ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, டிசம்பர் 30, 2023

கண்ணனிடம் கேளுங்கள் ..சரணாகதி அடையுங்கள்...!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

கண்ணனிடம் கேளுங்கள் ..சரணாகதி அடையுங்கள்...!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான முதிர்ந்த நிலையில் இருப்பார்கள். அவரவர்களுக்கு எந்த மாதிரியான மார்க்கம் தேவையோ அதை அவர்களுக்குக் காட்டி, அவர்களை அதில் நிலைத்து நிற்கவும் செய்வேன் என்று அனைவருக்கும் கண்ணன் உறுதிமொழி  அளிக்கிறார். தான் செய்வது சரியோ, தனது வழி சரியோ என்று எந்த சாதகனும் ஐயம் கொள்ள வேண்டாம். ஆன்மீக வழியில் ஈடுபடும் எவரும் இறைவன் மேல் முழு மனதுடன் ஈடுபட வேண்டும் என்பதுதான் ஒரே ஒரு முக்கியமான கோட்பாடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சாட்சாத் பரமாத்வாவே கூறும்போது, எவருக்கும் அவர் செல்லும் வழியிலோ, தான் கடைத்தேறுவேனோ என்ற எந்த விதமான சந்தேகமும் வந்தால் சாதகன் இறைவனிடம் பரிபூரண சரணாகதி அடையவில்லை என்றே பொருள். அந்த நிலையை எவரும் தவிர்க்கவேண்டும். நீயே எல்லாம் என்று கண்ணனிடம் ஐக்கியமாவதே அனந்னிய பக்தி பாவம்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

கண்ணனிடம் கேளுங்கள் ...சரணாகதி அடையுங்கள் ...!



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

சரணாகதி அடையுங்கள் ...!

மேக திரைகளைக் கடந்து சூரியன் வெளியே வரும்போது அது மட்டும் பிரகாசிக்காது, சுற்றியுள்ள அனைத்தையும் பிரகாசிக்கச் செய்வதுபோல, சாதகன் தன் உண்மை நிலையை அறிய வரும்போது அவனது அறிவும் அனைத்துலகையும் உள்ளது உள்ளபடி அறிய முடிகிறது. அது மட்டுமல்லாது அவனைச் சுற்றியுள்ள அனைவரையும் ஆன்மா பற்றி அறிய வைக்கவும் முடிகிறது...

ஒரு முறை ரமணர் இருக்கும் பக்கம் அவருக்கு வெகு அருகில் ஒரு பாம்பு வந்ததாம். அவர் பாம்பைப் பார்த்துக்கொண்டு நிற்க, பாம்பும் அவரைப் பார்த்து படமெடுத்துக் கொண்டு நின்றதாம். வெகு நேரம் சென்ற பின் பாம்பு தன் வழியே போக, அவரும் அங்கிருந்து சென்று விட்டார்...அந்த அரிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அன்பர் ஒருவர் ரமணருக்கு அந்த சமயத்தில் என்ன மாதிரி உணர்வு இருந்தது என்று அவரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் சொன்னது..“நான் பாம்பை இன்னொரு மனிதனாகப் பார்த்துக் கொண்டு நின்றேன், பாம்பும் என்னை இன்னொரு பாம்பாகப் பார்த்துகொண்டு நின்றிருந்தது”. ஆக மற்றதைச் சரியாகப் பார்க்கும் அறிவை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

அதனால் ரமணர் சொல்வதுபோல், “அறிவும் அறியாமையும் யார்க்கு என்று அம்முதலாம் தன்னை அறியும் அறிவே அறிவு”. மற்றதெல்லாம் அறிவின்மை கலந்த அறிவே...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

வெள்ளி, டிசம்பர் 29, 2023

ஆன்மா...!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

ஆன்மா..! 

எப்படி ஆகாயமானது நிர்மலமாக பரந்து விரிந்து எங்கும் காணப்படுகிறதோ அதே போல எல்லாவற்றிலும் பிரகாசிக்கும் ஆன்மாவை எப்போதும் தியானம் செய்வாயாக…. உள்ள பொருளான ஆன்மாவை உணர்ந்தவனாக, தான் காணும் பொருட்களின் உருவம், நிறம் முதலாக பலவிதமான வேற்றுமைகளை முழுவதுமாக அகற்றி விட்டு, அவைகளின் உள்ளத்தில் பரிபூரணமாய் நிறைந்து ஒளிர்கின்ற ஞானானந்தமே, தன்னுள்ளும் எப்போதும் ஒளிர்கின்றதென்று தெளிவாய்…. வேற்றுமைகள் வருவது புறநோக்கு இருக்கும் போது தான். அப்போது தான் பார்ப்பவன் என்ற ஒரு தனியன் உண்டு. ஆன்மாவைப் பற்றி நாம் குறிப்பிடும் போது அங்கு ஆன்மாவைப் பார்ப்பவன் என்ற ஒரு தனியன் கிடையாது.. அப்படியிருந்தால் பார்க்கும் நான், பார்க்கப்படும் ஆன்மாவாகிய நான் என்ற இரு “நான்”கள் அல்லவா இருக்கவேண்டும். “நான்” என்ற நமது உணர்வு எப்போதும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளதால், அது என்றும் ஒன்றானதாகவே இருக்கும். அங்கு இரு “நான்”கள் இல்லாததால் முப்புடிகளான வேற்றுமைகள் ஆன்மாவிற்குப் பொருந்தாது…

ஓம் ஸ்ரீ சாயீராம்....🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

நீ அறிந்ததும் அறியாததும்...!?

 

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

நீ அறிந்ததும் அறியாததும்...!?

இறை சக்தி நம்மைத் துக்கப்படுத்திப் பார்ப்பதற்காக உருவாக்கவில்லை..நம் மூலமாக அது வாழுகின்றது. நம் மூலமாக அது தன்னை பூர்த்தி செய்து கொள்கிறது. நம் மூலமாக அதன் முழுமையை வெளிப்படுத்துகின்றது..நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். சில நேரத்தில் நான் பார்ப்பதுண்டு. சிலர் தாங்கள் நினைத்ததைத் தங்கள் குழந்தைகள் மூலமாகப் பூர்த்தி செய்வார்கள். சில பேருடைய குழந்தைகளும் அவர்களைப் பூர்த்தி செய்வார்கள்...நாம் பிரபஞ்சத்தின் குழந்தைகள். பிரபஞ்சம் ஆனந்தத்தின் வெளிப்பாடு....எல்லாமே ஆனந்தமாகத்தான் இருக்க முடியும்...நாம் ஆனந்தமாக வாழ்ந்தோமானால், பிரபஞ்சம் நம் மூலமாக எதை அடைய வேண்டுமென்று நினைக்கிறதோ, அதை நிறைவேற்றிக் கொள்ளும். அப்போது நாம் பிரபஞ்சத்தின் இச்சையைப் பூர்த்தி செய்கின்றோம்...அதாவது, நம்முடைய குடும்பத்தில் பார்த்தோமென்றால், அப்பா சொத்து எழுதி வைத்திருப்பார்..

அதேசமயம், ஏதாவதொரு கடமையையும் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போயிருப்பார். "இந்த சொத்தெல்லாம் உனக்குத்தான். ஆனால், வருடத்தில் ஒரே ஒரு முறை அண்ணாமலையாருக்கு ஒரு மண்டகப்படி நடத்திவிடு" என்று எழுதியிருப்பார்...அந்தக் கடமையைச் செய்தேமானால், சொத்தை அனுபவிப்பதற்கான தகுதி உண்டு. ஆனால், அந்தக் கடமையைச் செய்யவில்லை என்றால், சொத்தை அனுபவிப்பதற்கான தார்மீகமான தகுதி நமக்குக் கிடையாது...இந்தப் பிரபஞ்சம், கடவுள் நமக்கு அளித்த சொத்து. அவர் நமக்கு இட்டிருக்கின்ற கட்டளை, "ஆனந்தமாக வாழுங்கள்."

ஆனந்தமாக வாழுங்கள்" என்ற அவருடைய விருப்பத்தை "ஜீவன் முக்தர்களாக வாழுங்கள்" என்று அவர் கொடுத்த பொறுப்பை வாழ்வோமானால், இந்தப் பிரபஞ்சத்தை அனுபவிப்பதற்கான சுதந்திரம், தார்மீகமான உரிமை நமக்கு உண்டு....ஆனால், அவர் சொன்ன மாதிரி "ஜீவன் முக்தர்களாக" நாம் வாழவில்லை என்றால், அவர் கொடுத்த இந்த சொத்தை அனுபவிப்பதற்கான எந்தவிதமான தார்மீக உரிமையும் நமக்கு இல்லை..

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

கண்ணனிடம் கேளுங்கள் ..சரணாகதி அடையுங்கள் ..!



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

கண்ணனிடம் கேளுங்கள் ..சரணாகதி அடையுங்கள் ..!

ஆர்வமும் சிரத்தையுமுள்ள பக்தர்களின் விருத்தியில் நான் இருந்து கொண்டு, அவர்களின் தொன்று தொட்டு இருக்கும் அடர்ந்த அஞ்ஞானமாகிய இருளை என்னுடைய கருணையினால், மிக்க ஒளியுடன் விளங்கும் விவேகமென்னும் ஞான தீபத்தினால் முற்றும் நாசமடையும்படி செய்வேன் என்று உணர்ந்திடுவாய்....நல்லது ஒன்றை அடைய வேண்டும் என்ற சிரத்தை ஒருவனுக்கு இருந்தாலே, அவனிடம் இறைவன் குடி கொண்டுள்ளான் என்றே பொருள். இல்லையென்றால் அவனுக்கு மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பது கூடத் தோன்றாதிருக்கலாம். ஆதலால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் இறைவன் இருக்கிறான் என்று நம்புபவனுக்கே பிரபஞ்சமும் அதன் இயக்கங்களும் ஒவ்வொன்றாகப் புரிய வரும். அது மட்டுமல்லாது அண்டத்தில் உள்ளதுதான் பிண்டமாகிய நம்முள்ளும் இருக்கிறது என்ற இறுதி உண்மையும் தெரிய வரும். செய்யும் தொழிலே தெய்வம் என்று அப்படி செயல் புரிபவனுக்கு தொன்று தொட்டு விளங்கும் அறியாமை எனும் இருளைப் போக்கி ஞானத்தை நான் வலிய வந்து தந்திடுவேன் என்று பகவான் கிருஷ்ணர் நமக்கு உத்திரவாதம் தருகிறார். அந்த ஞானம் அடைந்தவனுக்கு வேறு எந்தப் பாதையிலும் செல்வதற்குத் தோன்றாது.

“தொன்று தொட்டு இருக்கும் இறைவன்” என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன “தொன்று தொட்டு விளங்கும் அறியாமை” என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா..? ஆமாம், “என்று நீ, அன்று நான்” என்று ஒரு சிவனடியார் கால அளவைப் பற்றிச் சொல்வாராம். அதாவது, என்று இறைவன் தான் தானாக இல்லாமல் இயற்கையின் பலவடிவினனாகக் காட்சி தந்து அருளினானோ, அன்றிருந்தே அறியாமை எனும் இருளும் “நான்” என்ற வடிவில் தொடங்கி உலவுகிறது என்று அதற்குப் பொருள். அப்படி இறைவனையும் தன்னையும் பிரித்துக் காண்பதினாலேயே நாம் அனைவரும் எண்ணிலாப் பிறவிகள் எடுத்து வருகிறோம். ஆக அனைத்தையும் ஒன்றாகக் காணவேண்டும் என்பதே நமது வாழ்வின் இலக்காக இருக்க வேண்டும். அதற்காகவே நமக்கு இறைவனிடமிருந்து தன்னைப் பிரித்து அறியாத அனந்னிய பக்தி வேண்டும்..

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻 

வியாழன், டிசம்பர் 28, 2023

இதில் 'நான் யார்' என்பதற்கான 'விளக்கம்' நேர்பட உள்ளது.

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

உன் கேள்வியில் என் பதில்...!

பாலின் சுவை என்பதைப் பாலைச் சுவைத்துப் பார்த்தால் தான் தெரியும்.பால் வெள்ளையாக இருக்கும், பசுவின் மடியில் இருந்து கறந்தால் வருவது, நீர்மம் போல் இருக்கும் என்று எவ்வளவு சொன்னாலும் பாலின் சுவையை உணரவே முடியாது. இதுபோல எவ்வளவுதான் மெய்யறிவு நூல்களை ஆழ ஆழ நுணுகி நுணுகிப்படித்தாலும், "நான் யார்" என்றறியும் அறிவு பெறுவது அரிது.

திருநாவுக்கரசர் பெருமான் பாடிய புகழ்பெற்ற ஒரு பாட்டின் கடைசி இருவரிகளில் பேருண்மை உள்ளது...ஆனாலும் பாலின் சுவையை அறியாதார் நூலறிவால் அறிய முற்படுவது போன்றே இருக்கும். ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பார்களே அதுபோலவே...

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே

அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே

ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே

உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே

பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே

பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே

காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே

காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே

இதே போல காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி என்னும் பாட்டில்

அறிவானும் தானே அறிவிப்பான் தானே

அறிவா(ய்) அறிகின்றான் தானே - அறிகின்ற

மெய்ப்பொருளும் தானே; விரிசுடர்பார் ஆகாசம்

அப்பொருளும் தானே அவன்⁠

இதில் 'நான் யார்' என்பதற்கான 'விளக்கம்' நேர்பட உள்ளது.

ஆனாலும் பாலின் சுவை போன்றதே..

உணர முற்பட்டாலெழிய இறையாற்றலின்  தன மையை  உணர முடியாது....

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

எங்கும் நிறைந்து வியாபித்துள்ள சத்-சித்-ஆனந்தமே உருவாயுள்ள பிரம்மத்தை ஞானக் கண் கொண்டவனே தரிசிக்க முடியும்.

 


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

சருவத்தும் சார்ந்த தாம் சச்சிதானந்தப் பிரமத்தை ஞானக்கண் பெற்றான் – தரிசிப்பான் ஞானக்கண்ணில்லாதான் நண்ணானே காட்சி ஒளிர் பானுவை அந்தன் போலப் பார்..எங்கும் நிறைந்து வியாபித்துள்ள சத்-சித்-ஆனந்தமே உருவாயுள்ள பிரம்மத்தை ஞானக் கண் கொண்டவனே தரிசிக்க முடியும். அவ்வாறு ஞானக் கண் இல்லாதவன், அதி பிரகாசத்துடன் கூடிய சூரியனை ஒரு குருடன் பார்க்க முடியாதது போல, அதை அணுகவே இயலாது..பிரம்மம் எங்கும், என்றும் இருந்து, எதிலும் வியாபித்துள்ளது என்றால் அது இங்கு, இப்போது தெரிய வேண்டுமே என்று கேட்போர்க்கு இந்த ஸ்லோகம் பதில் அளிக்கிறது. ஆதி காலத்தில் நாம் கண்ணால் பார்ப்பதுவும், காதால் கேட்பதுவும் வெவ்வேறு வழிமுறைகளால் என்று நினைத்திருந்தோம். ஆனால் அவை மட்டுமல்லாது வேறு பல வகைத்  தகவல்களும், வெவ்வேறு அலைக் கற்றைகளால் வந்தடைகின்றன என்பதை வளர்ந்து வந்த விஞ்ஞானம் நமக்குக் கற்பித்தது. எந்த அலை வரிசையில் ஒன்று வருகிறதோ அதை அறிந்துகொள்ள அதற்கேற்ற கருவி நம்மிடம் இருக்க வேண்டும். ஒளியைப் பார்ப்பதற்கு நமக்குக் கண்ணும், ஒலியைக் கேட்பதற்கு நமக்குக் காதும் என்று இருவேறு கருவிகள் இருக்கின்றன. அதேபோல நாம் கேட்கும் வானொலி மூலம் வரும் பேச்சுக்களும், பாட்டுக்களும் வெவ்வேறு அலை வரிசைகளில் வருகின்றன. அதனாலேயே அவ்வாறு வரும் வானொலி விவரங்களை நாம் கேட்க நம் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள ஒரு ரேடியோ தேவைப்படுகிறது. அது போல பிரம்மத்தை உணர்வதற்கும் அதற்கு உரிய சாதனம் நமக்குத் தேவைப்படுகிறது.

நமது ஊனக் கண்ணால் நமக்கு முன் உள்ளதைத்தான் பார்க்க முடியும். அதனால் கூட நம் முகத்தையே நாம் பார்க்க முடியாது..அதன் அமைப்பு அப்படி. ஞானம் எனப்படுவது நமது உள்ளார்ந்த நிலையைப் பற்றிய அறிவு. அதை உணர்வதற்கு அதற்கேற்ற கருவியான ஞானக்கண் வேண்டும். அந்தக் கண்ணைப் பெறுவதற்குத்தான் முன்பே சொல்லப்பட்டுள்ள சிரவணம், மனனம், நிதித்யாசனம் போன்ற வழிமுறைகள் தேவை. சூரியன் என்னதான் பிரகாசமாக இருந்தாலும், ஊனக்கண் இல்லாதவன் அதைப் பார்க்க இயலாது. அதே போல ஞான சூரியனான பிரம்மம் என்னதான் பிரகாசமாக இருந்து, சர்வ வியாபியாக இருந்தும் அதை உணரக்கூடிய ஞானக்கண் இல்லாதவன் எங்கும், எப்போதும் நிறைந்து, சத்- சித்- ஆனந்தம் என்ற தன்மைகளைக் கொண்ட பிரம்மத்தை அறிய முடியாது...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

நினைவும் நீயே...நிலவும் நீயே...சகலமும் நீயே...!

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

நினைவும் நீயே...நிலவும் நீயே...சகலமும் நீயே...!

தாமு அண்ணாவும்‌, பம்பாய்‌ நண்பரொருவரும்‌ கூட்டாகப்‌ பஞ்சு பேர வியாபாரம்‌ செய்ய வேண்டுமென்றும்‌ அது பல லட்சங்களை லாபமாகக்‌ கொணரும்‌ என்ற எண்ணத்தின் விளைவு. (ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியிடம்‌* 1936ல்‌ தாமு அண்ணா கொடுத்த வாக்குமூலத்தின்படி, பம்பாய்‌ விவகாரம்‌ கூட்டாளி இல்லாமல்‌ தரகர்‌ ஒருவரிடமிருந்து பெற்றதென்பதும்‌, தாமு அண்ணா மட்டும்‌ லாபம்‌ பெறுவார்‌ என்றும்‌ கூறப்பட்டிருக்கிறது).

