வெள்ளி, பிப்ரவரி 02, 2024

ஜி.கே. ரேகேயின் நினைவலைகள்...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

ஜி.கே. ரேகேயின் நினைவலைகள்...!

நான் இந்தூரில் தாசில்தாராக பணி செய்து ஓய்வு பெற்றவன். 1912 ல் நான் இடுப்பு பிடிப்பால் மிகவும் அவதிப்பட்டேன். அடிக்கடி காய்ச்சலும் வந்து என்னை பாடாய்ப்படுத்தியது. என்னால தூங்கவோ, ஓய்வெடுக்கவோ, முடியவில்லை. ஆகவே நான் ஹர்தா அருகில் உள்ள ஜிக்காம் என்ற கிராமத்தில் இருந்த என் மாமனார் வீட்டிற்குச் சென்றேன்..என் மாமனார் தீவிர சாயி பக்தர். நான் அவரிடம் சென்ற அன்று சாயி பாபாவின் உதியை எனக்கு இட்டுவிட்டார். அன்றே  பிற்பகல் இரணமணிக்கு நான் கட்டிலில் படுத்திருக்கும் போது காவி கட்டிய சன்யாசி ஒருவர்  என்னருகே வந்து என் தோள்களில் தட்டி, " குழந்தாய் கவலைப்பட வேண்டாம். இன்னும் மூன்று தினங்களில் நீ குணமடைவாய்.  என்று கூறினார்.

நான் உடனே, ஒரு சன்னியாசி வந்திருப்பதாகவும், அவர் கூறியதையும் கூறி என் மாமனாரைக் அழைத்தேன். அவர் அந்த சன்யாசியை காண விரும்பினார். ஆனால் அவர் வருவதற்குள் சன்யாசி சென்று விட்டார். அது சாயிபாபாவகத்தான் இருக்க வேண்டும் என உறுதியாக அவர் கருதினார்..அன்றிலிருந்து சரியாக மூன்றாவது நாள். நான் வியப்புறும் வகையில் என் வலி முழுமையாக குணமடைந்தது. நான் பூரணமாகக் குணமடைந்தேன். என் மாமனார் சீரடிக்குச் சென்று பாபாவை தரிசிக்குமாறு என்னிடம் கூறினார்...ஆனால் அதன் பின் இரண்டு வருடங்களாக என்னால் சீரடிக்கு செல்ல முடியவில்லை.1914 ஆம் ஆண்டில் மண்டலாவில் என் மூன்றாவது பெண்ணின் திருமணத்திற்காக நான் விடுமுறை எடுத்துக் கொண்டேன். பாபாவிற்கு நாங்கள் திருமணப் பத்திரிக்கை அனுப்பி வைத்தோம். அதற்கு பாபாவிடம் இருந்து, நான் நேரில் வந்து திருமண்ததில் பங்கு கொள்வேன் என்று பதில் வந்தது...

திருமண விழா நடந்துக் கொண்டிருந்தபோது, பாபாவிடம் இருந்து உதியுடன் ஒரு கடிதமும் வந்தது. திருமணத் தம்பதிகளுக்கு உதியை இட்டுவிடும் படி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய தினத்திலேயே, ஒரு பக்கீர் வந்து ஒரு பைசா கேட்டார். ஆனால் என் மாமனார் அந்த வாய்ப்பை உதாசீனம் செய்து விட்டு பின்னால் வருந்தினார்..அந்த பக்கீர் பாபாகத்தான் இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். அது பாபாவேதான். ஆனால் அவர் மீண்டும் வருவார் என நான் கூறினேன். மறுநாள் வேறொரு பக்கீர் ஒருவர் வந்து என்னிடம் ஒரு பைசா மட்டுமே கேட்டார். நான் அதைக் கொடுத்தேன். அதை மட்டும் பெற்றுக்கொண்ட பக்கீர் என் மாமனார் அளித்த விருந்தை ஏற்காமல் சென்று விட்டார்.

திருமணம் முடிந்த உடன் நான் சீரடிக்குச் சென்று அங்கு நான்கு நாட்கள் தங்கினேன். என்னைப் பார்த்தவுடன் பாபா, "ஏன் இவ்வளவு தாமதம்..?" எனக்கேட்டார். அதற்கு நான் ஏழ்மை குமாஸ்தா என்றும், எளிதில் வர இயலாது என்றும் பதிலளித்தேன். அவர் என்னிடம் தட்சிணை கேட்டார். நான் ஐந்து ரூபாய் அளித்தேன். அவர் மேலும் ஐந்து ரூபாய் வேண்டும் என்று கேட்டார். அது ஏன் என்று எனக்குத் தெரியாது. ஆயினும் மேலும் ஐந்து ரூபாய் தட்சிணை அளித்தேன்.

அப்போது பாபா, உன்னிடம் இருந்து வரவேண்டிய பாக்கிகள் ஏதுமில்லை என்றார். சீரடியில் இருந்து என் வீட்டிற்கு திரும்பிய போதுதான் அதற்குண்டான விளக்கம் எனக்குத் தெரிந்தது. என் மனைவி எனக்குத் தெரியாமலே பாபாவிற்கு காணிக்கையாக ஐந்து ரூபாயை மணியார்டர் செய்திருக்கிறாள். அது பின்னர் நேரில் பெற்றுக்கொள்ளப் படும் என்ற குறிப்புடன் திரும்பி வந்து விட்டது. பாபா நேரில் அதிகமாக ஐந்து ரூபாய் பெற்றுக்கொண்டது அதனால் தான்...நான்கு வயதான என் கடைசிப் பெண் பிரேமாபாய்க்கு காய்சல் வந்து நிலமை கடுமையாகி விட்டது. அவள் எலும்பும், தோலுமாகி விட்டாள். மருந்துகளும், சிகிச்சைகளும் பலனளிக்கவில்லை. பாபாவின் பக்தையான என் மனைவி, குழந்தைக்கு உதவும்படி பாபாவிடம் பிரார்த்தித்தாள்.

அவள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போதே," மூன்றாம் நாள் எல்லா கஷ்டத்தையும் அகற்றி விடுவேன்" என்ற பாபாவின் குரலைக் கேட்டதாகக் கூறினாள். மூன்றாம் நாள் தாயின் மடியிலேயே எங்கள் பெண் குழந்தை உயிரை விட்டது எங்களுக்கு வியப்பளித்தது.ஆபீசில் இருந்த எனக்கு என் மனைவி தகவல் அனுப்பினாள். உடனே வீட்டிற்கு வந்த நான், என் பெண் இறந்து விட்டதைக் கண்டேன். என் மனைவி அழுது கொண்டிருந்தாள். நான் குழந்தையை தூக்கி மடியில் இருத்தி, பாபாவின் உதியுடன் சேர்த்து கங்கா நீரை ஓரளவு வாயில் ஊற்றினேன். நீர் வெளியே வழியவில்லை. ஆகவே நான் மேலும் சிறிது நீரைப் புகட்டினேன். அப்போது குழந்தையின் கண்கள் திறந்தன.


அவள் உயிருடன் இருப்பது உறுதியாயிற்று. அதன் பிறகு அவளுக்கு தொடர்ந்து உதியும் தீர்த்தமும் அளித்தோம். ஒரு மாதத்தில் அவள் பூரண ஆரோக்கியம் பெற்றாள்...இப்போது திடகாத்திரமாக இருக்கும் அவள் இந்தூர் பள்ளி ஒன்றில் தலைமைச் செவிலியராக பணிபுரிகின்றாள்...1926..ஆம் ஆண்டு என் மனைவி காலமானாள். அதன்பின் என் உடல் நிலைப் பாதிக்கப்பட்டது. என் முன் பாபாவின் புகைப்படத்தை வைத்திருந்தேன். அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் அதில் இருந்து ஒரு குரல் வருவது போன்றிருந்தது. "இனியும் வேலைக்குப் போக வேண்டாம்"  தொடர்ந்து மூன்று நாட்கள் இந்தக் குரல் கேட்டது. பேசியது யாராக இருக்கும் என என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை...என் நண்பர் மருத்துவர் பர்னேர்கர், அந்தக் குரல் கண்டிப்பாக பாபாவுடையதாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறினார். ஆகவே நான் 1926 ல் ஓய்வூதியத்துடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றேன்....அதற்கு முன்பு எனது நான்காவது பெண் மீனாபாய்க்கு மணம் முடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். வரன் எதுவும் கிடைக்கவில்லை. நான் ஏற்கனவே அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டேன். மத்திய பிரதேசத்தில் உள்ள என் என் மைத்துனர் வீட்டிற்கு நானும் என் மனைவியும் சென்றோம்.

