ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

திங்கள், ஏப்ரல் 15, 2024

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷிகளால் உணர்ந்து உரைக்கப்பட்டவையான இதில் ஜகத் என்பது நமக்குள் இருக்கின்ற எண்ண உலகம், உணர்ச்சி உலகம், மன உலகம் ஆகியவையும், வெளி உலகமும் சேர்ந்தது ஆகும். ஜகத் என்றால் உலகம் என்று மட்டும் தான் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் நமக்குள்ளேயும், வெளியேயுமாக விரிந்திருக்கின்ற ஜகத் பற்றி இப்போது தான் தெரிய வருகின்றது இல்லையா...?

கண்களால் நாம் காண்பது மட்டும் உலகம் அல்ல. நமக்குள்ளேயே இருக்கின்ற மேற்குறித்தவையும் உலகங்களே. ஜீவனாகிய நம்மைப் பற்றியும் ஜகத் எனப்படுகின்ற நாம் காணும் உலகத்தையும் ஈசன் என்று குறிப்பிடுகின்ற உண்மை இருப்பைப் பற்றியும் மேலும் எனக்கும் உலகத்திற்கும், எனக்கும் ஈசனுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் ஆராய்ந்து தகுந்த சொற்களால் எடுத்துரைப்பதே வேதாந்தத்தின் நோக்கமாகும். இந்த மூன்றும் ஒன்றே என்ற ஆராய்ச்சியில் தான் குருவும் சிஷ்யனும் சேர்ந்து ஈடுபடுகின்றனர். இந்த ஞானவேள்வியில் பங்குபெற்று ஞான ஆராய்ச்சி செய்கின்ற மாணவனுக்கு ஜிக்ஞாசு என்று பெயர்...

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

உண்மையை உணரவே போராடுகிறேன்...!!!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

எந்த ஜீவன் தன் பிறப்பின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, தனது ஐம்புலன்களாகிய குதிரைகளை மனமெனும் கடிவாளத்தின் மூலம் இறுக்கிப் பிடித்து அடக்கிப் புத்தியென்ற சாரதியை ஆத்மாவின் ஒளியில் இயங்க வைக்கின்றானோ அல்லது ஆத்மாவாகிய பரம்பொருளிடம் யார் சரணடைகின்றார்களோ அத்தகைய உண்மையான பக்தனுக்கு உதவ அந்தப் பரந்தாமனே, தன் அம்சத்தால் புத்தியாக அவனது இதய பீடமாகிய தோ;த்தட்டில் அமர்கின்றார். அவர் இந்த உடலாகிய வாகனத்தை (தேரை) ஒரு கையில் லகானும், மறு கையில் சாட்டையுமாகக் கொண்டு செலுத்துவார்....

இந்த உண்மையைத் தான் ஸ்ரீ கிருஷ்ணர், தன்னைச் சரணடைந்து உதவி கேட்ட அர்ச்சுனனுக்குத் தானே தேரோட்டியாக இருந்து பணிபுரிவதாகக் கூறியிருக்கின்றார்...சரணாகதியின் பெருமை புலப்படுகின்றதல்லவா...!இங்கு நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உன்னிடமுள்ள சிறப்பு அம்சங்கள் எவையோ அவையெல்லாம் நானே..! என்று கிருஷ்ணர் அறிக்கை விட்டபின் , நம்மிடம் தற்பெருமை இருக்குமா..? “நான்” என்னும் அகந்தை இருக்குமா..? தந்தவர் அவர்..! என்ற எண்ணத்துடன் செயல்பட்டால், கர்மா ஏறுமா...?...

வாழ்க்கையில் கர்மாவை அனுபவிப்பதற்காகப் பிரச்னைக்குள் போக வேண்டியிருக்கிறது. இருந்த போதிலும், இவற்றையெல்லாம் நீ தான் செய்கிறாய்...! என்ற தெளிவு புத்தியில் ஏற்பட்ட பிறகு, வருவது எது என்றாலும் அவற்றை ஏற்றுச் சரியான விதத்தில் தீர்வு காண முற்படுகின்ற மனப்போக்கு எழ வேண்டும். அப்படி அந்தப் பிரச்னையை ஏற்கின்றபோது “தண்ணீருக்குள் மிகச் சுலபமாக இழுபடுகின்ற அம்மி” போல மிக இலேசாக அது தீர்ந்துவிடுகின்றது. கருவி நான், என்னை இயக்குபவர் அந்தப் பரம்பொருளே..! என்பதை நன்றாகத் திரும்பத் திரும்ப சிந்தித்து மனதில் பதித்துக்கொள்வதோடு, இங்கு எல்லாமே அவன் தான்..! என்னிடம் எதிர்த்து நிற்பதும் நானே..! என்ற உண்மையையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும். இந்த முயற்சியால் வாழ்க்கை சிறக்கும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய.. .🙏🏻🙏🏻🙏🏻

வெள்ளி, ஏப்ரல் 12, 2024

அக்ஷர பிரம்ம யோகம் என்றால் என்ன...!!??

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

அக்ஷர பிரம்ம யோகம் என்றால் என்ன...!!??

அக்ஷரம் என்றால் அழியாதது. மாறாததும் அழிவற்றதுமான பிரம்மத்தைப் பற்றிய ஞானமே அக்ஷர பிரம்ம யோகம். இறைவனும் நானும் ஒன்று என்பதை அறிந்து வாழும் ஞானிக்கு அடுத்த பிறவி இல்லை என்ற கிருஷ்ணரின் உறுதிமொழியே இவ்வத்தியாயமாக மலர்ந்திருக்கின்றது.

இந்த உடல், மனம், புத்தியே நான் என நினைக்கின்ற வரை நான் ஷரப் பிரம்மம். அழியக்கூடிய, வரையறைகளுக்கு உட்பட்டவன். இது அறியாமைக்குரிய நிலை. ஆனால் உண்மையில் நான் அழிவற்றதும் மாறாததுமான அக்ஷரப் பிரம்மமே. இந்த உண்மையை நான் அறியவேண்டுமென்றால், நானல்லாதவற்றை, அழியக்கூடிய தன்மை கொண்ட உடல், மனம், புத்தியை விலக்கி நிறுத்தி, அந்த பிரம்மம் தான் இங்கு நானாக இருந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது என்னும் அக மாற்றத்தை என்னுள் ஏற்படுத்துவது தான் ஒரே வழி. இறைவனாகிய நான் படைக்கப்பட்ட பாத்திரமாக நடிக்கிறேன். அந்த இறைவனே படைப்பவனாக நடிக்கிறான். ஆனால் இரண்டுமே ஒன்றுதான்...

இந்த உண்மையை அறிவது தான் ஆன்மீகம்... ஆன்மாவை நான் என அறிகின்ற பயிற்சி இது. இந்த ஆன்மீகத்தை அறிந்த ஞானிகள் அதனால் தான் இந்த உலகம் ஒரு நாடகமேடை – நாமெல்லாம் நடிகர்கள்...! என்றார்கள். “இந்த ஞானத்தால் என்னை அறிபவன் என்னைச் சேர்ந்தவனாகின்றான்...!” என்கிறார் கிருஷ்ணர். யார் ‘நான் செய்பவனில்லை, நான் அனுபவிப்பவனுமில்லை,ஆகையால் எனக்குச் செயல்களின் பலனில் அக்கறையில்லை’ என்பதை உண்மையாகக் கருத்தில் கொண்டு வாழ்க்கையைச் செலுத்துகிறானோ அவனுக்கு எந்தவித கர்ம பாதிப்பும் இல்லை. ஏனெனில் கர்மாவால் தான் பிறவி ஏற்படுகிறது. இந்தத் தெளிவு ஞானத்தால் ஏற்பட வேண்டும். வெறும் விதண்டாவாதப் போக்கு கூடாது. “எவன் ஞான உபதேசம் பெற்று ஞானத்தை அடைகிறானோ அவன் சம்சார சுழற்சிச் சக்கரத்திலிருந்து விடுபடுகின்றான்” என்று கீதை அழுத்தந் திருத்தமாகக் கூறுகின்றது. கர்ம பாதிப்பு இல்லாதவனுக்கு மறுபிறவி இல்லை. அவன் பிரம்மத்தில் கலந்து, வாழ்கின்றபோதே ஜீவன் முக்தன் ஆகிவிடுகின்றான்...

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

உண்மையை உணரவே போராடுகிறேன்...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

ஒரு மனிதனின் வளர்ச்சி அவன் தனக்கு வருபவற்றை எப்படி எதிர்கொள்கிறான் என்பதைப் பொறுத்து அமைகின்றது. சாதாரண வாழ்க்கை முறையில், வருகின்ற பலனை ஏற்றுக்கொள்வதில் ஒருவரது விருப்பும் வெறுப்பும் கலக்கின்றன. விருப்பு வெறுப்பு இல்லாவிடில் நமக்கு வருவதை அப்படியே ஏற்றுச் செயல்படும்போது சமநிலை கெடுவதில்லை. ஏனெனில், மனச்சமநிலை இருந்தால் தான் பக்தி செலுத்த முடியும். அறியாமையால் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இறைவனை வணங்குவது உண்மையான பக்தியல்ல. எனக்குத் தரப்பட்டவையெல்லாம் என்னுடையவை என நாம் நினைக்கிறோம். இது என்னுடையது என்ற எண்ணம் நமக்குள் இருக்கின்றவரை அகங்காரம் அகல்வதில்லை. இது இறைவன் தந்தது என்று பிரசாதமாக ஏற்பதும், எல்லாம் இறைவனுடையது என்று நினைத்து வாழ்வதும் சிறந்தது. அந்த நிலையில் நம்மில் பெருகுகின்ற அன்பும், கருணையும் தான் உண்மையான பக்தியாகும்.

பக்தி என்பது கனிந்த அன்பு. அகங்காரம், மமகாரம் (நான் – என்னுடையது) என்ற இரண்டும் இருக்கும் வரை, உண்மையான பக்தி ஏற்படாது. இவை இரண்டும் இருக்கும் வரை வீண் கோப தாபங்கள், மனக்கசப்பு, பிரச்னை என எல்லாமே இருக்கும். உறவின் இரண்டு பக்கங்களிலுமே இவை இருப்பதால் மனச்சமநிலை கெட்டுப்போகிறது. வாழ்க்கையில் வரும் பிரச்னைகள், மன முரண்பாடுகள் ஆகியவை மனச் சமநிலையைக் குலைத்து விடுகின்றன. இப்படிப்பட்ட நிலையில் பக்தி செய்ய இயலாது. எதிர்பார்ப்பும், ஏக்கமும், ஆசையும் இருந்தால் பக்தி செய்ய முடியாது. பசி இருந்தாலும் பக்தி பண்ணமுடியாது...

அர்த்தமற்ற சடங்குகளையும், வழிபாட்டு முறைகளையும் உண்மையான பக்தி என்று சொல்ல முடியாது இறைவா..! என்று நினைக்கும்போதே இந்த உள்ளம் கரைந்து உருக வேண்டும். அவன் கருணையை உணர்ந்து கண்கள் பெருக்கெடுக்க வேண்டும். ஒருவர் எந்த தெய்வத்தை வழிபடுகிறார் என்பது முக்கியமல்ல. எவ்வளவு பக்தியுடனும் உள்ளன்புடனும் பகவானிடத்தில் தன்னை அர்ப்பணம் செய்து கொள்கிறார் என்பதுதான் முக்கியம்.....

நானும் இறைவனும் ஒன்று என்பதை அறிந்து அவனையே தியானிப்பதே சிறந்த பக்தி. “தைல தாரைபோல் உனது உணர்வு முழுவதையும் ஊடுருவி, உனது ஆத்மாவில் சென்று கலப்பதே முழுமையான பக்தி” என்கிறார் ஆதி சங்கரர். காதலாகிக் கசிந்து உருகி இறைவனுடன் ஒன்று சேர்ந்து கலக்கின்றபோது உலகத்திற்கே உன்னத நன்மை ஏற்படும். பக்தியின் சிறப்பு இது.....

பக்தியில் அன்பு கலக்க வேண்டும். அன்புதான் உலக மகா சக்தி என்றார் புத்தர். எல்லாம் இருந்தும் நம்மீது ஒருவர் அன்பு செலுத்தவில்லை என்றால் நமக்கு வாழ்க்கையே வெறுக்கும். இறைவன் நம்மீது அன்பு செலுத்துவதனால் தான் நாம் மூச்சு விட்டுக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகத்திலுள்ள எல்லாமே அன்பு என்னும் பசையினால்தான் ஒட்டப்பட்டிருக்கிறது. இயற்கைச் சக்திகள் அன்பாலேயே இயங்குகின்றன...

ஓம் நமசிவாய..🙏🏻

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

புதன், ஏப்ரல் 10, 2024

உண்மையை உணரவே போராடுகிறேன்...!!???

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்..🙏🏻🙏🏻

சனாதன தர்மம் இதைப் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்திய விதம் தான் இந்துக்கள் யாரை சந்தித்தாலும் கரம் குவித்து அவர்களை வணங்குவது. எல்லாம் தெய்வம் என்று பார்க்கின்ற பக்குவ வெளிப்பாடு இது. யாதும் ஊரே...! யாவரும் கேளிர்...! என்று உலகத்தையே அணைக்கச் செய்தது இந்த உயர்ந்த ஞானத்தால் தான்.

