் கைவிடுவாரா...?

ஶ்ரீசாயியை அத்தகைய ஒப்பற்ற கருணையை உணராமல், இத்தனைக் காலம் வீணாகக் கழித்துவிட்டேனே என்று வருந்தினேன். இறைவன் நம்மைக் கைவிடவே மாட்டான், காப்பாற்றியே தீருவான் என்ற உறுதி, இன்னும் என் மனத்தில் உதிக்கவில்லையே என ஏங்கினேன். அதனால்தான் மயங்கி விழுந்துவிட்டேன்”என்று விடையளித்தார் பட்டர். பட்டரின் விளக்கத்தைக் கேட்ட சீடர்கள் வியந்து போனார்கள்...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

என்பாலே சித்தம் இருத்தி எப்போதும் உள்


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

"என்பாலே சித்தம் இருத்தி எப்போதும் உள்

அன்பாலே பத்தி செயும் அன்பருக்கு  என்னை அவர்...

சார்வார் எதனால் அச் சற்புத்தி யோகத்தை

ஈவேன் நான் என்னருளால் எண்"......

பொருள்... வெளி விஷயங்களை விட்டு, என்னிடத்திலேயே மனதை திடமாக நிறுத்தி, சதா சர்வ காலமும் மனப்பூர்வமாக என்னிடம் உள்ளமுருகிய பக்தியுடன் ஈடுபடும் பக்தர்களுக்கு, எந்த யோகத்தினாலே என்னை அவர்கள் அடையக் கூடுமோ, அந்த நல்ல மேன்மையான புத்தி யோகத்தை நான் என்னருளினால் அவர்களுக்குக் கொடுத்திடுவேன் என்று அறிந்து கொள்....

“எல்லோரும் ஆத்மா என்றால், அனைவருக்குமே பகவானின் தரிசனம் கிட்டி அனைவருமே மோக்ஷம் அடைய வேண்டும் அல்லவா?” என்று எவருக்குமே கேட்கத் தோன்றும். உண்மை அதுதான் என்றாலும் அந்த உறுதியான இறுதி நிலையை அடைய ஒவ்வொருவரும் அதற்கு வேண்டியபடி தங்களை தயார் செய்துகொண்டு அந்த முயற்சியில் முழு மனதுடன் ஈடுபட வேண்டும். ஏனென்றால் எப்போதும் உள்ள ஆன்மா ஏதோ காரணத்தால் தன்னை அளவில் குறுக்கிக்கொண்டு பரமாத்மாவாக இல்லாது ஒரு உடலுடன் சம்பந்தப்படுத்திக் கொள்ளும் ஜீவாத்மாவாக ஆகி, தான் செய்யும் செயல்களால் மேலும் பேதங்களைக் கற்பித்துக் கொண்டதால், அந்த முடிச்சுகளை அவிழ்ப்பதும் அதனுடைய பொறுப்பு என்றே ஆகிறது.

தனது உண்மை நிலை பற்றி தனக்கு வெளியில் இருந்து ஒருவன் அறிய வந்தாலும், அந்த ஞானமானது  அறிவார்த்தமாக இருந்து மேலும் அதைப் பற்றி யோசிக்க வைக்குமே அல்லாது தனது அனுபவமாக மாறுவதற்கு அந்த அகங்கார நிலை உடனே இடம் கொடுக்காது. அதற்குத்தான் பகவான் கிருஷ்ணர் சொல்கிறபடி அவரிடம் சித்தம் வைப்பது மட்டும் அல்லாது, அவரிடம் உள்ளன்பும் வேண்டும். அப்படி இல்லையேல் அறிவுக்கு மட்டும் தோன்றுவது, வெறும் அறிவார்த்தமாக இருக்குமே அன்றி அனுபவமாக பரிணமிக்காது. அந்த அகங்காரம் ஒருவனைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதற்கும் ஆண்டவன் அருள் வேண்டும். முதலில் அது பற்றி வெளியில் இருந்து தெரிய வரும், அப்புறம் சாதகன் மென்மேலும் இடைவிடாது முயற்சி செய்யும் போது, இறைவனுடன் கலக்கும் வழிகள் அவரவர்களுக்கு ஏற்றபடி அவ்வப்போது தெரியவரும். அதுதான் யோகத்தின் பல படிகள்

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻.

வியாழன், டிசம்பர் 21, 2023

ஓம்சாய்ராம் 🙏

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஒரு ஊரில் ஒர் வியாபாரி இருந்தான் அவன் ஒரு சமயம் வெளியூர் சென்று வியாபாரம் செய்து மிகுந்த பொருளீட்டினான். திரும்ப வீட்டிற்கு வர எண்ணி தான் சம்பாதித்த பொன்னும், பொருளும், ரத்தினத்தையும்,  மூட்டையாகக் கட்டிக்கொண்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தான்...அவன் ஊரை அடைவதற்குமுன் ஒரு ஆற்றைக் கடந்தாக வேண்டும். அவன் ஆற்றிற்கருகே வந்து விட்டான்....ஆனால் அவனுக்கு நீச்சல் தெரியாது.ஆற்றில் அப்போதுதான் புது வெள்ளம் வந்து கொண்டிருந்தது. தண்ணீர் ஏறுவதற்குள் ஆற்றை கடந்து விடலாம் என்று மனதிற்குள் கணக்குப் போட்டவன்  முட்டையை தலைக்குமேல் வைத்துக்கொண்டு ஆற்றுக்குள் இறங்கினான்...பாதி ஆற்றைக் கடப்பதற்குள் திடீரென அதிகரித்த வெள்ளம் அவனை அலைக்கழித்தது. சமாளிக்க முடியாமல் வெள்ளம் கரைபுரண்டு வந்தது. ஒரு நிலைக்குமேல் வெள்ளம் வியாபாரியை இழுத்துச் சென்றது.

வியாபாரி எவ்வளவோ முயன்றும் மூட்டையை காப்பாற்ற முடியவில்லை.மூட்டையை வெள்ளம் அடித்துச் சென்றது. அப்போது வியாபாரி கத்தினான். அய்யோ எனது மூட்டை தண்ணீரில் போகிறது பிடியுங்கள் அதைப் பிடியுங்கள் என்று கூப்பாடு போட்டான்...இவனது கூக்குரல் கரையில் குளித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞனின் காதில் விழுந்தது. அவன் குபீரென தண்ணீரில் குதித்து மூட்டையை நோக்கி நீந்தினான்.  பலகட்டப் போராட்டத்திற்குப்பின் ஒரு வழியாக மூட்டையை காப்பாற்றி கரைக்கு இழுத்து வந்தான்...

மூட்டையை கரையில் இழுத்துப் போட்டுவிட்டு கூப்பாடு போட்டவனை நோக்கி, உங்களது மூட்டையை காப்பாற்றி விட்டேன்.நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள். வந்து உங்களது மூட்டையை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கத்தினான். அவன் இருந்தால்தானே, அவன் ஆற்றோடு போய் வெகு நேரமாகிவிட்டது...என்னை காப்பாற்றுங்கள் என்று கூப்பாடு போட்டிருந்தால் அந்த இளைஞன் அவனை காப்பாற்றியிருப்பான். மூட்டையை காப்பாற்றச் சொன்னதால் இப்போது மூட்டை காப்பாற்றப்பட்டது... 

நம்முடைய பிரார்த்தனை எப்போதுமே இவ்வாறாகத்தான் இருக்கின்றது...என் கஜானா எப்போதும் திறந்தே இருக்கின்றது. எவ்வளவு வேண்டுமானாலும் வந்து வாரிக்கொள்ளுங்கள் என்றார் பாபா...அவரது கஜானாவில் அப்படி என்ன இருக்கும்...? வீடு, கார், ஏ.சி, நிலம், தங்கம், வைரம், குழந்தை, பணம், புகழ். மனைவி, உத்யோகம்….. இப்படியாகவா இருக்கும். இவை எல்லாம் அழியும் பொருளல்லவா...? கடவுளே அவதாரம் எடுத்து வந்த பாபாவின் கஜானாவில் அழியும் பொருட்களா..? இதையா தன் பக்தர்களுக்கு கொடுக்க விரும்புவார் பாபா..?அழியா பொருட்களான,  சத்யம், நேர்மை, ஞானம், தவம்,கருணை, அன்பு,என்றல்லவா அவரது கஜானாவில் நிரம்பியிருக்கும். 

அழியும் பொருட்களை கொடுப்பதற்கு மனிதனே போதுமே, அவனால் அதுமட்டும் முடியும். அழியாத பொருளான ஞானத்தை கொடுப்பதற்காகத்தான் இறைவனே குருவடிவாக நம்மிடம் வருகின்றான். ஏனெனில் அவனால்தான் ஞானம் கொடுக்க முடியும். அவனையே, என்னிடம் ஞானம் கேட்பார் ஒருவருமில்லை. என்று வருந்த வைப்பவர் தானே நாம்....

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

பிரபஞ்ச பேறாற்றலின் வழியே உன்னை தேடு..!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

பிரபஞ்ச பேறாற்றலின் வழியே உன்னை தேடு..!நீ என்னை வந்தடைவது ஏற்கெனவே விதிக்கப்பட்டிருக்கிறது. நம் சந்திப்பைத் தடுக்கும் சக்தி இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. அறியாமையின் காரணத்தால் ‘தானே ஆன்மா’ என்ற நோக்கில் மனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது...இதனால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு அது பல தடைகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கிறது. ஆனால், மனத்தின் ஆற்றல் மிகவும் வரையறைக்குட்பட்டது. அதனால் ஒன்றும் செய்ய முடியாது...

நீங்கள் என்னை வந்து சேரும் நிகழ்வு ஏற்கெனவே முடிவாகிவிட்டது. ஆனால், அது எந்தவிதத்தில், எப்போது நடக்கும் என்பது ஓரளவுக்கு உன்னையும், ஓரளவுக்கு என்னையும் சார்ந்து இருக்கிறது. நீ எப்போது, என்ன செய்யப் போகிறாய் என்பதைப் பொறுத்தே நான் என்ன செய்வேன் என்பது முடிவாகும். ஒருவிதத்தில் சொல்லப்போனால் எல்லாம் உன் கையில்தான் இருக்கிறது...நான் எப்போதுமே உன்னைச் சேர்த்துக் கொள்வதற்கு ஆயத்தமாகத் தான் இருக்கிறேன்...இப்போதே கூட. நீதான் இன்னும் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் நான் உன்னோடுதான் இருக்கிறேன். அதனால் என்னிடம் பிரிவுணர்வு இல்லை.

நீ எவ்வளவு தான் அலைந்தாலும்  அலைந்துக் கொண்டிருக்கிறாய். உன் தாகம், உன் தாபம், உன் வேதனை, உன் பிரிவாற்றாமை, ஏக்கம், எதிர்பார்ப்பு, எப்போதாவது சிலகணங்களில் என்னைத் தூரத்து நறுமணமாக உணரும் கணங்களில் நீ அடையும் சந்தோஷம், எல்லாவற்றிலும் நான் இழைந்திருக்கிறேன். உனக்குள் எழும் ஒவ்வோர் எண்ணத்திலும், ஒவ்வோர் உணர்ச்சியிலும், ஒவ்வோர் உணர்விலும் உள்ளே நான் பொதிந்திருக்கிறேன்...நிரந்தரமான தீர்வு...!

உனக்குள்ளிருந்து எழும் அன்பு, அறிவுணர்வு, புத்தி, அமைதி, சந்தோஷம், படைப்பூக்கம் அனைத்தும் என் பிரதிபலிப்புகள்தாம். என்னை அறிந்துகொள்ளாமல் இவை எவற்றையும் நீ தெரிந்துகொள்ள முடியாது. இப்போது உலகில் இவையெல்லாம் பொய்ப்பிம்பங்களாக உலவுகின்றன. உண்மையறிவு விழித்துக்கொண்டால்தான் இன்று உலகில் இருக்கும் துன்பம் எல்லாவற்றுக்கும் நிரந்தரமான தீர்வு வரும்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

உன் வழிகாட்டியாக நான் இருப்பதை மறந்து விடாதே...மறந்தால் உன் நிகழ்கால பாதையும் மறைந்துவிடும் ..,!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்.....🙏🏻🙏🏻

 உன் வழிகாட்டியாக நான் இருப்பதை மறந்து விடாதே...மறந்தால் உன் நிகழ்கால பாதையும் மறைந்துவிடும் ..,!

ஞானம் என்றால் அறிவு என்பது பொருள். பொதுவாக உலகில் அஞ்ஞானத்தையே அறிவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒருவர் பிறக்கும்போது கூடவே இருக்கின்ற அறிவு தன்னைப் பற்றிய அறிவுதானே ஒழிய மற்றவையெல்லாம் கற்றுக்கொள்வதால் பெற்றுக்கொள்கின்ற புற அறிவு..

உலக விஷயங்கள் அத்தனையையும் கரைத்துக் குடித்திருப்பது தான் அறிவு என நினைப்பது தவறு. அந்த ஆள் மெத்தப் படித்தவர் என்கிறோம். ஆனால் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொண்டிருக்கின்ற பட்டங்களின் பட்டியல் பெரிதல்ல. தன்னை அறிவதே உண்மையான அறிவு. ஆனால் இந்த அறிவைப் பற்றிய எண்ணமே பெரும்பாலோர்க்கு இருப்பதில்லை. “அறியும் தன்னை அறியாமல் அறிவதெல்லாம் அஞ்ஞானம்” என்று கூறினார் ரமணர்...

இந்த உடலைத் தானாக எண்ணிக்கொண்டு புலன் இன்பங்களில் ஈடுபட்டு அவற்றால் வரும் இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் வரை ஒருவனுக்கு மெய்யறிவு ஏற்படுவதில்லை. அதைப்பற்றி அறியும் ஆர்வமும் இயல்பாக ஏற்படுவதில்லை. பல பிறவிகளாகத் தொடர்ந்த தூண்டுதலின் காரணமாகவே ஒருவனுக்குப் பிரம்மஞானத்தைப்பற்றி அறிகின்ற அவா ஏற்படக்கூடும். அறிய வேண்டியதான இந்த மெய்யறிவைப் பற்றியே ஸ்ரீ கிருஷ்ணர் ஞான விஞ்ஞான யோகமாக அர்ச்சுனனுக்கு எடுத்துரைக்கின்றார்.

இவ்வுலக விஷயங்களைப் பற்றிய கல்வியைப் பெறுவதற்கு ஒருவனுக்கு ஐம்புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றின் உதவி தேவை. இவற்றைப் பயன்படுத்தித்தான் உலக விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் ஆத்ம ஞானமாகிய மெய்யறிவை அடைவதற்கு இவை எதுவுமே பயன்படாது. சொல்லப்போனால் இவற்றை ஒதுக்கித் தள்ளி இவற்றிலிருந்து விடுபட்டால்தான் இவ்வறிவைப் பெறவே முடியும்...

இவ்வறிவைப் பெற சப்தப் பிரமாணம் ஒன்றுதான் வழி. அதாவது சொற்களின் வாயிலாக ஒன்றைப்பற்றி அறிவது. வேறு எந்த விதத்தாலும் அறிந்துகொள்ள இயலாத தன்னைப்பற்றி சொற்களால் விளக்குவதால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம் ஒருவன் தன்னை சுத்த சைதன்யமாக அறிந்துகொண்டுவிட்டால் பிறகு அவனுக்கு இவ்வுலகில் அறிந்துகொள்வதற்கு வேறு எவ்வித அறிவுமே தேவையில்லை.

இப்படித் தன்னைப்பற்றி அறிய முற்படுபவர்கள் அரிதிலும் அரிது. அப்படி முயல்பவர்களும் தானாக அறிந்துகொள்ள முடியாது. பிரம்மத்தைப்பற்றி அறிந்த, பிரம்மத்தைத் தான் என்று உணர்ந்துகொண்ட, அந்த பிரம்மத்திலேயே தன்னை மூழ்கடித்துக் கொண்ட, அதைப்பற்றி அறிந்தவர்களின் தொடர்பிற்குள்ளே இருப்பவரான தக்க குருவின் மூலமாகவே ஒருவன் இந்த அறிவைப் பெற முடியும்.

அப்படிப்பட்ட குருவாகவே கண்ணபிரான் நின்று அர்ச்சுனனுக்கு இந்த மெய்யறிவை எடுத்துரைக்கின்றார். தன்னையறிதலாகிய மெய்யறிவைப் பெற முயல்கின்றவனுக்குப் பகவத்கீதை தான் எளிய வழிகாட்டி. ஏனெனில் தெய்வமே மனித குலத்திற்கு நேரடியாக வழங்கிய கொடை இது. இதனை அறிவாகப் பெறுவதை விட அனுபவமாக உணர்தலே மிக உயர்ந்த பயனைத் தரும்....

அறிவு என்பது சேமிப்பு மட்டுமே. அனுபவம் என்பது உணர்வோடு கலப்பது. அனுபவிக்கின்ற நிலை அது. அனுபவத்தைச் சொல்ல முடியாது. உணரத்தான் முடியும். அப்படி உணர்ந்ததை உணர்த்தவும் சொற்கள் மட்டும் தான் வழி. இது தான் ஞான விஞ்ஞானச் சிறப்பு. உணர்த்தவும் உணரவும் கூடிய யோக வழி இது. அதுவே சொல்கின்றது. அப்படிச் சொல்வதை அதுவே கேட்கின்றது.

நீ முழுமையானவன். நீ பிரம்மம்! என்று சொல்வது வேதாந்தம். வேதத்தின் முடிவு இதுதான். வேதங்கள் நம்மைப்பற்றித்தான் எடுத்துச் சொல்கின்றன. நம்மைக் கடவுளாக நமக்குத் தெரியப்படுத்துகின்றன. வேதம் நீ, நீ என்று என்னை நேரடியாகச் சுட்டிக்காட்டுவதற்குக் குருவின் சொற்களே பிரமாணமாக அமைகின்றன.

ஒன்றைப்பற்றி அறிவதற்கு அறிபவர், அறியக்கூடிய பொருள், அறிவதற்கு உரிய கருவி ஆகிய மூன்று அம்சங்கள் தேவை. இங்கு குருவின் சொற்களைக் கேட்கின்ற நான், என் காது, கேட்கும் சத்தம் மூன்றும் என்னைப்பற்றி அறிய உதவுபவை. இவை மூன்றும் ஒத்து இருந்தால் தான் இவ்வறிவு ஏற்பட முடியும்.

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

புதன், டிசம்பர் 20, 2023

மனிதன் தெய்வமாகலாம்...!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

மனிதன் தெய்வமாகலாம்...!

பிரம்மம் தன்னிலிருந்து உலகங்களைப் படைத்து, படைக்கப்பட்டவை எல்லாம் தானேயாகிக் கடைசியில் வெளிப்படுத்தியவற்றையெல்லாம் தானே தனக்குள் இழுத்துக்கொண்டு விடுகிறது. எல்லாமே பிரம்மம். சர்வம் பிரம்ம மயம் எனில் நமக்கு எல்லாமே சொந்தம். இதைப் புரிந்துகொண்டு நிகழ்வன எல்லாம் அவன் செயலே என்ற ஞானம் நமக்குள் பதிந்துவிட்டால் பிறகு எதனாலும் பாதிப்பில்லை. இதற்கு நாம் நம்மை அவனுடன் இணைத்துத் தியானத்தால் ஒன்றிவிட வேண்டும். நான் அல்லாதவற்றை எல்லாம் துறந்து விட வேண்டும். நான் அவன்! அவன் நான்! நானே பிரம்மம்...!

இருண்டு கிடந்த அறைக்குள் ஒரு விளக்கை ஏற்றிய கணமே ஒளி பரவவுதைப் போல் இந்த ஞானம் இக்கணமே முழுமையாக நம்மில் ஏற்படவேண்டும். எல்லாம் நானே என்ற இந்த ஞானத்தை மனித மனதில் உருவாக்குவதற்காகத் தான் ஸ்ரீ கிருஷ்ணர், ‘‘அர்ச்சுனா! தண்ணீரில் நான் சுவையாக, சூரிய சந்திரனில் நான் ஒளியாக, வேதங்களில் பிரணவமாக, ஆகாயத்தில் ஒலியாக, மனிதர்களில் பேராண்மையாக, பூமியில் புனிதமான மணமாக, தீயில் சூடாக, எல்லா உயிர்களிலும் ஜீவசக்தியாக, தவ சீலர்களிடம் தவமாக இருந்து வருகிறேன்!” என்கிறார்...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

உன்னில் உள்ளவன் யார்..?

 


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

உன்னில் உள்ளவன் யார்..?

பகவான் ரமணர் அடிக்கடி கூறுவதுபோல், இவ்வுலகில் எதற்காவது நிரூபணம் தேவை இல்லை என்றால் அது “நான் இருக்கின்றேனா..?” என்ற ஒரே ஒரு கேள்விக்குத்தான். அதை யாரும் கேட்பதில்லை என்பது வேறு விஷயம். எவருக்கும் எந்த விஷயத்திலும் சந்தேகம் என்றால் உடனே அதற்கு நிரூபணம் கேட்பார்கள். தான் இருப்பதை யாரும் சந்தேகப்படாததால் அந்தக் கேள்வியும் எழுவதில்லை. கேள்வி எழாதது மட்டும் அல்ல, அப்படி யாராவது கேட்டாலும் அவர்களை ‘இது என்ன பைத்தியக்காரன் போல கேட்கிறானே..?” என்று கூட சந்தேகமாகப் பார்ப்பார்கள். அதாவது தான் இருப்பதில் யாருக்கும் எள்ளளவு கூட சந்தேகம் கிடையாது. ஆனாலும் “நான் யார்..?” என்ற கேள்வி நல்ல மன நிலையில் இருப்பவர்கள் எவர் கேட்டாலும், அது அவர் தம் வாழ்வின் அர்த்தங்களையும், நோக்கங்களையும் புரிந்து கொள்ள உதவும். அப்படி ஒருவன் கேள்வி கேட்பது அவனது மனமும் புத்தியும் இயங்கும் சாதாரண மன நிலையில் தான். அதற்கு பதிலும் அந்த நிலையிலேயே வருவதைவிட, அதனினும் சூட்சமமான அனுபவ நிலையில் வருவது விசேஷமானது தான்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

பகவான் சொல்...!

 

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

பகவான் சொல்...!‘எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்’ என்கிறார..நீயும் கடவுள், நீ செய்யும் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள், நீ பந்தத்தில் பிறப்பதும் கடவுளுடைய செயல். மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே பூட்டிக் கொள்வதும் கடவுளுடைய செயல். நீ முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல்...ஆனால் நான் எதற்காக தளை நீங்கும்படி பாடுபடவேண்டும்..? எல்லாம் கடவுளுடைய செய்கையாய் இருக்கும் போது முக்தியடையும் படி நான் ஏன் முயற்சி செய்ய வேண்டும்..?’ என்று ஒருவன் கேட்பானாயின், அதற்கு நாம் கேட்கிறோம்,  ‘முக்தியாவது யாது..?’

எல்லாத் துயரங்களும் எல்லா அம்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. அதனை எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்குண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய். இல்லாவிட்டால், துன்பங்களிலே கிடந்து ஓயாமல் உழன்று கொண்டிரு. உன்னை யார் தடுக்கிறார்கள்..? ஆனால், நீ எவ்விதச் செய்கை செய்த போதிலும், அது உன்னுடைய செய்கையில்லை. கடவுளுடைய செய்கை என்பதை அறிந்துகொண்டு செய். அதனால் உனக்கு நன்மை விளையும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்பது ஸநாதன தர்மத்தின் சித்தாந்தம். எல்லாம் கடவுள் மயம், எல்லாத் தோற்றங்களும், எல்லா வடிவங்களும், எல்லா உருவங்களும், எல்லாக் காட்சிகளும், எல்லாக் கோலங்களும், எல்லா நிலைமைகளும், எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும், எல்லா சக்திகளும், எல்லா நிகழ்ச்சிகளும், எல்லாச் செயல்களும் – எல்லாம் ஈசன் மயம். (ஆதலால், எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்.)  ‘ஈசாவஸ்தம் இதன் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்’ என்று ஈசாவாஸ்யோப நிஷத் சொல்லுகிறது. அதாவது :-  ‘இவ்வுலகத்தில் நிகழ்வது யாதாயினும் அது கடவுள் மயமானது’ என்று பொருள்படும்..இந்தக் கருத்தையே ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில்,  ‘இவ்வுலகனைத்திலும் நிரம்பிக் கிடக்கும் கடவுள் அழிவில்லாதது என்று உணர்’ என்று சொல்லுகிறார்.

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