வியாபாரம்‌ நன்றாயிருக்கிறது என்றும்‌, எவ்வித அபாயமும்‌ இல்லை என்றும்‌ வாய்ப்பு தவறவிடப்படக்கூடாது என்றும்‌ தரகர்‌ எழுதி இருந்தார்‌. தாமு அண்ணா மனதில்‌ ஊசலாடிக்‌ கொண்டிருந்தார்‌..இந்த விவகாரத்தில்‌ உடனே முடிவெடுக்க அவரால்‌ முடியவில்லை. இதைப்பற்றி அவர்‌ சிந்தித்தார்‌. அவர்‌ பாபாவின்‌ பக்தர்‌. எல்லாத்‌ தகவல்களையும்‌ கொடுத்து அவர்‌ ஷாமாவுக்கு ஒரு கடிதம்‌ எழுதினார்‌. இது குறித்து பாபாவைக்‌ கேட்டு அவரது ஆலோசனையை எழுதும்படியும்‌ வேண்டிக் கொண்டிருந்தார்‌...அடுத்த நாள்‌ கடிதம்‌ ஷாமாவுக்குக்‌ கிடைத்தது. மத்தியானம்‌ மசூதிக்கு வந்து, அதை பாபாவின்முன்‌ வைத்தார்‌. ஷாமாவை விஷயம்‌ என்னவென்று கேட்டு, கடிதம்‌ எதைப்‌ பற்றியது என்று வினவினார்‌.

ஷாமா :..சில விஷயங்கள்‌ பற்றி அஹமத்நகரைச்‌ சேர்ந்த தாமு அண்ணா தங்களைக்‌ கேட்க விரும்புகிறார்‌.

பாபா :..அவன்‌ என்ன எழுதுகிறான்‌..? என்ன திட்டம்‌ போடுகிறான்‌ கடவுள்‌ கொடுத்ததைக்‌ கொண்டு திருப்தியடையாமல்‌ ஆகாயத்தைப்‌ பிடிக்க முயற்சி செய்வதாகத்‌ தெரிகிறது. கடிதத்தைப்‌ படி.

ஷாமா : தாங்கள்‌ இப்போது கூறியதைத்தான்‌ இக்கடிதம்‌ கூறுகிறது. ஓ! தேவா, நீங்கள்‌ இங்கே அமைதியாகவும்‌, அடக்கமாகவும்‌ அமர்ந்துகொண்டு பக்தர்களைக்‌ குழம்பச்செய்து அவர்கள்‌ அமைதியற்றுத்‌ தவிக்கும்போது சிலரைக்‌ கடிதம்‌ மூலமாகவும்‌, சிலரை நேரடியாகவும்‌ இங்கு இழுக்கிறீர்கள்‌. 

தங்களுக்குத்‌ தெரியுமென்றால்‌ பின்‌ என்னை ஏன்‌ படிக்கும்படிச்‌ சொல்லி வற்புறுத்துகிறீர்கள்‌..?

பாபா : ஓ..! ஷாமா, தயவுசெய்து அதைப்படி, சந்தர்ப்பவசமாக நான்‌ ஏதாவது பேசுவேன்‌. அதை யார்‌ நம்புவார்கள்‌..?

பின்‌ ஷாமா அக்கடிதத்தை வாசித்தார்‌. பாபா அதைக்‌ கவனத்துடன்‌ கேட்டு உணர்ச்சியுடன்‌ கூறினார்‌, “சேட்டுக்கு (தாமு அண்ணாவுக்கு) பைத்தியம்‌ பிடித்துவிட்டது. அவனது வீட்டில்‌ எதுவும்‌ தேவையிருக்கவில்லை. இப்போது அவனுக்கு இருப்பதைக்கொண்டு திருப்தியடைந்து லட்சங்களைப்‌ பற்றிக்‌ கவலைப்படாமல்‌ இருக்கும்படி பதில்‌ எழுது... தாமு அண்ணா ஆவலுடன்‌ காத்திருந்த பதிலை ஷாமா அனுப்பினார்‌..அதைப்‌ படித்துவிட்டு லட்ச ரூபாய்களை லாபமாகப்‌ பெறவிருந்த அவரின்‌ ஆர்வமும்‌, நம்பிக்கையும்‌ தரைமட்டமாக்கப்பட்டதை அறிந்தார்‌. பாபாவைக்‌ கலந்தாலோசித்ததில்‌ தாம்‌ தவறு செய்துவிட்டதாகக்‌ கருதினார்‌. ஆனால்‌ பதிலில்‌ ஷாமா, பார்ப்பதற்கும்‌ கேட்பதற்கும்‌ அதிக வித்தியாசம்‌ இருப்பதாகவும்‌, அவரே ஷீர்டிக்கு நேரடியாக வரவேண்டுமெனவும்‌, பாபாவைக்‌ காணவேண்டும்‌ என்றும்‌ குறிப்பிட்டிருந்ததால்‌ தாமே ஷீர்டிக்குச்‌ சென்று பாபாவை நேரடியாக இவ்விஷயத்தைப்‌ பற்றிக்‌ கேட்பதே சரியானது என்று நினைத்தார்‌. எனவே அவர்‌ ஷீர்டிக்குச்‌ சென்று பாபாவைக்‌ கண்டு, வீழ்ந்துபணிந்து அவரது கால்களைப்‌ பிடித்துவிட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்‌. விவகாரத்தைப்‌ பற்றி வெளிப்படையாகக்‌ கேட்க அவருக்குத்‌ தைரியமில்லை. பாபாவுக்கு கொஞ்சம்‌ பங்கு கொடுத்தால்‌ நலமாயிருக்கும்‌ என அவர்‌ எண்ணினார்‌.

பாபா இந்த வியாபாரத்தில்‌ தமக்கு உதவி செய்தால்‌ அவருக்குக்‌ கொஞ்சம்‌ பங்கையோ, லாபத்தையோ அளிக்கலாம்‌ என மனதில்‌ நினைத்தார்‌. தாமு அண்ணா தன்‌ மனதில்‌ ரகசியமாகச்‌ சிந்தித்துக்கொண்டிருந்தார்‌. ஆனால்‌ பாபாவுக்கு எதுவுமே திரையிடப்பட்டிருக்கவில்லை. நடந்தது, நடப்பது, நடக்கப்போவது யாவும்‌ அவருக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல்‌ தெளிவாக இருந்தது. குழந்தை இனிப்பை விரும்புகிறது. ஆனால்‌ தாய்‌ அதற்குக்‌ கசப்பான மாத்திரைகளைப்‌ புகட்டுகிறாள்‌. முன்னது அதன்‌ தேக நிலைக்குக்‌ கேடு செய்கிறது. பின்னது நலப்படுத்துகிறது. சிசுவின்‌ நலங்கருதியே தாய்‌ கசப்பான மாத்திரையை அதற்குச்‌ சமாதானம்‌ செய்து புகட்டுகிறாள்‌.

அன்பான தாயான பாபாவும்‌, பக்தர்களின்‌ நிகழ்கால, எதிர்கால நன்மைகளை அறிந்தவரானதால்‌ தாமு அண்ணாவின்‌ மனதில்‌ இருப்பதை அறிந்து, “பாபு, அம்மாதிரியான உலக விவாகாரத்திலெல்லாம்‌ (லாபப்பங்கு) நான்‌ சிக்கிக்கொள்ள விரும்பவில்லை” என்றார்‌. பாபாவின்‌ சம்மதமின்மையை அறிந்த தாமு அண்ணா அந்த எண்ணத்தைக்‌ கைவிட்டார்‌...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻


புதன், டிசம்பர் 27, 2023

தமேவ பாந்தம் அநுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி..!

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

கோவிலில் சென்று இறைவனை வணங்கும்போது, நமக்குத் தீபம் அல்லது கற்பூரம் ஆரத்தியின் மகிமையை புரிந்து கொள்ள முடிகிறதா...?

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம் ந இமா வித்யுதோ பாந்தி குதோயம் அக்னி தமேவ பாந்தம் அநுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி..!

அங்கே சூரியன் ஒளிர்வதில்லை... சந்திரனும் நக்ஷத்திரங்களும் ஒளிர்வதில்லை.. மின்னல் ஒளிர்வதில்லை. இந்த அக்னி எப்படி ஒளிர முடியும்..? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன...ஏதோ கோவிலுக்குச் சென்றோம், அங்கு கிடைத்த தரிசனத்தை ரசித்தோம், பிரசாதத்தைப் பெற்று மகிழ்ந்தோம், வீடு திரும்பினோம் என்று நமது தினசரி நடவடிக்கைகளில் அதையும் பத்தோடு பதினொன்றாக சேர்த்துவிட்டு வெறுமனே இருந்து விடக் கூடாது. கோவிலின் தத்துவார்த்த அமைப்புகளைப் பற்றியும், அங்கு வாழ்க்கைக்கு உதவும் தத்துவங்களை உணர நடக்கும் கிரியைகளின் அர்த்தங்களையும் நன்கு மனதில் பதித்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஆரத்தியின் விசேஷம் என்னவென்றால், “ஐயா, நீ பார்த்துக்கொண்டிருப்பது சூரிய ஒளியில்லை, சந்திர, நக்ஷத்திர, மின்னலின் ஒளியுமில்லை. நீ பார்ப்பது ஒரு அக்னித் துண்டத்தின் ஒளிதான். அது தானாகவே ஒளிர்கின்றது என்று நீ நினைத்துக் கொண்டிருந்தால் அதுவும் உண்மையில்லை. நீ பார்ப்பதனால் அது அங்கு அப்படி இருக்கிறது. பார்த்துக்கொண்டிருக்கும் நீ வெறும் உடலா? நீ இருப்பதாக நினைக்கும் இந்த உலகம் உண்மையா..? உடல் உணர்வு இல்லாது நீ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது எங்கே இருந்தது உலகம்? அதனால் உன் உடல் இல்லாது உன் உலகமும் இல்லை. உனக்கு உடல் உணர்வு வரும்போது, நீ வெறும் தூலமாகிய உடல்தானா..? அப்போது சூட்சமமான மனம், புத்தி, மற்றும் அவைகளிலும் அதிசூட்சமமான நான் எனும் எண்ணமாகிய அகங்காரம் இவைகள் இல்லையா..? ஆக அவை இல்லாமல் உடல் எங்கே இருக்கிறது..? அப்போது அந்த நான் என்னும் அதிசூட்சமமான எண்ணம் வருவதற்கு முன்பேயே, நீ உன்னை நான் என்று உணர்வது இல்லையா...? அந்த உணர்வே பிரம்மம், ‘அதுவே நீ’. நீ அதுவாக இருப்பதாலேயே எதனையும் காண முடிகிறது. அந்த உனது உள்ளொளியை வேறெதுவும் ஒளிர்விக்க முடியாது” என்ற உண்மையை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆரத்தியைப் பார்க்கும் நம்மில் எத்தனை பேர் இந்தக் கருத்தை உணர்கின்றோம்...? இந்த சத்-சித்-ஆனந்த மய உண்மையை விடுத்து, அதனை நமக்குக் காட்ட வந்துள்ள மாயையாகிய நாம-ரூபத்தில் அல்லவா மயங்கி நிற்கின்றோம்....

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

கண்ணனிடம் கேளுங்கள் ..சரணாகதி அடையுங்கள் ...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

கண்ணனிடம் கேளுங்கள் ..சரணாகதி அடையுங்கள் ...!

எப்படி “இருட்டில் பார்த்த இது பாம்பல்ல, கயிறுதான்” என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அதற்கு வேண்டிய ஒளி தேவைப்படுகிறதோ, அதே போன்று அஞ்ஞானமாகிய இருளில் மூழ்கியுள்ள ஒவ்வொருவருக்கும் ஞானமாகிய ஒளி தேவைப்படுகிறது. அப்படி ஒளி கிடைத்தாலும் பலருக்கு உடனே அது அனுபவமாக மாறாது.தை..இதை  காஞ்சி மகா முனிவர் இப்படிச் சொல்வார். பல வருடங்களாக ஒரு கிணற்றுத் தண்ணீரில் மூழ்கியிருந்த ஒரு பித்தளைச் சொம்பை கிணற்றிலிருந்து வெளியே எடுத்தவுடனே அது பளபளவென்று இருக்காது. பாசி படர்ந்து, களிம்பு ஏறி  அதன் நிறமே மாறிப் போயிருக்கும். அதை புளி, சாம்பல் முதலான பொருட்கள் கொண்டு அழுத்தித் தேய்க்கத்  தேய்க்க பளபளப்பு வருவது போல நமது முயற்சியின் வலிமை கொண்டு நம்மை நாம் அறிய வேண்டும் என்பார். இதுதான் சிரத்தை எனப்படுகிறது...

முயற்சி என்பதன் அளவும் ஒவ்வொருவரின் நிலையைப் பொறுத்தது. வேறோர் இடத்தில் கண்ணபிரானே சொல்வதுபோல் நெருப்பைச் சூழ்ந்துள்ள புகையை அகற்ற ஒரு மெல்லிய தென்றல் போதும். ஆனால் ஒரு கண்ணாடியின் மேல் இருக்கும் கறையை அகற்ற ஓர் ஈரத் துணியும், அழுத்தித் துடைத்தலும் வேண்டும். ஒரு தாயின் சூலில் இருக்கும் சிசு வெளி வருவதற்கோ, அதற்கு வேண்டிய முயற்சிகள் தவிர அதற்குண்டான காலம் வரும் வரை காத்திருக்கவும் வேண்டும். இதுதான் இயற்கை நமக்குச் சொல்லித் தரும் பாடம்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

உன்னை நீயே கேள்வி கேட்க வேண்டிய நேரத்தில் இருக்கிறாய்...!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்..🙏🏻🙏🏻🙏🏻

உன்னை நீயே கேள்வி கேட்க வேண்டிய நேரத்தில் இருக்கிறாய்...!

ஆன்மீகப் பாதையில் யாவரும் சாதகர்களே. ஆனால் அவர்களிடையே பெரும் வித்தியாசம் இருக்கும். அதை முறையாக அறிபவர் உயரிய ஆன்மீக நிலை அடைந்த குரு மட்டுமே. மோட்டார்களின் திறன் உள்ளே இருக்கும் கம்பிச் சுற்றுகளின் தரம், எண்ணிக்கை, சுற்றப்பட்ட விதம் போன்ற பல காரணங்களால் வேறு பட்டிருக்கும். ஆனால் வெளிக்கூடு ஏறக்குறைய ஒரே மாதிரி காட்சியளிக்கக்கூடும். அது போல சாதகர்களும் அவர்களது பழவினைச் சுற்றுகளுக்கும் வாசனைகளுக்கும் ஏற்ப தத்தம் திறமைகளில் வேறுபட்டிருப்பர்...

சுவாமி விவேகானந்தர் சிவோஹம் சிவோஹம் என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தமர்ந்தார். "அதெப்படி மானுட வடிவில் இருந்து கொண்டு தன்னை சிவனாக பாவிக்கலாம்..?" என்று நாகமகாஷயர் கேள்வி எழுப்பினார். "அவனுக்கு அவன் பாதை சரி. உனக்கு உன்பாதை சரி" என்று ராமகிருஷ்ணர் பதிலளித்தாராம். குரு சொன்னால் சரியாகவே இருக்கும் என்ற நாகமஹாஷயர் "அப்படியானால் சரி" வினயத்துடன் ஏற்றுக் கொண்டாராம்...

மற்றொரு சமயம் நரேந்திரன் இரவு நேர தியானத்தில் உயர்ந்த சமாதி நிலையை எட்டிய நிலையில் அருகிலிருந்த சாரதாநந்தரிடம் 'என்னைத் தொடு 'என்று பரவசத்துடன் அவருக்கும் தன் அனுபவத்தை தெரிவிக்க விழைந்தார். அவரை தொட்டதும் சாரதாநந்தரின் உடலுக்கு அந்த சக்தியின் தாக்கத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் மிகுந்த தேக‌சிரமத்திற்கும் மன சிரமத்திற்கும் உள்ளானார். அதே சமயத்தில் எங்கோ அமர்ந்திருந்திருந்த ராமகிருஷ்ணர் "இந்த நரேன் ஏனிப்படி புத்தியில்லா காரியத்தை செய்கிறான் "என்று அருகிலிருந்தவரிடம் கடிந்து கொண்டாராம்.

குறைந்த வேகத்தில் ஓட வேண்டிய எந்திரத்திற்கு அதிவேக மோட்டர் இணைப்பைக் கொடுத்தால் எந்திரத்தின் உட்பாகங்கள் சிதைந்து போகக்கூடும். கிட்டத்தட்ட அந்த நிலைமைதான் சாரதாநந்தர் அடைந்தது. அதனால்தான் ராமகிருஷ்ணரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்...

சாரதநந்தருக்கு மீண்டும் ராமகிருஷ்ணர் பலவேறு முறைக‌ளில் பயிற்சியளித்து வெகுநாட்களுக்குப் பின்பே தன் இயல்பு நிலையை அடைந்தார் என்று படித்ததுண்டு. அதாவது ராமகிருஷ்ணர் என்கிற மெக்கானிக் சிதைந்த பகுதிகளை சரி பார்த்து மீண்டும் எந்திரத்தை ஓடச் செய்தார்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻


திங்கள், டிசம்பர் 25, 2023

சில சமயங்களில் அவனது மறுமொழி ‘இல்லை’.



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

சில சமயங்களில் அவனது மறுமொழி ‘இல்லை’...

இறைவன் தங்களது பிரார்த்தனைகளுக்கு செவி சாய்ப்பது இல்லை என்று மக்கள் நினைக்கிறார்கள்...ஏனெனில் இறைவன் சில சமயங்களில் அவர்கள் எதிர்பார்த்ததிலிருந்து அல்லது கேட்பதிலிருந்து மாறுபட்டு வேறுவிதமாக பதிலளிக்கிறான்...மனிதர்களின் முழு நிறைவு எனும் இறைவனது விருப்பத்தை அவர்கள் நிறைவேற்றும் வரை இறைவன் மனிதர்களின் விருப்பங்களுக்கிணங்க பதிலளிக்க மாட்டான்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

உலகத்திற்கும் சந்யாஸத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை..

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

உலகத்திற்கும் சந்யாஸத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை.. சம்பந்தமும் இல்லை... சந்யாஸத்தால் துறக்கவேண்டியது உலகத்தை அல்ல, நம் அறியாமையைத்தான். உலகத்தைத் துறத்தல் சந்யாஸமல்ல. ஞானத்தை உணர்தல் சந்யாஸம். இந்த ஞானம் துறவறத்திற்கு இட்டுச்செல்லும். துறவறம் என்பது இங்கு உலகத்தை துறத்தலன்று. அதன் மீதான பற்றைத்துறத்தல். உலகம் எப்போதும் போல அங்கேயே இருக்கும், ஆனால் அதன் மீதான நமது பார்வை மாறிவிடும். ஞானத்தை அடைந்தவன் எதையும் துறக்க வேண்டியதில்லை...அவசியமில்லாததும், மிகுதியானவையும் தானாகவே அறுந்துவிடும். துறவறம் என்பதற்கும் உலகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது அகம் சம்பந்தப்பட்டது. அகத்தூய்மை அடைவது. நானென்பது இந்த உடல்மட்டுமல்ல, ஆத்மாவும் சார்ந்தது என்றுணர்வதனால், நமது அறியாமையும் பற்றும் அகல்கிறது...அதுவே முழுமையான ஆன்மீகம்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஞாயிறு, டிசம்பர் 24, 2023

நினைக்காத நிமிடங்களும்...மறக்காத மனமும்,..!!



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

நினைக்காத நிமிடங்களும்...மறக்காத மனமும்,..!!

ஹேமத்பந்த்‌ :

பபபா பொருட்களைத்‌ தனியாகத்‌ தின்று நானறியேன்‌. பின்னர்‌ என்‌ மீது இக்கெட்ட வழக்கத்தை ஏன்‌ சுமத்துகிறீர்கள்‌..? ஷீர்டி சந்தையையே நான்‌ இன்னும்‌ பார்த்தது இல்லை. இன்றைக்கு, சந்தைக்கு நான்‌ போகவே இல்லை. பின்னர்‌ எங்ஙனம்‌ நான்‌ பருப்பு மணிகள்‌ வாங்கியிருக்க முடியும்‌..? அவைகளை வாங்காதபோது எப்படி நான்‌ உண்ண முடியும்‌..? எனதருகில்‌ உள்ளவர்களுக்குப்‌ பகிர்ந்து கொடுக்காமல்‌ நான்‌ ஒருபோதும்‌ எதையும்‌ சாப்பிடுவதில்லையே..!

பாபா :..அருகிலிருப்பவர்களுக்கு நீர்‌ கொடுப்பது உண்மைதான்‌. ஆனால்‌ ஒருவரும்‌ அருகில்‌ இல்லையென்றால்‌ நீரோ, நானோ என்ன செய்யமுடியும்‌..? ஆனால்‌ நீங்கள்‌ உண்ணும்முன்‌ என்னை நினைவில்கொள்கிறீரா..? எப்போதும்‌ நான்‌ உம்முடன்‌ இருக்கவில்லையா.,? பின்பு நீர்‌ உண்ணும்‌ முன்பாக எதையேனும்‌ எனக்கு அளிக்கிறீரா..?

சுதாமரின்‌ கதை..

மேற்கூறிய கதை சொல்லப்படும்போது ஹேமத்பந்த்‌ அதே மாதிரியான சுதாமரின்‌ கதையை நினைவுகூர்கிறார்‌. அதே தத்துவத்தை இக்கதையும்‌ விளக்குவதால்‌ இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது..

ஶ்ரீகிருஷ்ணரும்‌, அவரது அண்ணனான பலராமரும்‌ சுதாமர்‌ என்ற தோழருடன்‌ அவர்களது குரு சாந்தீபனி முனிவரின்‌ ஆசிரமத்தில்‌ வசித்து வந்தனர்‌. ஒருமுறை கிருஷ்ணரும்‌, பலராமரும்‌ காட்டிற்கு விறகு கொண்டுவருவதற்காக அனுப்பப்பட்டனர்‌. பின்னர்‌ சாந்தீபனியின்‌ மனைவி அதேபோல்‌ சுதாமரையும்‌ மூவருக்குமான கடலைப்‌ பருப்புக்களுடன்‌ காட்டுக்கு அனுப்பினாள்‌.

கிருஷ்ணர்‌, சுதாமரைக்‌ காட்டிடையே கண்டபோது அவரிடம்‌, “தாதா, நான்‌ தாகமாயிருப்பதால்‌ எனக்கு தண்ணீர்‌ வேண்டும்‌” என்றார்‌, அதற்கு சுதாமர்‌ “வெறும்‌ வயிற்றுடன்‌ தண்ணீர்‌ குடிக்கக்கூடாது. சிறிது நேரம்‌ இளைப்பாறுவது நல்லது‌” என்றார்‌. அவர்‌ தன்னிடம்‌ கடலை இருப்பதாகவோ, அதைச்‌ சிறிது அவர்‌ எடுத்துக்கொள்ளலாம்‌ என்றோ கூறவில்லை. கிருஷ்ணர்‌ களைப்பாய்‌ இருந்தமையால்‌ சுதாமரின்‌ மடியில்‌ தலைவைத்துப்‌ படுத்து குறட்டை விட்டார்‌. இதைக்‌ கண்டு சுதாமர்‌ தன்னிடமிருந்த கடலையை எடுத்து உண்ணத்‌ தொடங்கினார்‌. கிருஷ்ணர்‌ திடீரெனக்‌ கேட்டார்‌, “தாதா என்ன சாப்பிடுகிறாய்‌.,? சப்தம்‌ எங்கிருந்து வருகிறது..?”

அதற்கு சுதாமர்‌, “சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது..? நான்‌ குளிரால்‌ நடுங்கிக்கொண்டு இருக்கிறேன்‌. எனது பற்கள்‌ தாளம்‌ அடித்துக்கொண்டிருக்கின்றன. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக்‌ கூட என்னால்‌ திருத்தமாகப்‌ பாராயணம்‌ செய்யமுடியவில்லை” என்றார்‌.

இதைக்‌ கேட்ட சர்வவியாபியான‌‌ கிருஷ்ணர்‌, “மற்றவர்களது பொருட்களை உண்ணும்‌ ஒரு மனிதனைக்‌ கனவில்‌ கண்டேன்‌, அதைப்பற்றிக்‌ கேட்டபோது தின்பதற்கு ஒன்றுமில்லை என்ற பொருளில்‌, ‘என்ன..? மண்ணா தின்பதற்கு உள்ளது..!’ எனக்‌ கேட்டான்‌. அதற்கு மற்றொருவன்‌ ‘அது அங்ஙனமே இருக்கட்டும்‌’ என்றான்‌. தாதா இது ஒரு கனவுதான்‌. நீ எதையும்‌ எனக்கில்லாமல்‌ உண்ணமாட்டாய்‌ என்று எனக்குத்‌ தெரியும்‌. ஆயினும்‌ கனவில்‌ கண்ட ஞாபகத்தில்‌ நீ என்ன உண்கிறாய்‌ என்று நான்‌ கேட்டேன்‌.,?” என்றார்‌.

சர்வவியாபியான கிருஷ்ணரைப்‌ பற்றியும்‌, அவர்தம்‌ லீலையைப்‌ பற்றியும்‌, சுதாமர்‌ எள்ளளவேனும்‌ அறிந்திருப்பாராயின்‌ அவர்‌ அவ்வாறு நடந்துகொண்டிருக்கமாட்டார்‌. எனவே தன்‌ செய்கைக்காக அவர்‌ வருந்தவேண்டியதாயிற்று. அவர்‌ கிருஷ்ணரின்‌ நெருங்கிய நண்பரானபோதும்‌ தமது வாழ்க்கையை அஷ்டதரித்திரத்தில்‌ கழிக்க வேண்டியதாயிற்று.

ஆனால்‌ பின்னர்‌ அவர்‌ கிருஷ்ணருக்குத்‌ தன்‌ மனைவியின்‌ சொந்த உழைப்பால்‌ ஈட்டிய ஒரு பிடி அவலை அளித்தபோது கிருஷ்ணர்‌ மகிழ்ச்சியடைந்து அவருக்கு அனுபவிப்பதற்காக ஒரு பொன்நகரத்தை அளித்தார்‌. மற்றவர்களுடன்‌ பகிர்ந்துண்ணாது தனியாகத்‌ தின்போர்‌ இக்கதையை நினைவில்‌ வைக்கவேண்டும்‌. கடவுளுக்கு முதலில்‌ சமர்ப்பித்து அவைகள்‌ அவரால்‌ திருப்தி அடையப்பெற்ற பிறகே அவற்றை அனுபவிக்க வேண்டும்‌ என்று ஸ்ருதியும்‌ பகர்கின்றது. பாபாவும்‌ நமக்கு அதையே அவர்தம்‌ ஒப்புவமையற்ற வேடிக்கையான வழியில்‌ கற்பித்திருக்கிறார்‌...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻🔥

நிறம் மாறாத பூக்களாக இருக்க பழகு..!



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

நிறம் மாறாத பூக்களாக இருக்க பழகு..!

மனதிலே தோன்றும் எண்ணங்களை மட்டுமே நன்றாகக் கவனித்து வாருங்கள் அந்த எண்ணங்களே சொற்களாக வெளிப்படுகின்றன. நாம் பேசுகின்ற சொற்களை நன்றாகக் கவனித்துப் பேசுங்கள் சொற்களே செயல்களாக மாறுகின்றன. நமது செயல்களை நன்றாகக் கவனித்து வாருங்கள் செயல்களே நம்மை இந்த சமுதாய மதிப்புக்கும் அவ மதிப்புக்கும் ஆளாக்குகின்றன. செயற்கரிய செய்வார் பெரியர் என்கின்றார் வள்ளுவர். வையத்துள் வாழவாங்கு வாழ்பவர் வானத்துள் உறைகின்ற தெய்வத்துள் வைத்துப் போற்றப்படுவர் என்றும் வள்ளுவர் குறிப்பிடுகின்றார். எனவே எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்றாகின்றது. இதற்கு பலர் பயிற்சிகளையும் தருவதைப் பார்க்கின்றோம். இன்னும் வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான டாலர்கள் கொடுத்து இந்தப் பயிற்சியை மக்கள் பெற்று வருகின்றனர். ஆனால் சில காலங்கள் மட்டுமே பயிற்சியும் செய்கின்றனர், அதே போல சில காலங்கள் மட்டுமே எண்ணம், சொல், செயல் ஆகியவற்றை தூய்மையாக வைத்துக்கொள்கின்றனர். பின்னர் காலப் போக்கில் மீண்டும் தனது பழைய நினைவுகளுக்கே சென்று கண்டதையும் போட்டு மனதை காம, குரோத, மோக, லோப, மத மாத்சரியங்களால் மாசினை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அதற்கு இணையம், தொலைக்காட்சி, அலைபேசி போன்ற ஊடகங்களும் உரிய முறையில் பயன்படுத்தப்படாமல் தவறாகப் பயன்படுத்தப்பட்டு தவறான எண்ணங்களை வளரச் செய்கின்றது. நாம் எதை நினைக்கின்றோமோ அதுவாகவே ஆகின்றோம் என்பது த்தவமசி எனும் வேத வாக்கியம். நமது ஆழ் மனதிற்கு அளப்பரிய சக்திகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்..ஆனாலும் என்னால் அப்படி நல்ல எண்ணங்களை வளரச் செய்ய முடியவில்லையே என்று என்னிடம் பலர் புலம்புகின்றார்கள். அவர்களுக்கெல்லாம் அடியேன் சொல்வது குரு சேவை செய்யுங்கள் என்று.

ஒரு உன்னத குருவுடன் தொடர்பில் இருக்கும் போது நமது எண்ணங்கள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. அப்படி கட்டுப்பாட்டுக்குள் வந்த எண்ணங்கள் நல்ல சொற்களாக பரிமளிக்க ஆரம்பிக்கின்றது. நல்ல சொற்களையே பேசும் நாம் விரைவில் பல நல்ல செயல்களைச் செய்ய ஆரம்பிக்கின்றோம். குரு தொடர்பு தொடர்ந்துக் கொண்டே இருக்க வேண்டும். கரும்பில் இருந்து சக்கைகள் பிழியப்பட்டு எப்படி கரும்புச்சாறு எடுக்கப்படுகின்றதோ அப்படி இனிய பேச்சினால் பேசி நமது கருத்தையும் நோக்கத்தையும் உருக்குகின்ற பாவிகளின் பார்வையில் இருந்து நாம் தப்பிக்க வேண்டும். அவர்கள் பார்வையினால் நாம் அழிந்து விடக்கூடாது. அப்படியே இருந்தாலும் நமது மனதிலே தோன்றுகின்ற எண்ணங்கள் நமது ஊழ்வினையினால் ஏற்படுபவையாகும். சஞ்சிதம் பிராரப்தம் ஆகாமியம் ஆகிய மூன்று வினைகள் உண்டு. இந்த வினைகள் நமது பூர்வ ஜென்மத்தின் கர்மாவின் அடிப்படையில் வருபவையாகும். ஆனால் இந்த வினைகளெல்லாம் ஒரு உன்னத குருவின் திருவடி தீண்டியவுடன் நமக்கு தீமைகள் சுட்டுப் பொசுக்கப்பட்டு தூய வடிவினில் வாழ்வைத் தொடர ஏதுவாகின்றது..

தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால் தூயவராகி மேலைத் தொல்கதி அடைவார் என்கிறது கந்த புராணம்....

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...