அங்கு போய் சேர்ந்த மூன்றாவது தினம், "ஜீராப்பூருக்கு போ" என்றொரு குரல் கேட்டது. நான் உடனே இந்தூருக்கு திரும்பினேன். ஏற்கனவே அலுவல் நிமித்தம் என் மகனுக்கு ஜீராப்பூர் போக உத்தரவு வந்தும் அவனது மனைவி ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்ததால் அவனால் போக முடியவில்லை. அப்போது ஓர் அதிசய சம்பவம் நிகழ்ந்தது. நான் இந்தூருக்கு வந்தவுடன் என்னை ஜீராப்பூருக்கு மாறிறியதாகவும் நான் உடனே ஜீராப்பூருக்கு செல்ல வேண்டும் என்றும் என் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்திருந்தது. ஆகவே நான் ஜீராப்பூருக்கு சென்று வேலையை ஒப்புக்கொண்டேன்...அங்கிருந்து நான் வேலை விசயமாக இர் வாரங்களுக்கு டூர் செல்ல வேண்டியிருந்தது. நான் ஸயாத் என்ற ஊரில் தங்கினேன். அங்கே குவாலியர் சமஸ்தானப் பணியில் என் சகோதரர் இருந்தார். நான் அவர் வீட்டுக்குச் சென்றேன். அங்கே அவருடன் பலவந் என்ற ஒருவரைக் கண்டேன். அவர் உண்மையில் பலவானாக இருந்தார். பருமனாகவும் அழகாகவும் இருந்தார். நான் அவரைப் பற்றி விசாரித்ததில் அவர் என் மகளுக்கு பொருத்தமான வரன் எனக் கருதினேன். அது நிச்சயமாகி திருமணம் சிறப்பாக நடந்தேறியது.இவ்விதம் என் வாழ்க்கை முழுவதிலும் சாயிபாபாவின் கருணை எனக்கும் என் குடும்பத்திற்கும் இருந்தது என்பதை பெருமையாக கருதுகின்றேன்...

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

அறியாமையாம் கலக்கம் ஆரும் உயிர் தூய்தாம்...!?


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்.....🙏🏻🙏🏻

அறியாமையாம் கலக்கம் ஆரும் உயிர் தூய்தாம்

அறிவுப் பயிற்சியினால் அவ்வறிவும்

அகற்றி அறியாமை அழியுமே நீர்மாசு

அகற்றும் தேற்றாம் பொடி ஒப்பாய்....!!??

கலங்கிய மாசு படிந்த நீரில் தேத்தாங் கொட்டையின் பொடியைப் போட்டால் அது எப்படி நீரைத் தெளிவாக்கியபின் தானும் நீரின் அடியில் வண்டலுடன் தங்கி மறைகிறதோ, அது போல அறியாமையில் கலங்கி இருக்கும் ஜுவனுக்கு, ஞானத்தை நாடி அவன் செய்யும் பயிற்சிகள் மூலம், அறியாமையைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து, பின்பு அந்த ஞானமும் தானே அழியும்...

முதலில் சாதகனுக்குத் தன் உடலின் மேல் ஒரு அபிமானம் இருக்கும். அப்போது அவனுக்கு ஆத்மா என்று ஒன்று இருக்கிறது என்பதை அறிவு பூர்வமாக மட்டுமே தெரிந்து வைத்திருப்பான். அதனால் அவன் தன் உடலுக்கு வரும் நன்மை, தீமைகள் எல்லாம் ஆன்மாவுக்கும் வருகிறது என்று தவறாக நினைக்கிறான். ஆன்மா எதுவும் செய்வதும் இல்லை, அந்தச் செயலால் வரும் விளைவுகளை அனுபவிப்பதும் இல்லை என்று அவனுக்குத் தெரியாததால் உடலையும் ஆன்மாவையும் பிணைத்து ஒன்றாகக் கருதுகின்றான். அதுதான் இங்கு கலங்கிய நீர் என்று கூறப்படுகிறது. இது அறியாமையால் வந்த விளைவு.

அறியாமையால் விளைந்தது என்றாலும், அறியாமை போகும் வரை அதைப் போக்க முயற்சிகள் தேவை. முயற்சிகள் சிரவண, மனன, நிதித்யாசன முறைகளில் செய்யப்படும். அவை முறையே கேட்டல், சிந்தித்தல், தியானித்தல் என்பதாகும். குருவிடம் ஆன்மாவைப் பற்றி விவரமாகக் கேட்டு அறிதல் முதல் படி என்றால், மற்ற இரண்டு படிகளையும் ஒருவன் தன் முயற்சியால் விடாப்பிடியாகத் தாண்டவேண்டும். எப்போதும் குருவின் அருள் சாதகனுக்கு உண்டு என்பதால், அவனுடைய தனிப்பட்ட முயற்சிகளின் போதும் அவரது அருள் இருக்கும். முன்னது தூல வடிவில் இருந்தால், பின்னவை இரண்டும் நுண்ணிய வடிவில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ரமணர் சொல்கிறபடி புலியின் வாயில் அகப்பட்ட இரை எப்படி தப்ப முடியாதோ, அப்படியே குருவின் அருட்பார்வையில் வந்த சீடனும் முக்தி நிலையை அடையாது மீள முடியாது...

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻

ஞானம் என்றால் என்ன...? ஞானத்தை எப்படி விளக்குவது...?




ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

ஞானம் என்றால் என்ன...? ஞானத்தை எப்படி விளக்குவது...?

🔥புறத்தில் நடப்பவற்றை  எல்லாம்  பிரதிபலிப்பது நம் மனதின்  இயற்கை. நம் அறிவு முயற்சி செய்து  தான்  விரும்பியதை நம் மனம் பிரதிபலிக்க வேண்டும் என்று ஒவ்வொரு கணமும்  போராடுகிறது..இந்த முடிவில்லா போராட்டம், ஒரு வீண்முயற்சி என்று நம் அறிவு புரிந்துக் கொள்ளும் பொழுது  தன் முயற்சியை முழுமையாக கைவிடுவது தான் ஞானம். இதுவே  அகசரணாகதி.... ஞானம் என்பது ஒரு 'அறிவுபூர்வமான புரிதல்' மட்டுமே.🔥

எல்லாம் அவன் செயல் - நம் மனதில் தோன்றும் இன்ப துன்பங்கள் எல்லாம் அவன் செயல் என்று பக்தி மார்க்கம் போதிக்கும் சரணாகதியும், இந்த அகசரணாகதி தான்.சும்மா இருப்பது என்பது நம் முயற்சியால் வருவதன்று...முயற்சியை கை விடுவதால் வருவது...இந்த உண்மையை  எவரும் கடை பிடித்து புரிந்துக் கொள்ள முடியும் ... இது நம் மனதிற்கானது...

இந்த 'ஞான புரிதலின்' விளைவு...?

ஞானப் புரிதலுக்கு பின் ... நம் மனம் விடுதலையுடன் இயங்க தொடங்கி விடுகிறது....சதா மகிழ்ச்சியையும் நிம்மதியையும், மனதிடம் தேடி கொண்டு இருந்த நம் அறிவு, தேடுதலை நிறுத்தி விடுகிறது. மனதில் ஓடும் உணர்வுகளுடன் போராடி புதுப்பித்துக் கொள்வதை நிறுத்தி விடுகிறது...அறிவின் குறுக்கீடோடு இல்லாத நம் மனம் நின்று விடுவதில்லை ... அது விடுதலையுடன் இயங்க தொடங்கி விடுகிறது.இதுவே விடுதலை ... இதுவே ஆன்மீகத்தில் உயர்வாக கருதப்படும் ... முக்தி ... இதுவே ஞான விடுதலை...இந்த விடுதலை ஒரு அனுபவம் அன்று. எல்லா  அனுபவங்களும் சுதந்திரமாக வந்து போவது தான் விடுதலை.

ஒரு குழந்தையானது இந்த விடுதலையுடன் தான் இருக்கின்றது. எல்லா ஞானிகளும் இந்த மன விடுதலையுடன் தான் வாழ்கின் றார்கள்..

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻.. !

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

வியாழன், பிப்ரவரி 01, 2024

பாபாவை முதலில் பார்த்த மகல்சபாதி...!

 ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

பாபாவை  முதலில் பார்த்த மகல்சபாதி  அவரை மசூதிக்கு அழைத்துச் சென்று அவருக்கு பல சொளகரியங்கள் செய்து, தன் நண்பர்கள் பலரை அறிமுகப்படுத்தி வைத்தார்.  மகல்சபாதி  கூற்றுப்படி பாபா முதலில், குங்குமப்பூ கலரிலுள்ள உடை, தொப்பி,வேட்டி அணிந்திருந்தார்.பிறகு பாபாவுக்கு மகல்சாபதி நண்பர் காசிராம் என்பவர் பச்சை நிற  கஃனி தைத்து கொடுத்தார். அதன் பிறகு வெண்மை நிற கப்ஃனி தலையில் வேட்டி கட்டியிருந்தார்..பல வருடங்கள் பாபாவுடன்  வாழ்ந்ததால் பாபாவின் பழமொழிகள், புரிந்து கொள்ள முடியாத பேச்சுக்கள், அனைத்தும் மகல்சபாதிக்கு தெரியும். பலர்  மகல்சபாதியிடம் கேட்டு தெரிந்து கொள்வார்.... 

மசூதியிலும் சாவடியிலும் பாபாவுடன் மாறி பாபாவை  முதலில் பார்த்த மகல்சபாதி  அவரை மசூதிக்கு அழைத்துச் சென்று அவருக்கு பல சொளகரியங்கள் செய்து,  தன் நண்பர்கள் பலரை அறிமுகப்படுத்தி வைத்தார்...மகல்சபாதி கூற்றுப்படி பாபா முதலில், குங்குமப்பூ கலரிலுள்ள உடை, தொப்பி,வேட்டி அணிந்திருந்தார்...பிறகு பாபாவுக்கு  மகல்சாபதி நண்பர் காசிராம் என்பவர் பச்சை நிற  கஃனி தைத்து கொடுத்தார். அதன் பிறகு வெண்மை நிற கப்ஃனி தலையில் வேட்டி கட்டியிருந்தார்...பல வருடங்கள்பாபாவுடன்  வாழ்ந்ததால் பாபாவின் பழமொழிகள், புரிந்து கொள்ள முடியாத பேச்சுக்கள், அனைத்தும் மகல்சபாதிக்கு தெரியும். பலர்  மகல்சபாதியிடம் கேட்டு தெரிந்து கொள்வார். 

மசூதியிலும் சாவடியிலும் பாபாவுடன் மாறி மாறி தூங்கிய மகல்சபாதியிடம், பாபா தான்  பதரி கிராமத்தில்  பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்றும்,  பிறகு ஒர் பஃகீருக்கு அவரை வளர்க்க  கொடுக்கப்பட்டதாகவும்,  பத்ரி கிராமத்தை சேர்ந்தவர்கள் வந்த போது அந்த கிராமத்து மக்களை  பற்றி கேட்டு அறிந்து கொண்டதாக கூறினார்...பாபாவின் சாவடி ஊர்வலத்தில் மகல்சபாதி தன்னை மறந்து பாபாவின் மேல் இருக்கும்  அன்பினால் மஹல்ஸாபதி ஏதோவொரு ஆவேசம் பிடித்தவர் போல் ஆடுவார்...அதனால் பாபாவின் ஏகாக்கிர சித்தம் (கவனம்) சிறிதளவும் கலைக்கப்படாதது கண்டு அனைவரும் அதிசயித்தனர்.  தமது கையில் விளக்குடன் தாத்யாபாடீல் பாபாவின் இடப்புறத்திலும் பகத் மஹல்ஸாபதி வலப்புறத்திலும் பாபாவின் ஆடையின் நுனியைப் பிடித்துக்கொண்டு வருவார்கள். முடிவில் பின்னர் ஷாமா சில்லிம் (புகைபிடிக்கும் மண்குழாய்) தயார்செய்து அதை தாத்யா பாடீலின் கையில் கொடுக்க அவர் அதைத் தமது சுவாசத்தால் ஒருமுறை உறிஞ்சிய பின்னர் பாபாவிடம் கொடுக்கிறார்.  பாபா புகைத்த பின்னர் அது பகத் மஹல்ஸாபதியிடம் கொடுக்கப்பட்டு பின்னர் சுற்றி எல்லோரிடமும் வழங்கப்படும்...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻🙏🏻 

ஒளிர்த்து உலகமெல்லாம் தான் உள்வெளி வியாபித்து...,!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

ஒளிர்த்து உலகமெல்லாம் தான் உள்வெளி வியாபித்து

ஒளிர்ந்திடும் அப்பிரமம் ஓர்வாய் – ஒளிரும்

நெருப்பினில் காய்ந்து அங்கி நேர் ஒளிரும் அந்த இரும்புகுண்டைப் போலவே....!!!

நன்கு காய்ந்து எரியும் அக்னியில் இடப்பட்டுள்ள ஓர் இரும்புக் குண்டு, அக்னியைப் போலவே பிரகாசிக்கும். அவ்வாறு ஒளி விடும் குண்டைப் போலவே உலகில் உள்ள அனைத்தையும் பிரம்மம் பிரகாசிக்கச் செய்து, அவை அனைத்தின் உள்ளும், புறமும் வியாபித்துத் தானும் ஒளிர்விடும் என்பதை ஆராய்ந்து அறிந்துகொள்......

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻🙏🏻

உலகில் நடக்கும் காரியங்களுக்கும் ஆன்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இங்கு கூறப்படுகிறது.

 


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

கருவிகளின் தொழில் கண்ட அவிவேகி

கருத்தன் போன்று ஆன்மாவைக் காண்பான்...துரிதமாய்

ஓடும் மேகம் கண்டு உணர்விலி சந்திரனே

ஓடுகிறான் என்பதை ஒத்து.....!

ஆகாயத்தில் வேகமாக ஓடும் மேகங்களைப் பார்த்த பகுத்தறிவில்லாத ஒருவன் சந்திரனே வேகமாகப் போகிறது என்று சொல்வதைப் போல, ஐந்து கர்ம இந்திரியங்களின் மூலம் செய்யப்படும் செய்கையைப் பார்த்து உள்ளதையும் இல்லாதையும் பிரித்துப் பார்த்து அறியமுடியாதவன் ஆன்மாவே செயலில் ஈடுபடுவதாக நினைப்பான்....

உலகில் நடக்கும் காரியங்களுக்கும் ஆன்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இங்கு கூறப்படுகிறது. நாம் பயணம் செய்யும் ரயில் வண்டி வழியில் ஒரு ஸ்டேஷனில் நின்றுக் கொண்டு இருக்கும்போது, பக்கத்துத் தண்டவாளத்தில் உள்ள மற்றொரு ரயில் எதிர்ப்புறமாகக் கிளம்பினால் நமது வண்டியே கிளம்பிவிட்டது போலத் தோன்றுவது நமது அனுபவம் தானே...? அதேபோல வானத்தில் உள்ள மேகக் கூட்டங்கள் நகரும்போது, அவைகளின் பின்னால் உள்ள சந்திரன் நகர்வதுபோல் நமக்குத் தோன்றும். அதை நன்கு கவனித்துப் பார்ப்பவனுக்குத்தானே எது நிலை கொண்டுள்ளது, எது நகர்கிறது என்று தெரியும்? அதே போல, உடல் வேறு ஆன்மா வேறு என்று பிரித்துப் பார்த்து அறிய முடியாதவன், ஆன்மாவின் சந்நிதானத்தில் உடலின் கர்ம இந்திரியங்களால் நிகழும் நிகழ்ச்சிகளை ஆன்மாவே ஈடுபட்டுச் செய்வதாக நினைக்கிறான்...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻🙏🏻.

புதன், ஜனவரி 31, 2024

உன்னோடு நான் இரவு பகலாக இதைத்தான் சொல்கிறேன்...!



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த  பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

உன்னோடு நான் இரவு பகலாக இதைத்தான் சொல்கிறேன்...!

"இரவு பகலாக தேஹாபிமானத்திலும் புலனின்பங்களிலும் மூழ்கிப் போனவருக்கு குருவின் உபதேசம் வீணாகிப் போகிறது. அவர் உலக வாழ்விலும் தோற்றுப் போகிறார்..ஆன்மீக வாழ்விலும் தோற்றுப் போகிறார்...இதயத்தை தூய்மை செய்து கொள்ளாமல் ஆன்மீக வாழ்வில் நுழைபவர் தம்முடைய ஞான கர்வத்துடன் ஊர்வலம் வருகிறார். உண்மையில் அது பலனேதும் தராத முயற்சி .."ஆகவே, எது தேவையோ அதைப் பேசுங்கள்...எவ்வளவு ஜீரணிக்க முடியுமோ அவ்வளவே சாப்பிடுங்கள். இல்லையெனில், அஜீரணம் ஏற்படும். இது அனைவரும் அறிந்ததே..."என்னுடைய கஜானா நிரம்பியிருக்கிறது; யார் வந்தாலும் எதை வேண்டினாலும் கொடுக்கிறேன். ஆனால், வாங்கிக் கொள்பவருடைய தகுதியை நிர்ணயித்து அவரால் சமாளிக்க முடிந்த அளவே கொடுப்பேன்...

ஓம ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

இறைவன் இருக்கின்றான்....! நம்பித்தான் ஆகவேண்டும்....!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

இறைவன் இருக்கின்றான்....! உணர்ந்து தெளிந்து நம்பித்தான் ஆகவேண்டும்....!🙏🏻🙏🏻

ஒருவன் மாலை நேரத்தில் ஆற்றங்கரையில் ஒய்விற்காக நடந்து சென்று இயற்கையை ரசித்தான். ஆற்றில் நீரில்லை. வரண்டிருந்த்து. அடுத்த நாளும் இயற்கையை ரசிக்கச் சென்றவன் ஆச்சரியப்பட்டான். ஆற்றில் நீர் நொப்பும் நுரையுமாக ஓடிக்கொண்டிருந்தது. மேற்கே மழை. அதனால் ஆற்றில் வெள்ளம் என அவனைக் கடந்தசென்ற ஒருவர் சொல்லிச் சென்றார், இவன் கண்டது வெள்ளம். காணாதது மழை. நம்பித்தான் ஆக வேண்டும். கண்ட வெள்ளத்தைக் கொண்டு காணாத மழையை நம்ப வேண்டும்.. உலகில் காணும் இயற்கையின் செயல்களிலிருந்து நாம் இதுகாறும் காணத இறையை அளவிடத்தான் வேண்டும்.....

காலத்தில் இலைகள் உதிர்ந்து மீண்டும் தளிர்கின்றன....பூ பூத்துக் காய்கின்றன. பனி கொட்டுகின்றது...குளிர் வந்து போகின்றது. வெய்யில் வெம்மை காட்டுகின்றது. மழை பெய்கின்றது. தென்றல் வீசுகின்றது.... இயற்கையின் இந்த விளையாட்டுகளுக்குச் சொந்தக்காரன் யார்..யார் இந்த விளையாட்டை புவியில் நிகழ்த்துபவன். காணும் ஒன்றிலிருந்து ஓர் அளவைக் கொண்டு காண ஒன்றை நிர்ணயித்து உணர்ந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்....

பௌர்ணமி நாளில் ஒருவன் கோவிலுக்குப் போகின்றான....ஒருவன் ஒருவனைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றான்... ஒருவன் தன் வாழ்வில் முன்னேற வழி என்ன என்று யோசனையிலிருக்கின்றான். இது போன்ற பல்லாயிரக்கணக்காண நிகழ்வுகள் செயல்கள் அந்த பௌர்ணமி நாளில் நடந்து கொண்டிருப்பதால் அந்த செயல்களின் நன்மை தீமைகளுக்கு அந்த நாள் எப்படி பொறுப்பாகும். ஒவ்வொரு நிகழ் செயலும் அந்தந்த உயிர்களின் ஆன்மாக்களையே சாரும் என்பதை உணர்வாய்....!

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

நம்பினால் நம்புங்கள்.....!

 

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி  சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

நம்பினால் நம்புங்கள்.....!🙏🏻

உயிர் என்பது என்ன..! அது எங்கே இருக்கின்றது. அதைக் கண்டு பிடித்தவர் யார்...! அதற்கு எடையோ, பரிமாணமோ இருக்கின்றதா இல்லையே. ஆனால் அது ஐம்பூதங்களையும் வெல்லும் இயக்கும் சக்தி கொண்டுள்ளது. சிலை வடிக்கும் சிற்பியைப் போல் அனைத்து உயிரினங்களுக்கும் உடலை வெவ்வேறு வகையாகத் தருகின்றது. மரத்திற்கு மரம் இலையை விதவிதமாக வடிவமைக்கின்றது. மலர்களை வித வித வண்ணங்களாக தோன்றுவித்து பூமியை அழகு படுத்துகின்றது. பறவைகளுக்கு பலவித ஸ்வரங்களுடன் கூடிய குரலை அளித்து இன்னிசையை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு இனமும் அதன் பிரத்தியோக சைகை சமிக்ஞை ஒலிகளைப் பெற்றுள்ளது. உயிர்களுக்காக உற்பத்தியாகும் பொருள்களுக்கு சுவையை சேர்த்து விடுகின்றது. உயிர்கள் இயங்க ஆக்ஸிஜனை தாவரங்களிலிருந்து வெளிப்படுத்துகின்றது. இப்படி ஒவ்வொரு உயிரினங்களுக்கும் தனித் தன்மையுடன் விளங்கக் காரணம் கண்ணுக்குப் புலனாகாத நுண்ணிய செல்-அணு தன்னுள்ளே கொண்டுள்ள ஜெர்ம் என்பதே ஆகும். சகல ஜீவன்களுக்கும் உயிர் கொடுக்கும் இந்த செல் அணு எப்படி தோன்றியது. இயற்கை உயிரைப் படைக்க வில்லை. மலைகளும் மரம் செடி கொடிகளும் நீரும் கடலும் உயிரை தோற்றுவிக்க ஏதுவானதாயில்லாமல் இருக்க சிறந்த உயிரை புவியில் தோற்றுவித்த அந்த படைப்பாளி யார்...!


பிராணிகளுக்கும் விலங்குகளுக்கும் ஒரு வித ஞானத்தை இயற்கைத் தூண்டுதலை புகட்டினவன் யார்...சால்மன் என்ற ஒருவகை மீன் பலவருடங்கள் கடலில் வாழ்ந்துவிட்டு ஆற்றுக்கு திரும்பி வருகின்றது. கிளை நதி பிரியும் ஓர் இடந்தில் பிறந்த அது பல வருடங்களுக்குப்பின் அந்த இடத்திற்கு வந்து சேரும் ஞானம் அதற்கு கொடுத்தவன் யார்.ஈல் என்ற நீர் பிராணிகள் வளர்ந்து முதிர்ச்சியடைந்ததும் கடலுக்குச் சென்று முட்டையிட்டு தன் இனம் வளர குஞ்சு பொறித்து இனவிருத்தி செய்து இறந்துவிடும். நீரைத் தவிர வேறொன்றும் அறியாத குஞ்சுகள் புறப்பட்டு பயணம் செய்து தன் பெற்றோர் வசித்த நீர் நிலைகளுக்கு வந்து சேரும் ஞானத்தை அளித்தவன் யார்..! அவைகளுக்கு வழிகாட்டி யார்...!

ஒரு வகை குளவிகள் முட்டையிட்டு அந்த இடத்தில் ஓர் வெட்டுக்கிளியை மூர்ச்சையடையும் அளவிற்கு கொட்டி வைத்துவிடும். வெட்டுக்கிளி சாகாது. ஆனால் மயக்க நிலையிலேயே இருக்கும். குளவியின் குஞ்சுகள் செத்த உயிரின் மாமிசம் ஒத்துக்கொள்ளாது என்பதால் உயிரோடு அவைகளுக்கு உண்ண மயக்க நிலையில் உள்ள வெட்டுக்கிளி. இந்த ஏற்பாடுகளை செய்த குளவி மீண்டும் தன் குஞ்சுகளைப் பார்க்க வருவதேயில்லை. எங்கோ சென்று அது இறந்து விடுகின்றது. இந்த ஞான அறிவை குளவிக்கு கொடுத்தவன் யார்...!

கூட்டமாக பறக்கும் பறவைகள் அம்பின் முனைபோன்ற அமைப்பில் பறப்பது தான் மற்றொன்றுடன் மோதிவிடக்கூடாது என்பதற்காக! குருவிகள் கூடு கட்டியிருப்பதை நேர்த்தியான அந்தபின்னலை அவைகளுக்குச் சொல்லிக் கொடுத்தவர் யார்...!பிராணிகளுக்கு இருக்கும் இயற்கைத் தூண்டுதலைவிட மேலான திறம் கொண்ட சக்தி ஒன்று மனிதனுக்கு இருக்கிறது என்றால் அது காரண காரியங்களை ஆய்வு செய்யும் பகுத்தறிவாகும். வேறு எந்த பிராணிக்கும் இல்லாத இது எதனால்! இது எப்படி! என சிந்திக்கும் ஆற்றல் அளித்த அந்த பரம ஞான சக்தி யார்...!

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

செவ்வாய், ஜனவரி 30, 2024

மாயம்மா யார்..?


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

மாயம்மா யார்..? 

அவர் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா எனும் ஆலயத்தில் இருந்து தேவி காமாக்கியா எனும் பராசக்தியாக வெளிவந்தார் என்பதாக பரவலான நம்பிக்கை உள்ளது. ஆனால் அவர் மக்களிடையே பிரபலமடைந்து  வெளித் தெரிய ஆரம்பித்தது  கன்யாகுமரி மாவட்டத்தில்தான். மாயம்மா எப்பொழுது அஸ்ஸாமில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தார் என்ற விவரமோ,  இல்லை அவர் எப்படி இங்கு வந்தார் என்பதோ எவருக்கும் தெரியவில்லை. அவருடைய பெற்றோர்கள் குறித்த  தகவலும் எவருக்கும் கிடைக்கவில்லை. இன்னொரு செய்தியின்படி, மாயம்மா அவர்கள் முன் பிறவியில் பெரிய சித்தராக இருந்து திபெத், நேபாளம்  மற்றும் காசி போன்ற இடங்களில் பல காலம் தவம் இருந்தப் பின் 1920 ஆம் ஆண்டு வாக்கில் கடைசி பிறப்பு எடுத்து கன்னியாகுமரிக்கு வந்து தவத்தில் இருந்தார் என்பதாக கூறப்படுகின்றது....

முதலில் அவர் சித்தர் என்பதோ அல்லது தெய்வீக அன்னை என்பதாகவோ யாருக்கும் தெரியாமல்தான் இருந்துள்ளது. பிச்சைக்காரி போல அழுக்கான, கிழிந்து இருந்த ஆடைகளுடன், அருவருப்பான வெளித்  தோற்றத்தில் கன்யாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலும் கடற்கரையில் அவர் உலவுவதை கவனித்து இருக்கின்றார்கள். அவருடன் எப்போதுமே பல நாய்கள் சுற்றிக் கொண்டே இருக்கும்.  கடற்கரையில் காலை, மாலை, இரவு என எந்நேரமும் படுத்துக் கிடப்பாராம். தாகம் பசி என எதுவுமே கிடையாதாம். யாராவது உணவு கொடுத்தால் உண்பாராம், இல்லை எனில் நாள்  கணக்கில் பட்டினியாகவே இருப்பாராம்.  தங்க வீடும் இருந்ததில்லை. எங்கு இருப்பாரோ அங்கேயே உறங்குவாராம்.  யாராவது உணவு கொடுத்தால் தேவை எனில் அதை பெற்றுக் கொண்டு உணவு  அருந்துவாராம். அப்படி உணவு அருந்தும்போது அவர் கூடவே என்றும் சுற்றிக் கொண்டு இருக்கும் நாய்களுக்கு  தனது உணவில் இருந்து சிறிது போடுவாராம். உணவு கிடைக்கவில்லை என்றால் சாப்பிடாமலேயே பல நாட்கள் பட்டினியாகவே இருப்பாராம். அதனால் அவர் சோர்வு அடைந்ததும்  இல்லை. எந்த சித்தர்களை சுற்றி நாய்கள் திரிந்து கொண்டே இருக்குமோ அவர்கள் கால பைரவரின் அவதாரங்கள், இல்லை என்றால் கால பைரவரின் சக்திகளை முழுமையாக கொண்டு  இருந்தவர்கள் என்பார்கள்....

பல நேரங்களில் அவர் கடற்கரையின் ஓரத்தில் உள்ள கடல் பாறைகள் மீது அமர்ந்த கொண்டு இருப்பதையும், கடலுக்குள் மூழ்கி கடல் பாசிகளையும், குப்பைகளையும் வெளியில் எடுத்து வந்து அவற்றை கடற்கரையில்  கொட்டி தீ மூட்டி விடுவதையும் மக்கள் பார்த்து உள்ளார்கள். எப்படி அவரால் வெறும் கையினால் தீ மூட்ட முடிந்தது என்பதோ  எதற்காக தீ மூட்டினார் என்பதோ யாருக்கும் புரியாமல் இருந்துள்ளது. ஆனால் சித்தர்கள் தாம் எங்கெங்கு தவத்தில் இருப்பார்களோ அங்கெல்லாம் தீ மூட்டி ஹோமம் வளர்த்து தவத்தில் இருந்துள்ளார்கள், எங்கெங்கு தவம் இருப்பார்களோ, அங்கெல்லாம் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பது உண்டு என்பதினால் ஒருவேளை அன்னை மாயம்மா கன்யாகுமரி கடற்கரையில் ஹோமம் வளர்த்து பாறைகள் மீது தவத்தில் இருந்திருக்கலாம் என்பதாகவே நினைக்கத்   தோன்றுகின்றது.  அதற்கான உண்மையான காரணம் தெய்வீக அன்னை மாயம்மாவுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும்.....

ஒரு தெய்வம் என்பது அருவருப்பான, அகோர தோற்றத்தில் பூமியில் வாழ்ந்து கொண்டு இருக்க முடியுமா? அதற்கும் ஒரு பின்னணி  கதையைக் கூறுகின்றார்கள். காமாக்யா ஆலயத்தில் இருந்து வெளிவந்த மாயம்மா முதலில் அழகிய தோற்றம் கொண்டவராக இருந்தாராம். ஆனால் கன்னியாகுமரியின் சில இடங்களில் பெண் பித்தர்கள் அனாதைபோல  சுற்றிக் கொண்டு இருந்த அவளிடம் தவறாக நடக்க முனைந்தபோது அவர் தன்னுடைய தோற்றத்தை ஒரே நாளிலேயே அகோரமாக மாற்றிக் கொண்டாராம். அதனால்தான் அவர் பிச்சைக்காரியைப் போன்ற தோற்றத்தில் காட்சி அளித்து வந்தாராம். தனது உருவத்தை இப்படி எல்லாம்  நினைத்தபடி மாற்றிக் கொள்ள முடியுமா என யாரும் நினைக்கலாம்.  அது முற்றிலும் முடியும் என்பதே  பதில் ஆகும். தத்தாத்திரேயர் சரித்திரத்தைப் படிப்பவர்கள் அவர் வேண்டும் என்றே பிச்சைக்காரரைப் போன்ற தோற்றத்தில் உலவி வந்ததையும், மொடாக் குடிகாரனைப் போல உருவை மாற்றிக் கொண்டு இறைச்சிகளை உண்டபடி இருந்து கொண்டு  காட்சி அளித்து வந்ததையும், ஆனாலும் அவரை முழுவதுமாக புரிந்து கொண்டு அதே கோலத்தில் சுற்றித் திரிந்தவரை தொடர்ந்து சென்று வணங்கி வந்த உண்மையான மக்களுக்கு தன்னுடைய தெய்வ அவதாரத்தைக்  காட்டி காட்சி அளித்து உள்ளதையும் அவர் சரித்திரத்தில் படித்து இருக்கலாம். அதே  போலவேதான் உண்மையான பராசக்தி மாயம்மாவும் முற்றிலும் அலங்கோலமான  காட்சியில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டாலும், அவரிடம் சரணடைந்த, உண்மையான ஆன்மீக பக்தர்களுக்கு அவர் பராசக்தியாகவே தோற்றமும் தந்து உள்ளார் என்பதும் உண்மையே.  இன்னும் சிலர் அவரை கன்யாகுமரி அம்மன் என்றும், மஹாலக்ஷ்மியே அவர் என்றும் கூறி உள்ளார்கள். அந்த இரு தெய்வங்களும் அன்னை பராசக்தியின் தெய்வீகக் கதிர்களில் இருந்து வெளிவந்த அவதாரங்கள் என்பதினால் தேவி பராசக்தியும் அவர்களும் ஒருவரே ஆகும்...

மாயம்மாவின் தெய்வீக சக்தி வெளித் தெரிந்த கதை தனியானது. கன்யாகுமரி  கடற்கரையில் சுற்றிக் கொண்டு இருந்தவரை, அருவருப்பான கோலத்தில், கிழிந்த மற்றும் அழுக்கான துணிமணிகளை அணிந்து கொண்டு சுற்றித் தெரிந்த அவரை முதலில் ஒரு பைத்தியக்கார பிச்சைக்காரி என்றே அனைவரும் நினைத்து வந்தார்கள். அவள் யாராவது ஒருவர் அருகில் சென்றாலே அவர்கள் அவளை விட்டு விலகிச் செல்வார்களாம். அவர் ஒரு மாபெரும் சித்த புருஷினி என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர் கன்னியாகுமரிக்கு  1920 ஆம் ஆண்டுவாக்கில் வந்திருக்க வேண்டும் என்று நம்பப்படும் அந்த காலகட்டத்தில்தான் அவரை  முதலில் பெரும்பாலும் மீனவர்கள் பார்த்து இருக்கின்றார்கள், 1925 ஆம் ஆண்டு வாக்கில்தான் அவள் புகழும் கன்யாகுமரியில் பரவலாயிற்று என்று கூறுகின்றார்கள்.

ஒரு நாள் வெளியூரில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஊர்தி ஒன்று தெருவில் சென்று கொண்டிருந்த ஒரு நாய் மீது வண்டியை ஏற்றிவிட்டு சென்று விட்டது. நாயின் வயிறு கிழிந்து குடல் வெளியே வந்து சரிந்து விழுந்திருக்க, அதன் துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல், சாலையில் விழுந்து கிடந்த அந்த நாயை கண்ட மக்கள் முகம் சுளித்தார்கள். அதற்கு உதவி செய்ய அதன் அருகில் செல்லவே இல்லை. அப்போது அந்த பக்கமாக நடந்து சென்று கொண்டு இருந்த மாயம்மா எந்த விதமான சலனத்தையும் வெளிக் காட்டாமல்  மெல்ல நடந்து சென்று இறந்து விட்டதை போல கிடந்த அந்த நாயை  எடுத்து தனது மடியிலே  வைத்துக் கொண்டு  அதன் குடலை அதன் வயிற்றுக்குள்  தள்ளிவிட்டு சாலையில் கிடந்த மெல்லிய குச்சிகளை கிழிந்த பகுதியை சேர்த்து தையல் போடுவது போல அதன்  உடலில் செருகி வைத்தாள். கையில் சிறு பிடி மணலை எடுத்து அதை தடவிக் கொடுக்கலானாள்.  அதைக் கண்ட மக்கள் அருவருப்பான நிலையில், குடல் வெளியே வந்து விழுந்திருந்த இறந்த நாயை மடியிலே வைத்துக் கொண்டு  தடவிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறாளே பைத்தியக்காரி என அருவருப்பாக பார்த்துக் கொண்டே சென்றார்கள். எதையும் சட்டை செய்யாமல் மாயம்மா அதே சாலையின் ஓரத்தில் அந்த நாயை வைத்து விட்டுச் சென்றாள். இறந்து போக இருந்த நாயும் அங்கேயே கிடந்தது...

என்ன ஆச்சர்யம் மறு நாள் காலையில் இறந்து கிடந்த அந்த நாய் கண்களை திறந்து பார்த்தது,  காதுகளை அசைத்தது.  அதன் பின் அது எழுந்து ஓடலாயிற்று. அதைக் கண்ட மக்கள் அதிர்ந்து நின்றார்கள். குடல் வெளியில் வந்து சிதைந்து கிடந்த உடலில் காயம் பட்ட வடு கூட காணவில்லை. இதென்ன மாயம் ? குடல் சரிந்து  இறந்து கிடந்த அதே நாய் உயிர் பெற்று  ஓடுகின்றதே என்பதைக் கண்ட  மக்கள் அவள் எதோ தெய்வ சக்தி கொண்ட பெண்மணி என்பதாக புரிந்து கொண்டு  அவளை கனிவோடு  பார்த்தார்கள். மெல்ல மெல்ல அவள் யார் என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய்தார்கள், கன்யாகுமரி கடற்கரையிலே உலவி வந்திருந்த மாயம்மா  கடல் மீது நடந்து செல்வதைக் கண்டார்கள்.  தரை மீது நடப்பது போல கடல் மீதும் நடந்து  சென்று விட்டு கடல் நடுவே சற்று நேரம் இருந்துவிட்டு  திரும்புவதைக்  கண்ட மக்கள் நிச்சயம் அவள் தெய்வீக பெண்மணியே என்பதை உணரலானார்கள்.  அது முதல் கன்யாகுமரி மக்கள் மாயம்மாவை மரியாதையோடு நடத்தி நல்ல உணவும்   தந்தார்கள். தங்கி கொள்ள ஒரு இடமும் தந்தார்கள் என்றாலும் அவர் எங்கும் நிரந்தரமாக தங்கவில்லை.  கன்யாகுமரி கடற்கரை அருகில் உள்ள கடைவீதியில்  இருந்த ஒரு பிள்ளையார் கோவிலில் வெளி தாவாரத்தில்தான் அவர் இரவில் தங்கி இருப்பாராம். ஒரு விதத்தில் பார்த்தால் அந்த அன்னை கடல் நீரின் மீதே வாழ்ந்திருக்கின்றாள் என்பதாகவே கருதுகின்றார்கள்...

வீதியிலே நடந்துக் கொண்டே இருப்பவர் திடீர் என ஏதாவது உணவகத்திலோ அல்லது கடையிலோ சென்று உணவு கேட்டு எடுத்துக் கொள்வாராம். தன்னை கூப்பிட்டால் அந்த கடைக்கு அவர் செல்ல மாட்டாராம்.  தான் எந்த கடையை விரும்புவாரோ அந்தக் கடையில்தான் நுழைவாராம்....அன்று முதல் அவருக்கு உணவு தந்தவர்கள் கடையில்  அமோகமாக விற்பனை ஆகும். ஆகவே கடைக்காரர்கள்  தமது கடையில் அன்னை நுழைய மாட்டாரா என வேண்டிக் கொண்டு தவம் இருப்பார்களாம். தனக்கு கிடைக்கும் உணவில்  சிறிது கையில் எடுத்துக் கொண்டு திடீர் நாய்களுக்கு ஊட்டி விட்ட பின், அதே கையுடன் சுற்றி உள்ளாவார்களுக்கும் வாயில் ஊட்டி விடுவாராம். அதை அறுவறுப்பாக பார்த்த சிலர் விலகிச் சென்றார்கள் என்றாலும், அதை பெற்றுக் கொள்வதை பாக்கியமாகவே பல மக்கள் கருதினார்கள். ஆனால் தினமும் அதை மாயம்மா செய்தது  இல்லை. அவருக்கு என்று தோன்றுமோ அன்றைய தினத்தில் மட்டுமே அதை செய்வாராம்.....  

அது மட்டுமா? மீனவர்கள் அதிகம் வாழ்ந்த அந்த ஊர் மக்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்வார்கள். திடீர் திடீர் என கடலில் சீற்றங்கள் ஏற்பட்டபோதெல்லாம் கடலில் விழுந்து தத்தளிக்கும் அவர்களை வெளியே இழுத்து வந்து கரையில் சேர்ப்பாளாம்  மாயம்மா. பல மீனவர்ளுக்கும் இந்த அனுபவம் ஏற்பட அவையும் வெளியிலே தெரியத்  துவங்கியது.  கடலுக்குள் சுமார் 35 அல்லது 40கிலோமீட்டர் வரை உள்ளே சென்று மீன் பிடிக்க வந்திருக்கும் படகுகளின் நடுவே நீச்சல் அடித்துக் கொண்டு இருப்பாராம். அந்த நிலையில்  கொந்தளிக்கும் கடலில் நீந்திக் கொண்டு இருக்கும் அவளை பார்த்து பரிதவிக்கும் மீனவர்கள் தங்கள் படகில் ஏறிக்கொண்டு கரைக்கு வருமாறு அழைத்தாலும் மாயம்மா அதில் ஏறிக்  கொள்ள மாட்டாராம்.  மீன் பிடித்த பின் படகுகள் கரைக்கு திரும்பும்போது அவர்களுடன் நீந்தியபடியே கரைக்கு திரும்பும் மாயம்மா திடீர் என  நீருக்குள் சென்று மறைந்து விடுவாராம். அவளைக் காணாமல் மூழ்கி விட்டாரோ என பயந்தபடி, பரிதவித்துக் கொண்டு கரைக்கு திரும்பினால் மாயம்மா அங்கு கரையில் சிரித்தபடி அமர்ந்து இருப்பாராம்....

மெல்ல மெல்ல உள்ளூர் ஜனங்கள் அவளை பக்தியுடன் வணங்கினார்கள். ஆனால் அவளோ அவர்களுடன் ஒரு தோழமையோடுதான் பழகி இருந்திருக்கின்றார். பலரது தீராத வியாதிகளும் துயரங்களும் மாயம்மாவினால் விலகி உள்ளன. இத்தனைக்கும் மாயம்மா பேசியது இல்லை. ஒலி ஓசை போன்றவற்றை வாயினால் எழுப்பி அதன் மூலமே மாயம்மா தமது மாயங்களை வெளிக்காட்டி உள்ளார். மெல்ல மெல்ல மாயம்மா தெய்வமே என்பதை உணர்த்திய பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.  தமக்கு துன்பங்களும் துயரங்களும் ஏற்பட்டபோதெல்லாம் அவளிடம் சென்று அதைக் கூற அவர்களை வெறும் கையாலேயே ஆசீர்வதிப்பார் மாயம்மா. பலரது நியாயமான துன்பங்களும் துயரங்களும்  தீரலாயின...

ஓம் ஸ்ரீ சாயீராம்....🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

மௌனம், என்கிற ஒரே மொழியை மட்டுமே கடவுள் புரிந்து கொள்கிறார்....!!!???



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

மௌனம், என்கிற ஒரே மொழியை மட்டுமே கடவுள் புரிந்து கொள்கிறார்....!!!??

இந்துக்கள் சமஸ்கிருத மொழியை கடவுளின் மொழியாக, நம்பினாலும்கூட, கடவுள் சமஸ்கிருத மொழியையும் கூட புரிந்து கொள்ள மாட்டார்....என்னதான் முகமதியர்கள் நம்பிக்கையோடு இருந்தாலும் கடவுள் அரபி மொழியையும்கூட புரிந்து கொள்ள மாட்டார்.

யூதர்கள் என்னதான் நம்பிக்கையோடு இருந்தாலும் கூட கடவுள் ஹீப்ரு மொழியைப் புரிந்து கொள்ள மாட்டார...இயேசு அராமிக் மொழியைப் புரிந்து கொண்டு அதைப் பேசி இருந்தாலும் கூட அவர் அராமிக் மொழியைப் புரிந்து கொள்ளமாட்டார்....அவரது மொழி என்ன...?அவர் மௌனத்தை மட்டுமே புரிந்து கொள்கிறார்...அவர் மௌனத்தைப் புரிந்து கொள்கிறார். மௌனத்தில் மட்டுமே உண்மையான பிரார்த்தனை இருக்கிறது. .எனவே நீங்கள் வார்த்தைகளின் மூலமாக பிரார்த்தனை செய்தால் நீங்கள் அவரை ஒருபோதும் சென்றடைய மாட்டீர்கள்.

உங்கள் பிரார்த்தனையானது ஒருபோதும் அவரைச் சென்றடையாது.வார்த்தைகள் மிகவும் கனமானவை.உங்களது பிரார்த்தனையானது உயரத்திற்கு எழுந்து இறுதியான ஒன்றினை அடைவதற்கு அவை உங்களை அனுமதிக்காது.மௌனம் மட்டுமே சிறகுகளைப் பெறமுடியும்....நீங்கள் கடவுளை அடைய விரும்பினால், நீங்கள் மௌனத்தின் பாதையை கற்றுக்கொள்ள வேண்டும்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

சத்திய சொரூபமே சாயீ நாதனே...உன்னை காண ஓடோடி வருகிறேன்..என் நினைவும் நீயே..உயிரும் நீயே ..


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

சத்திய சொரூபமே சாயீநாதனே...உன்னை காண ஓடோடி வருகிறேன்..என் நினைவும் நீயே..உயிரும் நீயே.....🙏🏻🙏🏻

தொழுத கைகளை பொருளால் நிரப்பி, அழுத கண்களை அருளால் துடைத்திடும் கருணை வடிவாய், நினைப்பவர் மனதில் நினைக்கும் தெய்வமாக வந்து அருள்புரியும் சீரடி நாதனை. கண்டோபா கோயிலில் முதன் முதலாகப் பார்த்த, மஹல் ஸாபதி ‘யா ஸாயி’ (ஸாயி வர வேண்டும்) என்று அழைத்தவர். அதன்பின் சீரடி நாதனைக் காணும் அத்தனை பக்தர்களும் அப்பெயராலேயே அவரை அழைக்கத் தொடங்கினர். பின்னர் சாயி என்றும் அப்பெயரே சீரடி நாதனுக்கு நிலைத்து விட்டது. சீரடி சாயி தாம் வாழ்ந்த எளிமையான வாழ்க்கை மூலம் மானிடர்க்கு போதனைகளையும், தத்துவங்களையும் சொல்லாமல் சொல்லி, அதற்கேற்ப செயல்முறைகளை அமைத்தவர்...…

‘சா அய்’ என்னும் தமிழ்ச் சொல்லுக்கு ‘உள்ளதன் நுணுக்கம்’ என்ற ஒரு பொருளும் உண்டு. நுணுக்கம் என்பது ‘கூர்மையாய் இருத்தல்’ (Sharpness) என்று வழங்கப்படும். ‘‘பொய்யாதின்றி புலமை நுணுக்கி’ என்பது சீவக சிந்தாமணித் தொடர். கூரிய மெய்யறிவினால் உளங்கொண்டு உணர்பவர்களுடைய கருத்தினால், நோக்குவதற்கு அரிய நோக்கமாகவும், கூரியதாய் உணர்தற்கும் அறிய நுண்ணிய உணர்வாக விளங்குபவன் இறைவன் என்பதை,‘கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே’ என்று சிவபுராணம் கூறும்... 

ஸ்ரீசங்கரர் ஸ்ரீரங்கநாதப் பெருமானை,

‘‘ஸசித்ரசாயீ ஜகதேசாயீ நந்தாங்கசாயீ கமலாங்கசாயீ 

அம்போதிசாயீ வடபத்சாயீ ஸ்ரீரங்கசாயீ ரமதாம் மணேமே II’’

– என்று போற்றும் ஸ்லோகத்தில் ‘சாயீ, சொல்லாட்சி கிடைக்கிறது...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

திங்கள், ஜனவரி 29, 2024

மகல்சாபதி பாபாவின் அத்யந்த பக்தர்.

 ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்..🙏🏻🙏🏻

பக்தர்களுக்கு பாபாவின் உபதேசங்கள்...

மகல்சாபதி பாபாவின் அத்யந்த பக்தர். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள். ஆண் வாரிசு இல்லாமல் பாபாவின் பரம பக்தராகிவிட்டார். பாபாவின் நிழலாக எப்போதும் திரிந்து கொண்டிருந்த மகல்சாபதியை பார்த்து பாபா, “மகல்சாபதி இந்து மதத்தில் புத்தரன் இல்லாதவன் ‘புத்’ என்ற நரகத்தில் தள்ளப்படுவான். என்னுடைய பக்தனாகிய உன்னை அப்படி ஆளாக்குவதற்கு எனக்கு மனம் சம்மதமில்லை. ஆகையால் நீ மீண்டும் சம்சார பந்தத்தில் ஈடுபட்டு புத்திரபாக்கியம் அடைவாயாக” என்றார் பாபா.“சுவாமி நான் ஒரு சந்நியாசி. நான் எப்படி மீண்டும் இல்லறவாசியாக முடியும்”..

“சந்நியாசிகளுக்கு சம்சார பந்தம் கூடாதென்று நான் ஒருபோதும் கூறவில்லையே. ஆண்டவனுக்கு எல்லாம் ஒன்றுதான். நீ போய்வா…” என்று அனுப்பி வைத்தார்...சாயிபாபா சகல சக்திகளின் உறைவிடமாகத் திகழ்ந்தாலும் மனித வாழ்க்கையின் நுட்பமான நடைமுறைகளையும், ஆழத்தையும் கடந்து அருளுரை வழங்குவதில் மகானாகத் திகழ்ந்தார்.ஆன்மீகத்தின் உள்ளர்த்தங்களை தமது பக்தர்களுக்கு தெளிவுபடுத்த பாபா விரும்பினார். பக்தர் நானா சாந்தோர்கர் ஒருமுறை, “பாபா இந்த சம்சார பந்தம் எனக்கு எதற்கு? சம்சாரம் என்பது தேவையற்றதாக சாரமற்றதாக இருக்கிறது.” ஆகையால் என்னிடமிருந்து அதனை அறுத்தெறிய  வேண்டும். சம்சாரம் முதலில் சந்தோஷமளித்தாலும் கடைசியில் துக்கத்தையே தருகிறது. ஆதலின் என்றும் மகிழ்ச்சி அளிக்கும் மார்க்கத்தை அளியுங்கள்.”

‘நானா’ தவறாகப் புரிந்துக்  கொண்டாய். பைத்தியம்போல் பேசுகிறாய். இவ்வுடல் உள்ளவரை சம்சாரம் இருக்கும். அதிலிருந்து இவ்வுலகில் யாரும் தப்ப முடியாது. உன்னால் மட்டும் எப்படி அது சாத்தியம்..? சம்சாரம் என்பது காமம். குரோதம் இவைகளின் வெளிப்பாடு தான். காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்வதால் சம்சாரத்திலிருந்து தப்பிவிட முடியாது. நீ முற்பிறவிகளில் செய்த கர்ம வினைகளின் பலனையே இப்போது அனுபவிக்கிறாய்.”

நானா அப்போது பாபாவிடம் கேட்டார். “மாறி மாறி இன்பமும், துன்பமும் ஆட்கொள்ளாமல் எப்படி இருப்பது...? என்றார்.

“நானா இன்பமாக தோன்றுவதெல்லாமல் உண்மையில் இன்பமில்லை. இன்பம, துன்பம் என்பது எல்லாம் ஒரு மாயை. சுகமும், துக்கமும் அவரவர் மனோபாவத்தைப் பொறுத்ததுதான். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகியவை மாயையின் தோற்றம். இந்த ஆறு விரோதிகளை மனதில் எழாது அடக்கினால் நாம் விவேகத்தைப் பெற்று விடுவோம். அதன் பின் இன்ப, துன்பங்கள் நம்மை பாதிக்காது...

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻


உன்னை அறிய உனக்கு உன்னை அறியோன்....!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

உன்னை அறிய உனக்கு உன்னை அறியோன்....!

திரைகளைக் கடந்து சூரியன் வெளியே வரும்போது அது மட்டும் பிரகாசிக்காது, சுற்றியுள்ள அனைத்தையும் பிரகாசிக்கச் செய்வதுபோல, சாதகன் தன் உண்மை நிலையை அறிய வரும்போது அவனது அறிவும் அனைத்துலகையும் உள்ளது உள்ளபடி அறிய முடிகிறது. அது மட்டுமல்லாது அவனைச் சுற்றியுள்ள அனைவரையும் ஆன்மா பற்றி அறிய வைக்கவும் முடிகிறது...ஒரு முறை ரமணர் இருக்கும் பக்கம் அவருக்கு வெகு அருகில் ஒரு பாம்பு வந்ததாம். அவர் பாம்பைப் பார்த்துக்கொண்டு நிற்க, பாம்பும் அவரைப் பார்த்து படமெடுத்துக் கொண்டு நின்றதாம். வெகு நேரம் சென்ற பின் பாம்பு தன் வழியே போக, அவரும் அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த அரிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அன்பர் ஒருவர் ரமணருக்கு அந்த சமயத்தில் என்ன மாதிரி உணர்வு இருந்தது என்று அவரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் சொன்னது...“நான் பாம்பை இன்னொரு மனிதனாகப் பார்த்துக் கொண்டு நின்றேன், பாம்பும் என்னை இன்னொரு பாம்பாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தது”. ஆக மற்றதைச் சரியாகப் பார்க்கும் அறிவை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.?

அதனால் ரமணர் சொல்வதுபோல், “அறிவும் அறியாமையும் யார்க்கு என்று அம்முதலாம் தன்னை அறியும் அறிவே அறிவு”. மற்றதெல்லாம் அறிவின்மை கலந்த அறிவே...

ஓம் நமசிவாய...🙏🏻

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

சூரியனின் பிரகாசமான ஒளியினால் உலக மக்கள் அவரவர் தமக்கான தொழிலைச் செய்வது போல....!!??

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

ஞானவொளி ஆன்மாவை நண்ணி உடல் பொறிகள்

மானதம் புத்தியிவை மன்னு தமக்கு ..ஆன தொழில்

ஆற்றிடும் ஆதித்தன் அவிர் ஒளியால் மக்கள் தொழில்

ஆற்றுவது போலும் அறி....!

சூரியனின் பிரகாசமான ஒளியினால் உலக மக்கள் அவரவர் தமக்கான தொழிலைச் செய்வது போல, ஞானப் பிரகாசமான ஆத்மாவைச் சார்ந்து உடல், இந்திரியங்கள், மனம், புத்தி முதலானவைகள் தமக்குண்டான தொழில்களான விஷயங்களில் பொருந்தி செயல்படும் என்று அறிவாயாக..ஆன்மாதான் எல்லாம், அது இருப்பதால்தான் மற்றதெல்லாம் நடந்துக்கொண்டிருக்கிறது என்பதை விளக்குவதற்கு ஓர் உவமானமாக சூரியன் உதித்ததும் அனைவரும் தத்தமது தினப்படி வேலைகளை ஆரம்பித்துச் செய்துகொண்டு இருப்பதைக் காட்டுகிறார். அந்த வேலைகள் நடப்பது சூரியன் உதித்தபின்தான் என்பதால் அவைகளுக்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம்...? அவை செய்யப்பட்டாலும், செய்யப்படாமலே இருந்தாலும் அதனால் சூரியனுக்கு என்ன பாதிப்பு வந்தது? ஒன்றுமில்லை அல்லவா, அதேபோல ஆன்மா இருப்பதால்தான் இந்திரியங்களும், மனமும், புத்தியும் இயங்குகின்றன என்றாலும் அவைகளின் இயக்கத்தால் ஆன்மா எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. உலகையே ஒளிர்விக்கும் சூரியனைப் போல, எல்லா இந்திரியாதிகளையும் ஒளிர்வித்தாலும் ஆன்மா நடக்கும் எல்லாவற்றிற்கும் வெறும் சாட்சியாக மட்டுமே இருக்கிறது. ஆன்மா எந்த இயக்கத்திலும் பங்கு கொள்வதில்லை.

இந்திரியங்கள், மனம், புத்தி இவைகளில் எதனை எடுத்துக்கொண்டாலும் மனிதர்களிலும் சரி மற்ற உயிர்வாழ் இனங்களிலும் சரி ஒன்றுக்கொன்று வேற்றுமைகள்தான் இருக்கும். மற்ற இனங்கள் அதைப் புரிந்துகொள்ளாது போனாலும், மனிதனும் அதைப் புரிந்துக் கொள்ளவில்லை என்றால் ஒரு சமத்துவப் பார்வை வளர வாய்ப்பே இல்லை. அது வளர வேண்டும் என விரும்பும் ஒவ்வொருவரும் ஆன்மா ஒன்று இருப்பதை ஒத்துக்கொள்வதையும், அதுவே அனைத்தின் அடிப்படை உண்மை என்று தெளிந்து கொள்வதையும் மனித வளர்ச்சியின் பரிமாணங்களில் ஒன்று எனக் கொள்ளலாம்..

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻.

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