ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻
அக்ஷர பிரம்ம யோகம் என்றால் என்ன...!!??
அக்ஷரம் என்றால் அழியாதது. மாறாததும் அழிவற்றதுமான பிரம்மத்தைப் பற்றிய ஞானமே அக்ஷர பிரம்ம யோகம். இறைவனும் நானும் ஒன்று என்பதை அறிந்து வாழும் ஞானிக்கு அடுத்த பிறவி இல்லை என்ற கிருஷ்ணரின் உறுதிமொழியே இவ்வத்தியாயமாக மலர்ந்திருக்கின்றது.
இந்த உடல், மனம், புத்தியே நான் என நினைக்கின்ற வரை நான் ஷரப் பிரம்மம். அழியக்கூடிய, வரையறைகளுக்கு உட்பட்டவன். இது அறியாமைக்குரிய நிலை. ஆனால் உண்மையில் நான் அழிவற்றதும் மாறாததுமான அக்ஷரப் பிரம்மமே. இந்த உண்மையை நான் அறியவேண்டுமென்றால், நானல்லாதவற்றை, அழியக்கூடிய தன்மை கொண்ட உடல், மனம், புத்தியை விலக்கி நிறுத்தி, அந்த பிரம்மம் தான் இங்கு நானாக இருந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது என்னும் அக மாற்றத்தை என்னுள் ஏற்படுத்துவது தான் ஒரே வழி. இறைவனாகிய நான் படைக்கப்பட்ட பாத்திரமாக நடிக்கிறேன். அந்த இறைவனே படைப்பவனாக நடிக்கிறான். ஆனால் இரண்டுமே ஒன்றுதான்...
இந்த உண்மையை அறிவது தான் ஆன்மீகம்... ஆன்மாவை நான் என அறிகின்ற பயிற்சி இது. இந்த ஆன்மீகத்தை அறிந்த ஞானிகள் அதனால் தான் இந்த உலகம் ஒரு நாடகமேடை – நாமெல்லாம் நடிகர்கள்...! என்றார்கள். “இந்த ஞானத்தால் என்னை அறிபவன் என்னைச் சேர்ந்தவனாகின்றான்...!” என்கிறார் கிருஷ்ணர். யார் ‘நான் செய்பவனில்லை, நான் அனுபவிப்பவனுமில்லை,ஆகையால் எனக்குச் செயல்களின் பலனில் அக்கறையில்லை’ என்பதை உண்மையாகக் கருத்தில் கொண்டு வாழ்க்கையைச் செலுத்துகிறானோ அவனுக்கு எந்தவித கர்ம பாதிப்பும் இல்லை. ஏனெனில் கர்மாவால் தான் பிறவி ஏற்படுகிறது. இந்தத் தெளிவு ஞானத்தால் ஏற்பட வேண்டும். வெறும் விதண்டாவாதப் போக்கு கூடாது. “எவன் ஞான உபதேசம் பெற்று ஞானத்தை அடைகிறானோ அவன் சம்சார சுழற்சிச் சக்கரத்திலிருந்து விடுபடுகின்றான்” என்று கீதை அழுத்தந் திருத்தமாகக் கூறுகின்றது. கர்ம பாதிப்பு இல்லாதவனுக்கு மறுபிறவி இல்லை. அவன் பிரம்மத்தில் கலந்து, வாழ்கின்றபோதே ஜீவன் முக்தன் ஆகிவிடுகின்றான்...
ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக