ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻
நினைக்காத நிமிடங்களும்...மறக்காத மனமும்,..!!
ஹேமத்பந்த் :
பபபா பொருட்களைத் தனியாகத் தின்று நானறியேன். பின்னர் என் மீது இக்கெட்ட வழக்கத்தை ஏன் சுமத்துகிறீர்கள்..? ஷீர்டி சந்தையையே நான் இன்னும் பார்த்தது இல்லை. இன்றைக்கு, சந்தைக்கு நான் போகவே இல்லை. பின்னர் எங்ஙனம் நான் பருப்பு மணிகள் வாங்கியிருக்க முடியும்..? அவைகளை வாங்காதபோது எப்படி நான் உண்ண முடியும்..? எனதருகில் உள்ளவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்காமல் நான் ஒருபோதும் எதையும் சாப்பிடுவதில்லையே..!
பாபா :..அருகிலிருப்பவர்களுக்கு நீர் கொடுப்பது உண்மைதான். ஆனால் ஒருவரும் அருகில் இல்லையென்றால் நீரோ, நானோ என்ன செய்யமுடியும்..? ஆனால் நீங்கள் உண்ணும்முன் என்னை நினைவில்கொள்கிறீரா..? எப்போதும் நான் உம்முடன் இருக்கவில்லையா.,? பின்பு நீர் உண்ணும் முன்பாக எதையேனும் எனக்கு அளிக்கிறீரா..?
சுதாமரின் கதை..
மேற்கூறிய கதை சொல்லப்படும்போது ஹேமத்பந்த் அதே மாதிரியான சுதாமரின் கதையை நினைவுகூர்கிறார். அதே தத்துவத்தை இக்கதையும் விளக்குவதால் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது..
ஶ்ரீகிருஷ்ணரும், அவரது அண்ணனான பலராமரும் சுதாமர் என்ற தோழருடன் அவர்களது குரு சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் வசித்து வந்தனர். ஒருமுறை கிருஷ்ணரும், பலராமரும் காட்டிற்கு விறகு கொண்டுவருவதற்காக அனுப்பப்பட்டனர். பின்னர் சாந்தீபனியின் மனைவி அதேபோல் சுதாமரையும் மூவருக்குமான கடலைப் பருப்புக்களுடன் காட்டுக்கு அனுப்பினாள்.
கிருஷ்ணர், சுதாமரைக் காட்டிடையே கண்டபோது அவரிடம், “தாதா, நான் தாகமாயிருப்பதால் எனக்கு தண்ணீர் வேண்டும்” என்றார், அதற்கு சுதாமர் “வெறும் வயிற்றுடன் தண்ணீர் குடிக்கக்கூடாது. சிறிது நேரம் இளைப்பாறுவது நல்லது” என்றார். அவர் தன்னிடம் கடலை இருப்பதாகவோ, அதைச் சிறிது அவர் எடுத்துக்கொள்ளலாம் என்றோ கூறவில்லை. கிருஷ்ணர் களைப்பாய் இருந்தமையால் சுதாமரின் மடியில் தலைவைத்துப் படுத்து குறட்டை விட்டார். இதைக் கண்டு சுதாமர் தன்னிடமிருந்த கடலையை எடுத்து உண்ணத் தொடங்கினார். கிருஷ்ணர் திடீரெனக் கேட்டார், “தாதா என்ன சாப்பிடுகிறாய்.,? சப்தம் எங்கிருந்து வருகிறது..?”
அதற்கு சுதாமர், “சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது..? நான் குளிரால் நடுங்கிக்கொண்டு இருக்கிறேன். எனது பற்கள் தாளம் அடித்துக்கொண்டிருக்கின்றன. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கூட என்னால் திருத்தமாகப் பாராயணம் செய்யமுடியவில்லை” என்றார்.
இதைக் கேட்ட சர்வவியாபியான கிருஷ்ணர், “மற்றவர்களது பொருட்களை உண்ணும் ஒரு மனிதனைக் கனவில் கண்டேன், அதைப்பற்றிக் கேட்டபோது தின்பதற்கு ஒன்றுமில்லை என்ற பொருளில், ‘என்ன..? மண்ணா தின்பதற்கு உள்ளது..!’ எனக் கேட்டான். அதற்கு மற்றொருவன் ‘அது அங்ஙனமே இருக்கட்டும்’ என்றான். தாதா இது ஒரு கனவுதான். நீ எதையும் எனக்கில்லாமல் உண்ணமாட்டாய் என்று எனக்குத் தெரியும். ஆயினும் கனவில் கண்ட ஞாபகத்தில் நீ என்ன உண்கிறாய் என்று நான் கேட்டேன்.,?” என்றார்.
சர்வவியாபியான கிருஷ்ணரைப் பற்றியும், அவர்தம் லீலையைப் பற்றியும், சுதாமர் எள்ளளவேனும் அறிந்திருப்பாராயின் அவர் அவ்வாறு நடந்துகொண்டிருக்கமாட்டார். எனவே தன் செய்கைக்காக அவர் வருந்தவேண்டியதாயிற்று. அவர் கிருஷ்ணரின் நெருங்கிய நண்பரானபோதும் தமது வாழ்க்கையை அஷ்டதரித்திரத்தில் கழிக்க வேண்டியதாயிற்று.
ஆனால் பின்னர் அவர் கிருஷ்ணருக்குத் தன் மனைவியின் சொந்த உழைப்பால் ஈட்டிய ஒரு பிடி அவலை அளித்தபோது கிருஷ்ணர் மகிழ்ச்சியடைந்து அவருக்கு அனுபவிப்பதற்காக ஒரு பொன்நகரத்தை அளித்தார். மற்றவர்களுடன் பகிர்ந்துண்ணாது தனியாகத் தின்போர் இக்கதையை நினைவில் வைக்கவேண்டும். கடவுளுக்கு முதலில் சமர்ப்பித்து அவைகள் அவரால் திருப்தி அடையப்பெற்ற பிறகே அவற்றை அனுபவிக்க வேண்டும் என்று ஸ்ருதியும் பகர்கின்றது. பாபாவும் நமக்கு அதையே அவர்தம் ஒப்புவமையற்ற வேடிக்கையான வழியில் கற்பித்திருக்கிறார்...
ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻🔥
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக