ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻
இறைக்கருணை எவ்வளவு அற்புதமாக நம்மைப்போன்ற அற்பப் பிறவிகளுக்கு, நீ கொஞ்சமாவது என்னை நம்பி என்னிடம் பக்தி கொண்டு, என்மீது அன்பு செலுத்தியிருந்தாயானால் அதன் தொடர்ச்சியான பயன் உனக்கு அடுத்த பிறவியிலும் கிடைக்கும் என்ற சலுகையை வழங்கியுள்ளது என்பதை நினைத்துப் பாருங்கள்..!வாழ்நாளில் பக்தி செலுத்தி வழிபடத் தவறினாலும், உடலை விட்டு உயிர் பிரிகின்றபோது எத்தகைய எண்ணம் மனிதனின் மனதில் இருக்கின்றதோ, அதற்கேற்ற வாழ்க்கையையே மறுபிறவியில் பெறுகின்றானாதலால், மரணிக்கும் தருணத்தில் கடவுளை தியானித்திருப்பது அவசியம். (மீண்டும் வாசிக்கவும்).
ஆனால் இது அவ்வளவு சுலபமாக நடக்கின்ற காரியமா..? உலகத்திலுள்ள அத்தனை ஆசைகளும் ஏக்கங்களாக அப்போது தானே மனதில் முண்டியடிக்கின்றன...! அவனுக்குக் கல்யாணம் நடக்கவில்லையே, இவளுக்குக் குழந்தை பிறக்கவில்லையே, இன்னும் சொத்து சேர்க்க வழியில்லாமல் நான் இப்படி சாகக் கிடக்கிறேனே என்றெல்லாம் கன்னா பின்னாவென்று ஏதேதோ விதத்தில் மனம் அலை பாய்ந்து அல்லல்படுமே அல்லாமல் கிருஷ்ணா! ராமா..! என்று ஜெபிக்க முற்படுமா...? ஓம் நமசிவாய என்று தான் சொல்லுமா...?
கதை ஒன்று நினைவிற்கு வருகிறது. ஒரு கிழவர் சாகக் கிடக்கிறார். அவரது அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. அவரது மருமகள் அறைக்குள் வந்து அந்த விளக்கைத் தூண்டி விட்டு சிறிது எண்ணெயை விளக்கில் ஊற்றுகிறாள். கிழவர் சத்தம் போடுகிறார். போதும்! போதும்! ரொம்ப ஊற்றாதே...! எண்ணெய் சீக்கிரம் தீர்ந்துவிடப் போகிறது! என்று. எந்த நேரத்தில் எப்படிப்பட்ட கவலை...?
இதைத்தான் சங்கரர் பஜகோவிந்தத்தில் இப்படிப் பாடுகிறார்.
“குழந்தைக்கோ நாட்டம் பல விளையாட்டம்,
யுவனுக்கோ நாட்டம் யுவதியின் தேட்டம்
கிழவனுக்கோ பல மனக்கவலோட்டம்
பரம்பொருள் (மீது) இனி யார்க்குமில்லை நாட்டம்” என்று...
நாம் வாழ்ந்திருக்கும்போதே, மனதைக் கடவுளிடம் நிலைத்திருக்கும் பழக்கத்தை உண்டு பண்ணினால் தான், நமது மனம் மரண காலத்தில் கடவுளிடம் நிலை பெறும். இந்த வாழ்க்கையைப் பற்றின்றி வாழ்ந்துகொண்டு, பக்தியால் தன்னுடனேயே ஒன்றிய நிலையில் வாழப் பழகினால் தான், மனதால் கடவுளைத் தியானம் செய்து கொண்டே தமது கர்மங்களைச் செய்தால்தான் அந்தப் பழக்கத்தின் காரணமாகவாவது இறக்கும் தருவாயில் இறைநாமம் நம்மில் ஒலிக்கும்...
ஓம் நமசிவாய....🙏🏻🙏🏻
திருச்சிற்றம்பலம்...தில்லையம்பலம்..🙏🏻
ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக