ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்.....🙏🏻🙏🏻
உன் வழிகாட்டியாக நான் இருப்பதை மறந்து விடாதே...மறந்தால் உன் நிகழ்கால பாதையும் மறைந்துவிடும் ..,!
ஞானம் என்றால் அறிவு என்பது பொருள். பொதுவாக உலகில் அஞ்ஞானத்தையே அறிவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒருவர் பிறக்கும்போது கூடவே இருக்கின்ற அறிவு தன்னைப் பற்றிய அறிவுதானே ஒழிய மற்றவையெல்லாம் கற்றுக்கொள்வதால் பெற்றுக்கொள்கின்ற புற அறிவு..
உலக விஷயங்கள் அத்தனையையும் கரைத்துக் குடித்திருப்பது தான் அறிவு என நினைப்பது தவறு. அந்த ஆள் மெத்தப் படித்தவர் என்கிறோம். ஆனால் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொண்டிருக்கின்ற பட்டங்களின் பட்டியல் பெரிதல்ல. தன்னை அறிவதே உண்மையான அறிவு. ஆனால் இந்த அறிவைப் பற்றிய எண்ணமே பெரும்பாலோர்க்கு இருப்பதில்லை. “அறியும் தன்னை அறியாமல் அறிவதெல்லாம் அஞ்ஞானம்” என்று கூறினார் ரமணர்...
இந்த உடலைத் தானாக எண்ணிக்கொண்டு புலன் இன்பங்களில் ஈடுபட்டு அவற்றால் வரும் இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் வரை ஒருவனுக்கு மெய்யறிவு ஏற்படுவதில்லை. அதைப்பற்றி அறியும் ஆர்வமும் இயல்பாக ஏற்படுவதில்லை. பல பிறவிகளாகத் தொடர்ந்த தூண்டுதலின் காரணமாகவே ஒருவனுக்குப் பிரம்மஞானத்தைப்பற்றி அறிகின்ற அவா ஏற்படக்கூடும். அறிய வேண்டியதான இந்த மெய்யறிவைப் பற்றியே ஸ்ரீ கிருஷ்ணர் ஞான விஞ்ஞான யோகமாக அர்ச்சுனனுக்கு எடுத்துரைக்கின்றார்.
இவ்வுலக விஷயங்களைப் பற்றிய கல்வியைப் பெறுவதற்கு ஒருவனுக்கு ஐம்புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றின் உதவி தேவை. இவற்றைப் பயன்படுத்தித்தான் உலக விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் ஆத்ம ஞானமாகிய மெய்யறிவை அடைவதற்கு இவை எதுவுமே பயன்படாது. சொல்லப்போனால் இவற்றை ஒதுக்கித் தள்ளி இவற்றிலிருந்து விடுபட்டால்தான் இவ்வறிவைப் பெறவே முடியும்...
இவ்வறிவைப் பெற சப்தப் பிரமாணம் ஒன்றுதான் வழி. அதாவது சொற்களின் வாயிலாக ஒன்றைப்பற்றி அறிவது. வேறு எந்த விதத்தாலும் அறிந்துகொள்ள இயலாத தன்னைப்பற்றி சொற்களால் விளக்குவதால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம் ஒருவன் தன்னை சுத்த சைதன்யமாக அறிந்துகொண்டுவிட்டால் பிறகு அவனுக்கு இவ்வுலகில் அறிந்துகொள்வதற்கு வேறு எவ்வித அறிவுமே தேவையில்லை.
இப்படித் தன்னைப்பற்றி அறிய முற்படுபவர்கள் அரிதிலும் அரிது. அப்படி முயல்பவர்களும் தானாக அறிந்துகொள்ள முடியாது. பிரம்மத்தைப்பற்றி அறிந்த, பிரம்மத்தைத் தான் என்று உணர்ந்துகொண்ட, அந்த பிரம்மத்திலேயே தன்னை மூழ்கடித்துக் கொண்ட, அதைப்பற்றி அறிந்தவர்களின் தொடர்பிற்குள்ளே இருப்பவரான தக்க குருவின் மூலமாகவே ஒருவன் இந்த அறிவைப் பெற முடியும்.
அப்படிப்பட்ட குருவாகவே கண்ணபிரான் நின்று அர்ச்சுனனுக்கு இந்த மெய்யறிவை எடுத்துரைக்கின்றார். தன்னையறிதலாகிய மெய்யறிவைப் பெற முயல்கின்றவனுக்குப் பகவத்கீதை தான் எளிய வழிகாட்டி. ஏனெனில் தெய்வமே மனித குலத்திற்கு நேரடியாக வழங்கிய கொடை இது. இதனை அறிவாகப் பெறுவதை விட அனுபவமாக உணர்தலே மிக உயர்ந்த பயனைத் தரும்....
அறிவு என்பது சேமிப்பு மட்டுமே. அனுபவம் என்பது உணர்வோடு கலப்பது. அனுபவிக்கின்ற நிலை அது. அனுபவத்தைச் சொல்ல முடியாது. உணரத்தான் முடியும். அப்படி உணர்ந்ததை உணர்த்தவும் சொற்கள் மட்டும் தான் வழி. இது தான் ஞான விஞ்ஞானச் சிறப்பு. உணர்த்தவும் உணரவும் கூடிய யோக வழி இது. அதுவே சொல்கின்றது. அப்படிச் சொல்வதை அதுவே கேட்கின்றது.
நீ முழுமையானவன். நீ பிரம்மம்! என்று சொல்வது வேதாந்தம். வேதத்தின் முடிவு இதுதான். வேதங்கள் நம்மைப்பற்றித்தான் எடுத்துச் சொல்கின்றன. நம்மைக் கடவுளாக நமக்குத் தெரியப்படுத்துகின்றன. வேதம் நீ, நீ என்று என்னை நேரடியாகச் சுட்டிக்காட்டுவதற்குக் குருவின் சொற்களே பிரமாணமாக அமைகின்றன.
ஒன்றைப்பற்றி அறிவதற்கு அறிபவர், அறியக்கூடிய பொருள், அறிவதற்கு உரிய கருவி ஆகிய மூன்று அம்சங்கள் தேவை. இங்கு குருவின் சொற்களைக் கேட்கின்ற நான், என் காது, கேட்கும் சத்தம் மூன்றும் என்னைப்பற்றி அறிய உதவுபவை. இவை மூன்றும் ஒத்து இருந்தால் தான் இவ்வறிவு ஏற்பட முடியும்.
ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக