ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

ஞாயிறு, நவம்பர் 19, 2023

உண்மையே ஆன்மீகம், சத்தியமே ஆன்மீகம்...!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

🙏🏻🙏🏻உண்மையே ஆன்மீகம், சத்தியமே ஆன்மீகம்...!  அதைவிடச் சிறந்த ஆன்மீகமில்லை...🙏🙏

யார் உண்மையைப் பின்பற்றி மனம், மொழி, செயல்களால் நல்லவர்க்கு உதவியாயிருக்கின்றாரோ அவரே சிறந்த ஆன்மீகவாதி.  கற்றல், கேட்டல், தெரிதல், அறிதல், புரிதலால் மட்டுமே ஒருவர் ஆன்மீக குருவாக முடியாது...உணர்பவரே மற்றவர்களை வழிநடத்த முடியும்.  ஆம், இயற்கையின் நியதிகளை, பிரம்மத்தின் செயல்களை உணர்பவரே பிரம்மஞானி...உண்மை பேசுபவனுக்கே இயற்கை (பிரம்மம்) தன் இரகசியங்களை வெளிப்படுத்தும்.  காரணம், இயற்கை உண்மையானது.  இயற்கையை  உணரும் ஒருவரே ஆன்மீக குருவாக முடியும்.  மற்றவர்கள் பெரும்பாலும் தமது தவறான வழிகாட்டுதலால் மக்களிடையே குழப்பத்தையே விளைவிப்பர்.  அது ஆன்மீகத்தின் தவறன்று.  போலி ஆன்மீகவாதிகளின் தவறு...

ஒரு நாள் வகுப்பறையில்  மாணவர்களிடம் ‘இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் உள்ளீர்கள்..?  கையை உயர்த்துங்கள்’ என்றார் ஆசிரியர் .  அனைவரும் கையை உயர்த்தினர். ஆசிரியர்  அவர்களிடம், ‘இந்து என்றால் யார் தெரியுமா..? இந்து மதம் கூறுவதைப் பின்பற்றுபவனே இந்து.  சும்மா கோவிலுக்கு மட்டும் போய் நெற்றியில் பட்டையும், நாமமும் போடுபவன் இந்துவாக முடியாது.  மதம் என்ன கூறுகிறது...? 

உண்மையே பேசு, உழைத்து முன்னேறு, உன்னுடைய நன்மைக்கு அடுத்தவனைக் கெடுக்காதே என்பதே. .கிறிஸ்தவமும், இஸ்லாமும் இதையே போதிக்கின்றன. உங்களில் எத்தனை பேர் உண்மை பேசுகின்றீர்...?  கையை உயர்த்துங்கள்’ என்றார் ஆசிரியர் ...  ஒருவன் கூட இல்லை.  ‘ஆதலால் இங்கு இருக்கும் யாரும் இந்துவுமில்லை கிறிஸ்தவனுமில்லை முஸ்லிமுமில்லை.  மக்களும் இப்படித்தான் மதத்தைப் பின்பற்றுவதாக நினைத்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர்’.  இதற்குக் காரணம் போலி ஆன்மீக குருக்களே. இயற்கை நிகழ்வுகளை உணர்தல் மிகவும் கடினம். 

 ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன்.  அரசர் ஒருவர் அடிக்கடி கடற்கரைக்குச் சென்று யோசித்துக் கொண்டிருந்தார்.  பல நாட்கள் காலையில் கடற்கரைக்கு வந்து மாலையில் தான் அரண்மனை திரும்புவது வழக்கம்.  ஒரு நாள் கடற்கரையில் ஒரு சிறுவன் காலையிலிருந்து மாலை வரை கடல் நீரை தேங்காய் மூடியில் எடுத்து கடற்கரைக்கு அப்பால் ஊற்றிக் கொண்டிருந்ததைக் கண்டார்.  சிறுவனின் அருகில் சென்று காரணம் கேட்டார்.  சிறுவனோ, ‘கடலை வற்றச் செய்யப் போகிறேன்’ என்றான். அரசரோ, ‘நீயோ சிறுவன்.  இந்த, சிறு தேங்காய் மூடியால் எப்படி பெருங்கடலை வற்றச் செய்ய முடியும்’ என்றார்...சிறுவனோ, ‘உங்கள் சிறிய தலையில் இருக்கும், சிறிய மூளையால் இப்பெரிய பிரபஞ்சத்தின் இரகசியத்தை அறிந்து கொள்ள நீங்கள் முயற்சிக்கும் போது இந்தக் கடலை வற்றச் செய்ய நான் ஏன் முயற்சிக்கக் கூடாது’ என்றான்.  அரசர் திகைத்தார்.  சிறுவன் மறைந்தான். 

சிறுவனாய் வந்தது இறைவனே என்றறிந்தார்.  ஆம்..! பிரபஞ்ச இரகசியங்களை அறிவது, உணர்வது மிகவும் கடினம்....உண்மையான குரு எல்லோரையும் சமமாகவே பாவிப்பார்...காரணம் அவர் பிரம்மத்தை உணர்ந்தவர்... எல்லா மதங்களும் ஒரே பிரம்மத்தின் வித்தியாசமான வெளிப்பாடுகளே என்று அவருக்குத் தெரியும்.  ஆம் பிரம்மத்தை உணர்பவரே ஆன்மீக குருவாக தகுதி உடையவர்..

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...