ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

வெள்ளி, ஏப்ரல் 12, 2024

உண்மையை உணரவே போராடுகிறேன்...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

ஒரு மனிதனின் வளர்ச்சி அவன் தனக்கு வருபவற்றை எப்படி எதிர்கொள்கிறான் என்பதைப் பொறுத்து அமைகின்றது. சாதாரண வாழ்க்கை முறையில், வருகின்ற பலனை ஏற்றுக்கொள்வதில் ஒருவரது விருப்பும் வெறுப்பும் கலக்கின்றன. விருப்பு வெறுப்பு இல்லாவிடில் நமக்கு வருவதை அப்படியே ஏற்றுச் செயல்படும்போது சமநிலை கெடுவதில்லை. ஏனெனில், மனச்சமநிலை இருந்தால் தான் பக்தி செலுத்த முடியும். அறியாமையால் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இறைவனை வணங்குவது உண்மையான பக்தியல்ல. எனக்குத் தரப்பட்டவையெல்லாம் என்னுடையவை என நாம் நினைக்கிறோம். இது என்னுடையது என்ற எண்ணம் நமக்குள் இருக்கின்றவரை அகங்காரம் அகல்வதில்லை. இது இறைவன் தந்தது என்று பிரசாதமாக ஏற்பதும், எல்லாம் இறைவனுடையது என்று நினைத்து வாழ்வதும் சிறந்தது. அந்த நிலையில் நம்மில் பெருகுகின்ற அன்பும், கருணையும் தான் உண்மையான பக்தியாகும்.

பக்தி என்பது கனிந்த அன்பு. அகங்காரம், மமகாரம் (நான் – என்னுடையது) என்ற இரண்டும் இருக்கும் வரை, உண்மையான பக்தி ஏற்படாது. இவை இரண்டும் இருக்கும் வரை வீண் கோப தாபங்கள், மனக்கசப்பு, பிரச்னை என எல்லாமே இருக்கும். உறவின் இரண்டு பக்கங்களிலுமே இவை இருப்பதால் மனச்சமநிலை கெட்டுப்போகிறது. வாழ்க்கையில் வரும் பிரச்னைகள், மன முரண்பாடுகள் ஆகியவை மனச் சமநிலையைக் குலைத்து விடுகின்றன. இப்படிப்பட்ட நிலையில் பக்தி செய்ய இயலாது. எதிர்பார்ப்பும், ஏக்கமும், ஆசையும் இருந்தால் பக்தி செய்ய முடியாது. பசி இருந்தாலும் பக்தி பண்ணமுடியாது...

அர்த்தமற்ற சடங்குகளையும், வழிபாட்டு முறைகளையும் உண்மையான பக்தி என்று சொல்ல முடியாது இறைவா..! என்று நினைக்கும்போதே இந்த உள்ளம் கரைந்து உருக வேண்டும். அவன் கருணையை உணர்ந்து கண்கள் பெருக்கெடுக்க வேண்டும். ஒருவர் எந்த தெய்வத்தை வழிபடுகிறார் என்பது முக்கியமல்ல. எவ்வளவு பக்தியுடனும் உள்ளன்புடனும் பகவானிடத்தில் தன்னை அர்ப்பணம் செய்து கொள்கிறார் என்பதுதான் முக்கியம்.....

நானும் இறைவனும் ஒன்று என்பதை அறிந்து அவனையே தியானிப்பதே சிறந்த பக்தி. “தைல தாரைபோல் உனது உணர்வு முழுவதையும் ஊடுருவி, உனது ஆத்மாவில் சென்று கலப்பதே முழுமையான பக்தி” என்கிறார் ஆதி சங்கரர். காதலாகிக் கசிந்து உருகி இறைவனுடன் ஒன்று சேர்ந்து கலக்கின்றபோது உலகத்திற்கே உன்னத நன்மை ஏற்படும். பக்தியின் சிறப்பு இது.....

பக்தியில் அன்பு கலக்க வேண்டும். அன்புதான் உலக மகா சக்தி என்றார் புத்தர். எல்லாம் இருந்தும் நம்மீது ஒருவர் அன்பு செலுத்தவில்லை என்றால் நமக்கு வாழ்க்கையே வெறுக்கும். இறைவன் நம்மீது அன்பு செலுத்துவதனால் தான் நாம் மூச்சு விட்டுக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகத்திலுள்ள எல்லாமே அன்பு என்னும் பசையினால்தான் ஒட்டப்பட்டிருக்கிறது. இயற்கைச் சக்திகள் அன்பாலேயே இயங்குகின்றன...

ஓம் நமசிவாய..🙏🏻

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...