இந்தப் பக்குவம் நமக்குள் வந்துவிட்டால் பிறகு கீதையை ஒவ்வொரு சொல்லாக நுணுக்கி ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. எல்லாம் ஒன்று. அவ்வளவுதான். பிரச்னையே இருக்காது. எதிரில் இருப்பவரும் நானும் ஒன்று என்று அணைக்கத் தெரிந்தால் தீர்ந்தது. இதைவிட சுலபமான வழி ஏதாவது இருக்கிறதா...? எது தடுக்கிறது என்று பார்த்தால் நமக்கு நாமே தான் தடை. புரிகிறதா...?

கீதையில் கிருஷ்ண உபதேசம் மேலும் இப்படித் தொடர்கிறது. ‘‘என்னிடமிருந்துதான் சாத்வீகம், ராஜஸம், தாமஸம் என்னும் முக்குணங்கள் உருவாகின்றன. நான் அவைகளைக் கடந்து அவைகளுடன் ஒட்டாமல் இருக்கிறேன். ஆனால் உலக மக்கள் சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களில் மோகித்து வாழ்கிறார்கள். அதனால் தான் முக்குணங்களைக் கடந்தவனும், அழிவற்றவனுமாகிய என்னை அறிய முடியாமல் போகிறது.”

“என்னுடைய முக்குணங்களாகிய மாயையைக் கடப்பது மிகவும் கடினம். எந்த சாதகர்கள் இந்த மாயையிலிருந்து விடுபட்டு என்னையே புகலாக அடைகிறார்களோ, அவர்கள் என் அருளால் இந்த மாயையைக் கடக்கிறார்கள். மாயையிலிருந்து விடுபட்ட பிறகு என்னை அறிந்துகொள்கிறார்கள்.”

“அசுர குணம் கொண்டவர்களும், மாயையால் மறைக்கப்பட்ட ஞானத்தைக் கொண்டவர்களும், மிகக் கேவலமானதும் பாவமுமான செயல்களைச் செய்பவர்களும் என்னைச் சரணடைவதில்லை.”..

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

உண்மையை உணரவே போராடுகிறேன்...!!!???

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

இறைக்கருணை எவ்வளவு அற்புதமாக நம்மைப்போன்ற அற்பப் பிறவிகளுக்கு, நீ கொஞ்சமாவது என்னை நம்பி என்னிடம் பக்தி கொண்டு, என்மீது அன்பு செலுத்தியிருந்தாயானால் அதன் தொடர்ச்சியான பயன் உனக்கு அடுத்த பிறவியிலும் கிடைக்கும் என்ற சலுகையை வழங்கியுள்ளது என்பதை நினைத்துப் பாருங்கள்..!வாழ்நாளில் பக்தி செலுத்தி வழிபடத் தவறினாலும், உடலை விட்டு உயிர் பிரிகின்றபோது எத்தகைய எண்ணம் மனிதனின் மனதில் இருக்கின்றதோ, அதற்கேற்ற வாழ்க்கையையே மறுபிறவியில் பெறுகின்றானாதலால், மரணிக்கும் தருணத்தில் கடவுளை தியானித்திருப்பது அவசியம். (மீண்டும் வாசிக்கவும்).

ஆனால் இது அவ்வளவு சுலபமாக நடக்கின்ற காரியமா..? உலகத்திலுள்ள அத்தனை ஆசைகளும் ஏக்கங்களாக அப்போது தானே மனதில் முண்டியடிக்கின்றன...! அவனுக்குக் கல்யாணம் நடக்கவில்லையே, இவளுக்குக் குழந்தை பிறக்கவில்லையே, இன்னும் சொத்து சேர்க்க வழியில்லாமல் நான் இப்படி சாகக் கிடக்கிறேனே என்றெல்லாம் கன்னா பின்னாவென்று ஏதேதோ விதத்தில் மனம் அலை பாய்ந்து அல்லல்படுமே அல்லாமல் கிருஷ்ணா! ராமா..! என்று ஜெபிக்க முற்படுமா...? ஓம் நமசிவாய என்று தான் சொல்லுமா...?

கதை ஒன்று நினைவிற்கு வருகிறது. ஒரு கிழவர் சாகக் கிடக்கிறார். அவரது அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. அவரது மருமகள் அறைக்குள் வந்து அந்த விளக்கைத் தூண்டி விட்டு சிறிது எண்ணெயை விளக்கில் ஊற்றுகிறாள். கிழவர் சத்தம் போடுகிறார். போதும்! போதும்! ரொம்ப ஊற்றாதே...! எண்ணெய் சீக்கிரம் தீர்ந்துவிடப் போகிறது! என்று. எந்த நேரத்தில் எப்படிப்பட்ட கவலை...?

இதைத்தான் சங்கரர் பஜகோவிந்தத்தில் இப்படிப் பாடுகிறார்.

“குழந்தைக்கோ நாட்டம் பல விளையாட்டம்,

யுவனுக்கோ நாட்டம் யுவதியின் தேட்டம்

கிழவனுக்கோ பல மனக்கவலோட்டம்

பரம்பொருள் (மீது) இனி யார்க்குமில்லை நாட்டம்” என்று...

நாம் வாழ்ந்திருக்கும்போதே, மனதைக் கடவுளிடம் நிலைத்திருக்கும் பழக்கத்தை உண்டு பண்ணினால் தான், நமது மனம் மரண காலத்தில் கடவுளிடம் நிலை பெறும். இந்த வாழ்க்கையைப் பற்றின்றி வாழ்ந்துகொண்டு, பக்தியால் தன்னுடனேயே ஒன்றிய நிலையில் வாழப் பழகினால் தான், மனதால் கடவுளைத் தியானம் செய்து கொண்டே தமது கர்மங்களைச் செய்தால்தான் அந்தப் பழக்கத்தின் காரணமாகவாவது இறக்கும் தருவாயில் இறைநாமம் நம்மில் ஒலிக்கும்...

ஓம் நமசிவாய....🙏🏻🙏🏻

திருச்சிற்றம்பலம்...தில்லையம்பலம்..🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

வியாழன், ஏப்ரல் 04, 2024

உண்மையை உணரவே போராடுகிறேன்...!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

சிவம் என்கிற பிரபஞ்ச பேராற்றல் என்பது அண்டசராசரத்தை இயக்கும் அற்புத ஆற்றல்.  ஆம். சிவம் என்பது எல்லோரும் அழைக்கும் பொது வார்த்தையே என சத்தியமாக நாம் அறிதல் வேண்டும்.நீர்,நிலம்,நெருப்பு,காற்று, ஆகாயம், சூரியன்,சந்திரன் மற்றும் மலை போன்ற சொற்கள் எங்ஙனம் உலகத்தார் அனைவரும் பொதுவார்த்தையாக எடுத்துக்கொள்வது போல ‘சிவம்’ என்ற சொல்லும் பொது வார்த்தை அதுவும் மெய் வார்த்தை...! சிவம் என்றால் என்ன..? தமிழ் அகராதி படி, .நன்மை, முடிவான விடுதலை (முத்தி), சித்துருவாகிச் சுயம் பிரகாசம் என்கிறது .இங்ஙனம் பொதுப் (இயற்கையாய் உள்ள) பொருளை தரும் ‘சிவம்’ இன்று ஒரு குறிப்பிட்ட சமய சொல்லாக பார்க்கப் படுகிறது. சிவன், சிவலிங்கம், பரமசிவம், சிவபிரான் இவை உலக மாபெரும் சமயமான சைவசமய கடவுளரை குறிக்கும். சிவபுராணம்,சிவலோகம், சிவசாதனம்,..சிவாகமம்,சிவராத்திரி இவை அச்சமயம் சார்ந்தவை. ஆனால் ‘சிவம்’ என்றால்.. எல்லா உயிர்களுக்கும் நன்மை பயக்கின்ற ஒளி எனப்படும். ஆக,சிவம் என்பது..இயற்கையாய் எங்கும் நீக்கமன்றி இருக்கின்ற ஒரு மெய் பொருள் ஆகும்.

சிவம் என்றால் என்ன..?

சிவம் என்னும் சொல்லுக்கு மங்களம் என்று பொருள்..!எங்கும் நன்மை…எதிலும் நன்மை உள்ளது…என்பதையே…எங்கும் சிவம்…எதிலும் சிவம்…என்கிறார்கள்..!நன்மை உண்டாகட்டும் என…சிவ சிவா என அழைக்கிறார்கள்.சிவம் என்பதில் …சி-சிகாரம் + வ-வகாரம் + ம்-மகாரம்)இதில் சிகாரம் என்றால் - அறிவு, வகாரம் என்றால் - மனது, மகாரம் என்றால்- ஆற்றல் (மாயை) என பொருள்படும்...அறிவை கொண்டு மனதில் உள்ள மாயையை விலக்குவதையே சிவமயமாதல் என்கிறார்கள்..!பக்தியின் மைய கருத்து…கடவுளை அடைவதில்லை..!மனிதனாய் வாழும் காலத்தில் உயர்வு, தாழ்வு, இச்சை என மனதின் அனைத்து மாயையை நீக்கி வாழ்வதேயாகும்…!சிவனும் சக்தியும் இணைந்ததே சிவம் ஆகும்...

சிவன்(சீவன்,ஜீவன்,உயிர்+சக்தி(ஆற்றல்)=சிவம்ஆற்றலை ஆக்கவோ,அழிக்கவோ முடியாது.தொடக்கமும் முடிவும் இல்லாதது....ஆற்றல் உள்ள யாவும் இயங்கி கொண்டிருப்பது.இயங்கும் அனைத்தும் உயிர் பெற்றுள்ளது...உயிர் எனும் இயக்கம் பெற்ற அனைத்தும் மற்றொரு  ஆற்றலை அதாவது தன்னுடைய ஆற்றலினால் பிறவற்றை நகர்த்தவும்,உருவாக்கவும் மூலம் ஆகும்...இதன் உட்பொருள் தான் உயிருள்ள அனைத்தும் சிவம்(உயிர்-ஜீவன்,ஆற்றல் பெற்றது)உயிரற்ற அனைத்தும் சவம்(உயிரற்றது-ஜீவனற்றது,..ஆற்றலற்றது).இவ்விளக்கம் இறை நம்பிக்கை இல்லார்க்கும் பொருந்தும்.உயிர் தரும் ஆண்,..உடல் தரும் பெண் இரண்டும் சமம் என்று உணர்த்தும் சிவசக்தி வழிபாட்டின் சிவம் என்றால் என்ன...? 

தமிழ் அகராதி படி...நன்மை, முடிவான விடுதலை (முத்தி), சித்துருவாகிச் சுயம் பிரகாசம் என்கிறது...சிவம்- பெயர்ச்சொல்லா..? இல்லை பண்புப் பெயரா...?பித்த உடம்பு என்றால் என்ன...? பித்தம் என்றால் என்ன?

சுயம்பு லிங்கம் என்பது என்ன...? தானாக லிங்கம் தோன்றும் என்பது உண்மையா...? இதனை நீங்கள் பார்த்துள்ளீர்களா...?

உடலே நீ பிறந்தாய் பஞ்சபூதங்களால் நீ இறந்தாய் பஞ்ச பூதங்களால் . உடல் எங்கே அங்கே மண்ணில். மனம் எங்கே இங்கே பிராணனில். புத்தி எங்கே அங்கே அலைகளாய் போய்விட்டது ஆனால் ஜீவன் மட்டும் சிவனாக சிவன் ஜீவனாக பிறப்பெடுக்கும் அன்பே சிவம்

அன்பே சிவம்…

இவ்வுலகத்தில் இறைவன் உண்டு. என்று சாதிப்போர்களும் உள்ளனர். இல்லை என்று சாதிப்பவர்களும் உள்ளனர். கடவுளை நம்பினோர் கைவிடப்படோர். என்பது ஆன்றோர் வாக்கு. வாக்காலும் மிக்க மனத்தாலும் அறிதற்கரிய அப்பரம்பொருளை உணரும் சிறந்த மார்கத்தை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அன்பே சிவம் என்பது அவர்கள் கூரிய அருள்வாக்கு. இதனையே திருமூலர் தமது திருமந்திரத்தில்

அன்பும் சிவனும் இரண் டென்பரறிவிலார்

அன்பே சிவ மாவதற்கும் அறிகிலார்

அன்பே சிவ மாவதாகும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே...என்றார்.

அன்பும் தெய்வமும் இரண்டு என்று கூறுவது அறியாமை. அன்புதான் தெய்வம் என்பதனை ஒருவரும் அறிந்திலர். அவ்வாற ஒன்றும் இல்லாாதது.அதாவது,தொடக்கமும் முடிவும் இல்லாதது....எ.கா.பிரபஞ்சம்...அன்பே சிவம் என திருமூலர் கூறியது அன்பு தான் சிவம் என்னும் பொருளா...? அல்லது சிவன் தான் அன்பு என்னும் பொருளா...?

இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,

அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன்.

அவன் ஒருவனே மெய்ப்பொருள்.

அவனுக்கு ஈடான பொருள் ஒன்றும் இல்லை.

இதனைத் திருக்குறள் ″தனக்குவமை இல்லாதான் ″ என்கிறது.

இதனைத் திருமந்திரம் ″ஒன்று அவன்தானே″ என்கிறது.

சிவனும் சக்தியும் ஒன்றென கூறுகிறது வேதங்கள்.

பொருளும் சக்தியும் (ஆற்றல்) ஒன்றென கூறுகிறது அறிவியல்.

இஸ்லாமிய மார்க்கத்தில் பொருள், சக்தி எல்லாம் ஒன்றாக இருந்தன, நானே பிரித்தேன் என்கிறான் இறைவன்...உடலை வளர்த்தேன், உயிரை வளர்த்தேனே என்கிறார் திருமூலர்.

பொருளிலிருந்து ஆற்றலை உருவாக்கலாம்..ஆற்றலிருந்து பொருளை உருவாக்கலாம்...இது அறிவியல்.


“அவன்தான் ஒன்று” என்கிறது திருக்குரான்.

“ஒன்று அவன்தானே” என்கிறது திருமந்திரம்.

“எல்லாம் ஒன்று” என்கிறது அறிவியல்.

ஆற்றல் அழியாது, ஆனால் மாறக்கூடியது,

பொருளும் அழியாது, ஆனால் மாறக்கூடியது,

ஆனால் நினைவுகள் அழியாது, மாறவும் மாறாதது...முடிவாக என்னை பொறுத்தவரையில்

பொருள் (உடல் அல்லது சிவம்)

ஆற்றல் (உயிர் அல்லது சக்தி)

ஆன்மா (நாம் அதாவது நமது நினைவுகள் அதாவது அன்புள்ளம்)...!

ஓம நமசிவாய...🙏🏻🙏🏻

ஓம் சாயீராம்..🙏🏻🙏🏻

ஒரு விசை இல்லாமல் ஒரு பொருள் நகராது, நகர்த்தவும் முடியாது. அப்படி என்றால் இப்பிரபஞ்சம் உருவாக்கிய இறைவன் யார்...?

 

ஓம்  ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

ஒரு விசை இல்லாமல் ஒரு பொருள் நகராது, நகர்த்தவும் முடியாது. அப்படி என்றால் இப்பிரபஞ்சம் உருவாக்கிய இறைவன் யார்...? 

இதைப் புரிந்து கொள்ள முதலில் பொறுமை, பணிவு தேவை. இறைவனின் மகிமையை  ஒரு கேள்வியின் மூலம் புரிந்து கொள்ள முடியுமா..? நம் அறிவிற்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்றை சில வார்த்தைகளில் அடக்கி விட முடியுமா..?ஆயினும் சிறிய முயற்சி எடுப்போம்..! ஒரு உவமை கொண்டு தான் இதை புரிந்து கொள்ள முயலமுடியும்.

கடவுள் என்பதன் ஸ்வபாவம், அதாவது இயல்பு "சுயஒளிர்வு". இதை வடமொழியில் ஸ்வயம்பிரகாசம் (Self Illuminated). வள்ளலார் இதை அருட்பெரும்ஜோதி என்று சொன்னார். சுய ஒளிர்வு என்றால், அது எப்பொழுதும் ஒளிமயமானதாக இருக்கிறது, தோன்றவும் இல்லை, அழிவதும் இல்லை. இதை தான் ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்று சொல்வார்கள். இன்னொரு இயல்பு, தன்னை வெளிப்படுத்துதல். அது இறைவனின் விருப்பம் மற்றும் ஆற்றல். அவன் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது. இந்த ஆற்றல் தான் அதன் சக்தி...

இதையே மனித அறிவினால் புரிந்து கொள்ள உவமையாக சும்மா இருக்கும் பொழுது சிவனாகவும், வெளிப்பட செய்யும் பொழுது சக்தியாகவும் கருதப்படுகிறது. இறைவனுக்கு பால்வகை (gender) கிடையாது. நம் அறிவுக்கு எட்டாத ஒன்றை விவரிக்கும் பொழுது ஒரு அளவுகோல் தேவை படுகிறது. அதனால் இறைவனுக்கு பெண் பால் கொடுத்து சக்தி என்றும், ஆண் பால் கொடுத்து சிவன் என்றும் விவரிக்கப்படுகிறது.

உங்கள் கேள்வியின் படி அந்த விசை தான் சக்தி, பராசக்தி, ஆதி சக்தி என்று நம் விருப்பத்திற்கு ஏற்ப அழைக்க படுகிறது. அந்த விசை ஒடுங்கி, அசைவற்று இருக்கும் பொழுது, சிவம், அச்சலம் என்று அழைக்கபடுகிறது. அதனால் தான் திருவண்ணாமலையில் இறைவனை அருணாச்சலம் என்று அழைப்பர். அருணா என்றால் ஒளி, அது மௌனமாக, அசைவற்று இருக்கும் பொழுது அச்சலம். (ஹிமாச்சலம் என்றால் அசையாது இருக்கும் பனிமலை என்று பொருள்). அதனால் தான் சிவனுக்கு மௌனகுரு என்று பெயர். இதையே ரமண மகரிஷி, அருணகிரிநாதர், தாயுமானவர் போன்றோர் "சும்மா இரு" என்று சொன்னார்கள். இயேசுநாதரின் "Be Still and know that I am God" என்ற வாக்கியமும் இதையே குறிக்கிறது...

ஆற்றல் வெளிப்படும் பொழுது இப்பிரபஞ்சம் உருவாகிறது. ஆற்றல் ஒடுங்கும் பொழுது பிரபஞ்சம் மறைகிறது....ஆற்றல் குண கலவைகளால் (சத்வ, ரஜோ மற்றும் தமோ குணங்கள்), வேறு வேறு உருவம் பெறுகிறது. ஆணாக, பெண்ணாக, பல உடல்களில், உருவங்களில் இந்த ஆற்றல் நிகழும். எல்லா குணங்களும் ஒடுங்கியபின் சிவம் நிலைக்கிறது. இந்த ஆற்றல் நிகழும் பொழுது மாயையும் சேர்த்து உருவாக்குகிறான் இறைவன். அதனால் நாம் இந்த உடல் என்று நினைத்து அல்லல்படுகிறோம். இந்த மாயையில் சிக்கி, ஆணவ மலம், மாயா மலம் மற்றும் கர்ம மலம் உண்டாகிறது. அதுவே மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்க வைக்கிறது...

இதில் இருந்து விடுபட வேண்டும் என்று தோன்றும் பொழுது, ஒரு தக்க குரு அமைகிறார். அவர் வழிபடி நடந்தால் மாயையில் இருந்து விடுபட்டு சுதந்திரம் அடைகிறோம். இதையே மோட்சம், நிர்வாணம், சமாதி நிலை, ஆன்ம விடுதலை, வீடுபெறுதல் என்று பலவாறு அழைக்கபடுகிறது....

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻🙏🏻

செவ்வாய், மார்ச் 19, 2024

நம்பினால் நம்புங்கள்..வணங்கினால் வணங்குங்கள்...!

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏🙏

நம்பினால் நம்புங்கள்..வணங்கினால் வணங்குங்கள்...!

உயிர்களுக்கு ஆதாரனமானது சிவம் என்கிற ஆற்றல்..சொல்லால் அளவிடமுடியாத அளவில் சிறியவையான இந்த ஆற்றல் உயிர்களின் தனித் தன்மையை நிர்ணயிப்பது எப்படி...! இதை இயக்கும் அந்த வல்லவன் யார்...! உலக உயிர்களின் அனைத்து ஜீன்களையும் ஒன்று சேர்த்தால் ஓர் கட்டைவிரல் அளவிற்குத்தான் இருக்கும் என்கிறது விஞ்ஞானம். இவ்வளவு சிறிய ஜீன்களும் அதன் துணைகளான குரோமஸோம் செல்களும் ஒவ்வோர் உயிர் மூலத்துணுக்கில் இருந்து கொண்டு அந்தந்த உயிர்களின் அதாவது அனைத்து மனித, விலங்கு, பறவை, தாவரங்களின் குணாம்சங்களுக்கு மூல திறவுகோளாய் செயல்பட வைக்கும் அந்த அற்புதன் யார்....

இயற்கையில் சிக்கனத்தை பார்க்க முடியுமா...! முடியும். நிர்வாக சிக்கனம் காணமுடியும். அவற்றை உருவாக்கியவன் யார்...!வேலியாக ஒரு வகைக் கள்ளிச் செடியை நட்டார்கள். இந்த கள்ளியை அழிக்கக்கூடிய பூச்சி வகைகளே அவ்விடத்தில் இல்லாததால் கள்ளி வளர்ந்து பரவி விட்டது. மக்கள் அப்பகுதியில் வாழமுடியா நிலைக்கு கள்ளி வளர்ந்தது. ஆராய்ச்சியாளர்கள் முயன்று அந்தக் கள்ளிச் செடிக்கு ஒரு மாற்றாக ஒரு பூச்சியைக் கண்டு பிடித்தனர். நாளடைவில் அந்தக் கள்ளியினம் அழிந்தது, கள்ளி இல்லாததால் அந்த பூச்சினமும் அழிந்தது. இது போன்ற தடைகளும் அதை சமன் செய்ய மாற்றுகளும் புவி எங்கும் நிறைந்துள்ளன.

அதி வேகமாக இனவிருத்தி செய்யும் பூச்சிகள் பெரிய அளவிற்கு வளர்வதில்லை. அவற்றிற்கு மனிதனைப் போல சுவாசப்பைகள் கிடையாது. குழாய் வழியே மூச்சை விடும். அவை வளரும் அளவிற்கு குழாய்கள் வளர்வதில்லை. இந்த வரம்பு அவற்றின் பெரிய வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடுகின்றது. இல்லாவிடின் யானையைப் போல் ஒரு குளவி வளர்ந்தால் என்ன ஆவது! இந்த வரைமுறையை நிர்ணயித்த வலியவன் யார்...! இதுதான் சிவம்...

மனிதனுக்குத்தான் கற்பனை வளம் உண்டு. இந்த கற்பனைச் சக்தியால் மனித உயிர்கள் கண்ணுக்குப் புலனாகாத பொருள்கள் அனைத்திற்கும்  சான்று தேடி அந்த எல்லையற்ற காட்சியை காண்கின்றன. அதே சக்தி பக்குவமடைய அடைய பிரபஞ்சப் பொருள்கள் எல்லாவற்றிலும் ஓர் திட்டத்தையும் நோக்கத்தையும் காண்கின்றான். அப்போது ஓர் ஆன்மீக உண்மை அவனுக்கு புலப்படுகின்றது.

உயிர்கள் உண்ட உணவு எப்படி ஜீரணமாகின்றது. உணவிலிருந்து சக்திகள் எப்படி உடல் இயங்க உடலுக்கு கிடைக்கின்றது. மழை காற்று வெய்யில் குளிர் இதெல்லாம் எப்படி நடக்கின்றது என்பது கண்ணுக்குத் தெரியா உண்மைகள் என்றாலும் கண்ணுக்குத் தெரிந்த உடலே அந்த உயிரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை. நடந்த .நடக்கின்ற நடக்கப்போகின்ற எல்லாவற்றையும் கண்காணித்து அவ்வப்போது அந்தந்த சூழ்நிலைக்கேற்ப இயக்கங்களைச் செய்யும் அந்த அற்புத சக்தி எது...! அது தான் சிவம்...

மாகா சூட்சுமமான தந்திரமும் சிருஷ்டித் திறன் வாய்ந்த பரம் ஞானம் பெற்ற ஒன்றிலிருந்தே எல்லாம் தோன்றியிருக்க வேண்டும் இந்த அதிசய சிருஷ்டி சித்தாந்தத்தை வேறு எந்த விதமாக நினைக்க முடியும்.! அந்த சித்தாந்தபதி யார்...!பிரபஞ்சத்தை ஓர் நியதிக்குள் இயங்க வைக்கும் பெரியோனை, சித்தாந்தபதியை, அவற்றிற்கு வரைமுறையை நிர்ணயித்த வலியவனை, சிறந்த உயிரை புவியில் தோற்றுவித்த அந்த படைப்பாளியை. உயிர்களின் குணாம்சங்களுக்கு மூல திறவுகோளாய் செயல்பட வைக்கும் அந்த அற்புதனை, நிர்வாக சிக்கனத்தை உருவாக்கியவனை, உயிர்களுக்கு ஒரு வித ஞானத்தை இயற்கைத் தூண்டுதலை புகட்டினவனை, சிந்திக்கும் ஆற்றல் அளித்த அந்த பரம ஞான சக்தியான அவனை வணங்கி வழிபடுவதில் என்ன தவறு...!

காரணங்களைச் சொல்லிவிட்டோம்...! நம்புங்கள்...! வழிபடுங்கள் இறைவனை...!

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஞாயிறு, மார்ச் 17, 2024

என்னிடம் வந்து இணைந்த பலருக்கும் இப்படிப்பட்ட எண்ணம் எழுவது இயற்கை...!

 

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

என்னிடம் வந்து இணைந்த பலருக்கும் இப்படிப்பட்ட எண்ணம் எழுவது இயற்கை. ஆனால் நான் அப்படி எவரையும் அணுகுவது இல்லை. எவரிடம் என்ன எதிர் பார்க்கிறேனோ அதை அவர்களிடம் இருந்து அடைய முயலுகின்றேன். என்னைப் பொறுத்தவரை நான் அனைவரிடமும் காட்டும் அன்பின் அளவு ஒன்றுதான். சில நேரங்களில் செல்லும் பாதை தவறானது என்றாலும் கூட தான் செய்வதே சரி என விதண்டாவாதம் செய்து நேரத்தை வீணடிப்பவர்களிடம் நான் கோபம் அடைவது உண்மையே. ஆனால் அப்படிப்பட்ட கோபம் எப்பொழுதாவது மட்டுமே எனக்கு வரும். ஆனால் கெடுதல் செய்பவனைக் கண்டு நான் கோபம் அடையாமல் அவர்களைத் திருத்தவே முயலுகின்றேன்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻🙏🏻

நான் உன்னை ஏமாற்றமாட்டேன்...!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

நான் உன்னை ஏமாற்றமாட்டேன்...!

ஒ,... வலுவற்ற பேதையே, பயமென்னும் திரையால் கடவுளின் திருமுகத்தை உன்னிடமிருந்து மூடி மறைக்காதே..!கெஞ்சிக் குறுகும் பலவீனத்தோடு அவரை அணுகாதே..அவரது திருமுகத்தை நன்கு பார்...!அங்கு நீ ஒரு அரசன் அல்லதுநீ திபதியின் பயமூட்டும் பார்வையை காணமாட்டாய்..உன் இனிய அன்பனின்பு ன்னகையை மட்டுமே காண்பாய்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

சிவமயம் சிவாய நம ...!

 



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

சிவமயம் சிவாய நம 

முனிவர்.....

 ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலைத் தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர்...அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரைக் கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து, ”மரத்தடியில் பார்த்தீர்களா...?” என்றாள்...''பார்த்தேன்” என்றார் பரமன்..''பார்த்த பிறகு சும்மா எப்படி போவது...? ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம், வாருங்கள்” என்றாள் அம்மை...'அட, அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை. வேண்டாம் வா! நம் வழியே போகலாம்...”ஆனால் பார்வதி விடவில்லை. ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.

''வணக்கம் முனிவரே..!” என வணங்கினர் அம்மையும் அப்பனும்...முனிவர் நிமிர்ந்து பார்த்தார். “அடடே..! எம்பெருமானும் பெருமாட்டியுமா...! வரணும் வரணும்…” என்று வரவேற்றார் முனிவர்...தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார்...அவ்வளவு தான். மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கி விட்டார்...சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, “சரி, நாங்கள் விடை பெறுகிறோம்” என்றனர் அம்மையும் அப்பனும்.

'மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள், வணக்கம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார் முனிவர்...அம்மை குறிப்புக் காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார்...“முனிவரே! நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்துவிட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை. எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள். கொடுக்கிறோம்” என்றார்...முனிவர் சிரித்தார். “வரமா! உங்கள் தரிசனமே எனக்குப் போதும். வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள்” என்று சொல்லிவிட்டுப் பணியில் ஆழ்ந்தார்...அப்பனும் அம்மையும் விடவில்லை. “ஏதாவது வரம் கொடுக்காமல் செல்லமாட்டோம்” என்று பிடிவாதமாய் நின்றனர்.

முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார். “நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போகவேண்டும்; அது போதும்” என்றார்..இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர்..''ஏற்கனவே ஊசிக்குப் பின்னால்தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தரவேண்டும்..?” என்று அம்மை பணிவாய்க் கேட்டார்...''அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே. இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தரவேண்டும்..?” என்று கேட்டார் முனிவர்...முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு, மகிழ்ச்சியாய் சென்றனர்...

'இருள்நீங்க இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு....

தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு,”நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும் என்ற மனத்தெளிவு பிறக்கிறது...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻🙏🏻


சனி, மார்ச் 16, 2024

ஆனந்தத்தை வெளியே தேடுவது தான் மனிதனுடைய துக்கத்தின் மூல வேர்.

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஆனந்தத்தை வெளியே தேடுவது தான் மனிதனுடைய துக்கத்தின் மூல வேர்.. வெளி உலகம் உள் உலகின் பிரதிபலிப்பே. யாருமே தனக்குள்ளே கிடைக்காததை வெளியில்இருந்தும் பெற முடியாது என்பது ஆணித்தரமான உண்மை....வெளியில் ஆனந்தத்தைத் தேடுகிறோம். தோன்றும் தேவைகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்தால் அந்த ஆனந்தம் கிடைத்து விடும் என்று தோன்றுகிறது. சரி என்றுஆசைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறோம். அந்த முயற்சியிலேயே குறுக்கீடுகள் வந்தால் குமுறுகிறோம், அழுகிறோம், அங்கலாய்க்கிறோம்....

ஒருவழியாக அந்த தேவைகளையும், ஆசைகளை எப்படியோ பூர்த்தி செய்து விடுகிறோம்...சரி இனியாவது ஆனந்தமாய் இருந்து விட வேண்டியது தானே. அப்படி எந்த மனிதனும்  ஆனந்தமாய் இருந்ததாய் இது வரை வரலாறு இல்லை. இனியும் அப்படி ஒரு வரலாறுஉருவாகப் போவதில்லை.கிடைக்கின்ற ஆனந்தம் அலுத்துப் போகிறது.அந்த மகிழ்ச்சிக்கு எப்போதும் அற்பாயுசு தான். மனம் அடுத்த ஆசைகளையும்,

தேவைகளையும் அடையாளம் காட்டுகிறது. இது கிடைத்தால் தான் ஆனந்தம் என்று சொல்கிறது மறுபடி அவற்றைப் பூர்த்தி செய்யப் போராட ஆரம்பிக்கிறோம். இந்தசக்கர வட்டத்தைத் தாண்டி வெளியே வந்தால் தான் தெளிவு பிறக்குமே ஒழியஅதிலேயே பிரயாணித்து இதற்கு ஒரு முடிவை எட்டி விடலாம் என்று எண்ணுவது புத்திசாலித்தனமல்ல. வட்டப் பாதையில் முடிவு என்பது எங்கே இருக்கிறது..?

திருவள்ளுவர் மிக அழகாகக் கூறுவார்.

“ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்”

(ஒரு பொழுதும் நிரம்பாத தன்மை உடைய ஆசையை ஒழித்தால், ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாத இன்பத்தைத் தரும்)..

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

வியாழன், மார்ச் 14, 2024

உங்களுக்குத் தெரியுமா....?

 

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

உங்களுக்குத் தெரியுமா....? 

போன தலைமுறை வரையிலுமே கூட நம் பெரியவர்கள், அதாவது ஆன்மீக நெறிமுறையில் பக்திபூர்வமாகப் பற்றற்று வாழ்ந்தவர்கள், தங்கள் இறப்பைப்பற்றி முன்னரே அறிந்து வைத்திருந்தனர் என்பது! மகாபாரதத்தில் துரோணர், பீஷ்மர் போன்ற சான்றோர்களுக்குத் தங்கள் மரணம், அது நிகழும் காலம், நிகழும் விதம் போன்ற எல்லாமே தெரிந்திருந்தது.

ஏன், பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலும் கூட இத்தகைய தீர்க்கதரிசிகள் நம் சமூகத்தில் வாழ்ந்திருந்தார்கள். எனவே நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், வேதங்கள் சொல்லியபடி இவ்வுலகத்திலிருந்து நீங்கிச் செல்லும் வழிகள் இரண்டு. ஒன்று ஒளியின் வழி. மற்றது இருளில் செல்வது. ஒளியில் நீங்குபவன் மீண்டும் வருவதில்லை. இருளில் நீங்குபவன் மீண்டும் வருகிறான். ஆனால் இரண்டுமே நம் விருப்பப்படி அமைவதில்லை என்பதும் உண்மை.

இப்படி இந்த இரண்டு மார்க்கங்களைப் பற்றிய விபரங்களைக் குருவின் வாயிலாக நன்கு அறிந்துகொள்ளும் ஆன்ம சாதகர்கள் பிறகு இவ்வுலக வாழ்வில் மயங்கி ஈடுபடுவதில்லை. உலகியல் வாழ்வில் வாழ்கின்றபோதே எவ்விதப் பற்று, வெறுப்பு, ஒட்டுறவு என்று எதுவுமில்லாத நிலையில் இறைபக்தியிலேயே மனதைச் செலுத்தித் தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்ந்து வருகின்றனர்.

இப்படி ஆன்ம சாதனையில் ஈடுபட்டு இறைவனிடம் பக்தி செலுத்தி, செய்கின்ற செயல் அனைத்தையும் சேவையாகச் செய்பவர்களின் வாழ்வு தவம், யாகங்கள், தானங்கள், தத்துவங்கள் இவற்றிற்கெல்லாம் அப்பால் மேம்பட்ட உயர் உணர்வு நிலையில் அமைகின்றது. இறுதியில் அவர்கள் இருள் பாதையை விலக்கி, ஒளிப்பாதையில் குரு கிருபையாலும், இறையருளாலும் பயணித்து ஆதி நிலையாகிய பரமாத்மாவை அடைகின்றனர்...

ஓம் ஸ்ரீ சாயீராம்.. 🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

புதன், மார்ச் 13, 2024

உண்மையை உணரவே போராடுகிறேன்...???!!!



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

உண்மையை உணரவே போராடுகிறேன்...???!!!

இறக்கும் தருவாயில் பிராணனைப் புருவ மத்தியில் நிறுத்தி வைத்து ஒளிமயமான என்னை தியானிப்பவன் என்னையே வந்தடைகின்றான். எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மனதை உள்ளத்தில் நிறுத்தி உயிரைத் தலையின் உச்சியில் நிலை நிறுத்தி யோக தாரணையில் உறுதி பெற்று, ஓம் என்ற ஒற்றைப் பிரம்ம எழுத்தை ஜபித்துக் கொண்டு என்னையே துதித்துக் கொண்டிருக்கும் நிலையில் உடலைத் துறப்பவன், பரமகதி பெறுகின்றான்”“என்னைத் தவிர வேறு எந்த ஒன்றிலும் தன் சித்தத்தைச் செலுத்தாத பக்தன் நித்திய நிரந்தரமான என்னையே சிந்தித்து வாழ்வதால், என்னிடமே எப்போதும் ஈடுபட்டிருக்கின்ற இந்த யோகிக்கு நான் எளிதில் கிட்டுகிறேன்.”

“இப்படி எந்த மகாத்மாக்கள் என்னிடம் பேரன்பு கொண்டு என்னையே புகலாகக் கொண்டு என்னோடு இணைகிறார்களோ அவர்களுக்கு அழிவுள்ளதும், துயரங்களுக்கு இருப்பிடமானதுமான மறுபிறவி ஏற்படுவதில்லை...!” என்றெல்லாம் ஸ்ரீ கிருஷ்ணர் அழியாத பிரம்ம தத்துவத்தின் சிறப்பையும், அதைத் தானாக அறிவதனால் உண்டாகும் நன்மையையும் அர்ச்சுனனுக்கு எடுத்துரைக்கின்றார். இந்நிலையில் அர்ச்சுனன் அத்தகைய யோகத்தைச் சாராத ஜீவனின் நிலை என்ன...? என்று வினவுகின்றான்.

“என்னில் சித்தத்தை வைக்காமல் உலக நினைவுகளுடன் ஆசாபாசங்களுடன் உடலை விட்டுப் பிரிகின்ற ஜீவன் என்னை அடையாமல் தங்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப வேறு வேறு உலகங்களை அடைந்து பிறகு மீண்டும் மழை மூலமாக பூமியை அடைந்து பிறக்கின்றன.”ஜீவன் என்னென்ன ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமற் போனதோ அதற்குரிய பிறப்பையே அவை அடைகின்றன. உடலின் மிருக இச்சையைத் தீர்க்கின்ற அந்த வாழ்க்கைக்காகக் கீழ் மட்ட நிலைப் பிறப்பிற்கே போய்விடும். இப்படிப் புலனின்பங்களில் ஆசை இருக்கும் மட்டும் பிறப்பு இருந்துதான் தீரும். மாறி மாறி, மாறி மாறிப் பிறந்து இறக்கத் தான் வேண்டும்.”

இந்த உண்மையை அறிந்து, ஏற்பட்ட சிந்தனை மாற்றத்தால் நான் அவன் என்பதையே தொடர்ந்து தியானித்துக் கொண்டிருந்தால் இறக்கும் தருவாயில் நமக்கு இயல்பாகவே அந்த இறை சிந்தனை ஏற்பட்டு, அவனையே அடைந்து விடுவோம். இதை அறிந்தவராய்த்தான் நம் முன்னோர், நான் மறக்கினும் என் நா மறக்காத நாமம் நமசிவாயவே...! என்று சொல்லியிருக்கின்றனர். மூச்சுக் காற்றின் ஓட்டத்தையே ஸோஹம்...! என்ற ஒலியாகக் கேட்கப் பழகி நான் அவன்...! என்ற உணர்வைத் தமக்குள் உருவேற்றியிருக்கின்றனர். இவ்வாறு மிகப்பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்...

ஓம் நமசிவாய....🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...